தாவடியைச் சேர்ந்த வாள் வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் கைது


யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் முக்கியமான சந்தேகநபரைக்  காவல்துறையினரை கைது செய்துள்ளனர்.

கைதானவர் தாவடியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாயில் அண்மையில் இருவேறு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்தியமை கடந்த வருடம் அரியாலை மற்றும் பளையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு உந்துருளியை வழங்கியமை தொடர்பில் ஒருவரும் வன்முறையில் ஈடுபட்ட இருவரும் என மூவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 3 வாள்கள், உந்துருளிகள் என்பன சான்றுப்பொருள்களாக கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐவர் தேடப்படுபவர்கள் என்றும் காவல்துறையினர் கூறினர்.

No comments