சீனாவல்ல! இந்தியாவே நேசநாடு:ஜனநாயகப்போராளிகள்!



சலுகைகளை அள்ளிவழங்குவதாலோ அல்லது நிவாரணங்களை வழங்குவதாலோ வடகிழக்கிலுள்ள தமிழ் மக்களது மனங்களை சீனா கவரமுடியாதென ஜனநாயகப்போராளிகள் கட்சியை சேர்ந்த கதிர் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களிடையே கருத்து வெளியிட்ட அவர் அண்மைக்காலமாக சீனா வடகிழக்கில் அக்கறை கொண்டுள்ளது போன்று உதவிகளை கிள்ளியெறிந்து வருகின்றது.அவ்வகையில் மீனவர்களிற்கு நிவாரணம்,மக்களிற்கு செஞ்சிலுவை சங்கமூடாக நிவாரணமென தற்போது பல்கலைக்கழக மாணவர்களிற்கென கிள்ளியெறிப்பட்டுள்ளது.

ஆனால் ஒன்றை மட்டும் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.இந்தியா என்றுமே எமது நேச நாடு.இந்தியாவின் நலன்களிற்கு எதிராகவோ இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு எதிராகவோ நாங்கள் என்றுமே செயற்படமாட்டோம்.இதனை சீனாவும் இலங்கை ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ளவேண்டுமெனவும் ஜனநாயகப்போராளிகள் கட்சியை சேர்ந்த கதிர் தெரிவித்துள்ளார்.

எமது விவகாரத்தில் ஜநாவில் இந்தியா குறிப்பிட்டுச்சொல்லத்தக்க முக்கிய நகர்வொன்றை இம்முறை முன்னெடுத்துள்ளது.அவ்வகையில் எமது நன்றிகளை ஏற்கனவே இந்திய அரசிற்கு தெரிவித்துள்ளோம்.

இன அழிப்பில் ஈடுபட்ட இலங்கை அரசினை ஜெனீவாவில் காப்பாற்ற போராடும் சீன அரசு மறுபுறம் தமிழ் மக்களிற்கு அள்ளி தெளிப்பதால் எதனையும் சாதிக்கப்போவதில்லை.

அதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது எதிர்ப்பினையும் தாண்டி  பல்கலைக்கழக நிர்வாகம் சீன அரசிடமிருந்து கிள்ளி வீசப்பட்டவற்றினை பெற்றிருப்பது கவலைக்கும் கண்டனத்திற்குமுரியதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.  


No comments