திலீபனின் இறுதி நாள்


திலீபனின் சொந்தப் பெயர் பார்த்திபன். திலீபன் பிறந்து பத்தாவது மாதத்திலேயே தாயார் இறந்துவிட்டார். தந்தையார் இராசையா ஒரு ஆசிரியர்.

யாழ்ப்பாணம் ஊரெழுதான் சொந்த ஊர். உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலை, உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை, யாழ் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவன்.

யாழ் வைத்திய பீட மாணவனாக கல்வி கற்கும் வாய்ப்பை உதறிவிட்டு, 1983ல் புலிகள் அமைப்பில் சேர்ந்து கொண்டார்.

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகி ஐந்து நாட்கள் சென்ற நிலையில் பத்திரிகை ஒன்று பின்வருமாறு தெரிவித்தது.

திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வருகின்றது. அவர் கடைசியாக சிறுநீர் கழித்து 48 மணித்தியாலங்களுக்கு மேலாகி விட்டது. இதே நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறுநீர் கழிக்காவிட்டால், அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதிர்ச்சி ஏற்படும்”

ஐந்தாம் நாளன்று இந்தியப்படையின் யாழ் கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் பரார் திலீபனைப் பார்ப்பதற்காக வந்தார்.

அவரைக் கண்டதும் குழுமியிருந்த மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்து ஐந்து நாட்களாகியும் இந்தியா மௌனமாக இருந்தமை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

பராரை புலிகள் இயக்கத்தினர் சார்பில் யோகி வரவேற்றார். திலீபனின் உடல்நிலை தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்.

பரார் முகத்திலும் கவலைக் குறிகள்.”நான் சென்று இது தொடர்பாக மேலிடத்துக்குத் தெரிவிக்கிறேன், உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கிறேன்.” என்று சொல்லிவிட்டுச் சென்றார் பரார்.

ஆறாம் நாள்

கொழும்பில் இந்தியத் தூதரகத்திலிருந்து முக்கியமான ஒருவர் யாழ்ப்பாணம் வருகிறார். புலிகள் இயக்கத்தினருடன் பேச்சு நடத்தப் போகிறார் என்று செய்திகள் அடிபட்டன.

ஆறாம் நாளன்று யோகி, மாத்தையா, அன்ரன் பாலசிங்கம் ஆகியோருன் இந்திய அதிகாரிகள் பேச்சு நடத்தினார்கள். ஆனால் அப்பேச்சுவார்த்தையில் இந்திய தூதரக அதிகாரிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

இந்தியப் படையின் மூத்த தளபதி ஒருவரும், பிரிகேடியர் ராகவன், எயார் கொமாண்டர் ஜெயக்குமார், கடற்படைத்தளபதி ஆகியோருமே பேச்சில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் இந்திப்படை சார்பாக கலந்து கொண்டவர்களால் தீர்க்கமான முடிவு எதனையும் கூறமுடியவில்லை. இந்தியத் தூதர் தொடர்ந்தும் பிடிவாதமாகவே இருப்பதாகத் தெரிந்தது.

புலிகள் இயக்கத்தினர் வேண்டுமென்றே பிரச்சனைக்ளைக் கிளப்புகிறார்கள் என்ற நினைப்புடன் திக் ஷித் பிடிவாதமாக இருப்பதாகத் தெரிந்தது.

இந்திய அதிகாரிகளுடன் பேசியது தொடர்பாக திலீபனிடம் சென்று விளக்கினார் யோகி. “என்ன செய்யலாம்?” என்று கேட்டார் யோகி.

சரியாகப் பேசவே முடியாத நிலையில் துவண்டுபோயிருந்த திலீபன், யோகியிடம் சொன்னது இது:

“எந்த முடிவும் நல்ல முடிவாக இருக்க வேண்டும். ஐந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தரவேண்டும். இல்லையெனில் நான் உண்ணாவிரதத்தைக் கைவிடமாட்டேன்.”

திலீபன் எதிர்பார்த்த முடிவு கிட்டுவதாகத் தெரியவில்லை. ஏழாம்நாள், எட்டாம் நாள், என்று கடந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டன,

மினி பஸ்களிலும், கால் நடையாகவும் நல்லூர் கந்த சுவாமி கோவில் வீதிக்கு வந்து சேர்ந்த மக்கள் வெள்ளம் அலை மோதியது. படுக்கையில் சுருண்டு கிடந்தார் திலீபன். அவரது நாடித்துடிப்பை பரிசோதித்தவர்கள் திகைத்து நின்றனர்.

ஒரு விளக்கு அணையப் போகிறது. எந்த நேரத்திலும் சாவு திலீபனை அணைக்கலாம் என்பது தெரிந்துவிட்டது.

பத்தாம் நாள் அன்று, தன் அருகே இருந்த வாஞ்சிநாதனிடம் தனது ஆசையைக் கூறுகிறார்:

கிட்டுதான் திலீபனை யாழ் மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக பிரபாகரனிடம் சிபாரிசு செய்தவர்.

கிட்டு அப்போது தமிழ் நாட்டில் இருந்தார். அது திலீபனுக்கும் தெரியும். ஆயினும் தனது முடிவை ஊகித்துக் கொண்ட நிலையில் தனது ஆசையைத் தெரிவித்தார்.

யாழ் குடாநாடெங்கும் அடையாள உண்ணாவிரதங்கள் நடந்து கொண்டிருக்க, மாணவர்கள் நீண்ட தூரங்களில் இருந்து ஊர்வலமாக வந்து திலீபனுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் உண்ணாவிரதப் போராட்டங்களும், மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

1986ம் ஆண்டில் வல்வெட்டித்துறையில் இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதல் ஒன்றில் திலீபன் படுகாயமடைந்தார்.

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் திலிபனின் குடல் சிதைந்து போனது.

தீவிர சிகிச்சையால் உயிர் தப்பினார் திலீபன். அதே திலீபனின் உயிர்தான் உண்ணாவிரத மேடையில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

பதினோராம் நாள்

25.09.1987 திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பித்து பதினோராம் நாள். திலீபனின் உண்ணாவிரதத்தை நியாயப்படுத்துவதாக ஒரு சம்பவம் அமைந்தது.

24.09.87 அன்று திருக்கோணமலையில் விறகு வெட்டச் சென்ற எட்டுத் தமிழர்கள் குடியேற்றவாசிகளால் வெட்டிக்கொல்லப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

இதேவேளை இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியில் வட பிராந்தியக் குழுவும் இந்தியாவைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

26ம் திகதி முதல் யாழ் மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும், போக்குவரத்து ஊழியர்களும் வேலை நிறுத்தம் செய்வதற்கு புலிகள் இயக்கத்தினர் ஏற்பாடுகளைச் செய்தனர்.

திலீபன் சுயநினைவை இழந்து கொண்டிருந்தார். திலீபனின் இருகே இருந்த மேடையில் இருந்து ஒலிபரப்பான பாடல் ஒன்று கூடியிருந்த மக்களை நெசிழச் செய்தது. பலர் கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

அந்தப்பாடல் இதுதான்.

“ஓ மரணித்த வீரனே!-உன்

ஆயுதங்களை எனக்குத்தா-உன்

சீருடைகளை எனக்குத்தா-உன்

பாதணிகளை எனக்குத் தா”

இறுதி நாள்

26.06.1987 அன்றுதான் திலீபனின் இறுதிநாள்.

நேரம் அதிகாலை ஐந்துமணி. திடீரென்று மின்சாம் தடைப்பட்டது. (அப்போது யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இருந்தது.)

திலீபன் படுத்திருந்த மேடையில் இருள் சூழ்ந்தது.

மெழுகுவர்த்தியொன்றை மேடையில் எரிய வைத்தனர். பலமாக வீசிய காற்று அதனை அணைத்து விட்டது.

ஐந்து நிமிடங்களுக்குள் மின்சாரம் மீண்டும் உயிர்த்தது.

ஆனால் திலீபன்?

மெல்ல மெல்ல உயிர் பிரிந்து கொண்டிருந்தது.

டாக்டர் சிவகுமார் திலீபனின் அருகே சென்றார். அவரைப் பரிசோதிதுப் பார்த்தார். டாக்டர் சிவகுமாரையே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“திலீபன் நம்மைவிட்டுப் போய்விட்டார்” என்று சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கினார் டாக்டர் சிவகுமார்.

அப்போது நேரம் காலை 10.48 எங்கும் அழுகை ஒலி. திலீபனின் உடல் மேடையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

பிற்பகல் 4.15 மணிக்கு புலிகள் இயக்க இராணுவச் சீருடையுடனும், தொப்பியுடனும் திலீபனின் உடல் அதே மேடைக்குக் கொண்டு வரப்பட்டது.

‘லெப்டினன்ட் கேணல்’ என்ற பட்டம் வழங்கப்பட்டு, மக்களின்; அஞ்சலிக்காக திலீபனின் உடல் வைக்கப்பட்டது.

No comments