22 இற்கு மட்டும் ஆதரவு!



அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கத்தை பலப்படுத்தவே நாங்கள் 22ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கிறோம் என்று சிலர் கூறலாம். மக்கள் தரப்பில் முற்போக்கான திருத்தம் என்பதாலேயே நாங்கள் திருத்தத்திற்கு வாக்களிக்கிறோம்.

அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்றுவதன் மூலம் மாத்திரம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாது.

எனவே, உரம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபோதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்தார்.

தாம் ஆராய்ந்த விதத்தில் ஓப்பீட்டளவில் 20 ஆம் திருத்தத்தை விட 22இல் சில நல்ல விடயங்கள் உள்ளன என்றும் இதில் சில மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, 22 ஆவது திருத்தம் தொடர்பில் மிகவும் நேர்மையாக செயற்படுவதாயின் இந்த திருத்தத்துக்கு தாம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க தயாராக உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments