சீமான் மற்றும் கமலைச் சந்தித்துப் பேசினார் சிறீதரன்


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, 17 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள சீமானின் இல்லத்தில நடைபெற்றுள்ளது.

இதன் போது, உலக அரங்கின் சமகால அரசியல் நகர்வுகள், அதிகூடிய சமூக, பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், வாழ்வுரிமைக்காக போராடும் ஈழத்தமிழர்களின் எதிர்கால நலன்கருதி முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலின் போது, நாம் தமிழர் கட்சியின் முதன்மை உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான திரு.சந்திரசேகர், இளம் செயற்பாட்டாளர் திரு.மைக்கேல் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

சிறீதரன் தமிழகத்துக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இலங்கைத் தமிழ் மக்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு, மாகாணங்களுக்குரிய அரசியல் அதிகாரம், மொழி அடிப்படையில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினை என்பன பற்றி பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  

No comments