வலைப்பாடு பகுதியில் இலங்கை கடற்படை தாக்குதல்!



கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில், அப்பாவி தமிழ் மக்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தின் போது, வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த, 43 வயதுடைய, இராசரத்தினம் நிமால் எனப்படும் 3 பிள்ளைகளின் தந்தையே, படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வருகின்றார்.

நேற்று மாலை 3.30 மணியளவில், தாக்குதலுக்கு உள்ளான நபரின் படகை, அவரது நண்பர்கள் கடலுக்கு எடுத்து சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்கள், மாலை ஆகியும் கரை திரும்பாத நிலையில், குறித்த நபர், கடற் கரைக்கு சென்று அவதானித்துள்ளார். மாலை 6.00 மணியளவில் கரைக்கு திரும்பிய படகு, கடற்படை முகாமுக்கு முன்பாக கரை ஏற்றப்பட்டது. இந்த நிரையில், படகை செலுத்திச் சென்றவர்கள், கடற்படை முகாமுக்கு, பதிவுக்காக சென்றுள்ளனர்.

இதன் போது, தமது படகில் ஏற்றி வந்த மண்ணெண்ணையை, பதிவு மேற்கொள்ளம் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த மண்ணெண்ணை கொள்கலனை அகற்றமாறு, கடற்டை அதிகாரி ஒருவர், அவர்களிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் அதனை அகற்றியுள்ளனர்.

இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற கருத்து முரண்பாட்டின் போது, கடற்படை அதிகாரி ஒருவர், அவர்களை அச்சுறுத்தும் வகையில், துப்பாக்கியை, சுடுவதற்கு ஏற்ற வகையில் தயார் செய்ததாகவும், அதனை ஒளிப்பதிவு செய்ய முற்பட்ட போது, தொலைபேசியை பறித்து, பின்னர் தன் மீது தாக்கிதாகவும், கடற்படையின் தாக்குதலில் படுகாயம் அடைந்த குடும்பஸ்தர் தெரிவித்தார்.

தன்னையும், தன்னுடன் நின்றவர்களையும், கடற்படையினர் துரத்தி துரத்தி தாக்கியதாகவும், இதன் போது தான் படுகாயமடைந்ததாகவும், அவர் குறிப்பிட்டார்.

பின்னர், காயங்களுக்குள்ளான நபர், சுயநினைவிழந்து கிடப்பதை அவதானித்த கிராமத்தவர்கள், அவரை வேரவில் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அதன் பின்னர், படுகாயம் அடைந்த நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது, ஒரு பல் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு பல், விழும் அபாய நிலையில் உள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர். தாக்குதலுக்கு இலக்கான நபருக்கு சொந்தமான இரண்டு கையடக்க தொலைபேசிகளும், கடற்படையினரால் எடுத்த செல்லப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பொதுமகனும், இரண்டு கடற்படை உத்தியோகத்தர்களும், சிகிச்சைக்காக, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

No comments