ரணில் விக்கிரமசிங்கவை தூதுவர் சின்டி மெக்கெய்ன் சந்தித்தார்


ரோமில் உள்ள ஐ.நா உணவு மற்றும் விவசாய நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சின்டி மெக்கெய்ன் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்தார்.

ஐ.நா உணவு நிறுவனங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் என்ற வகையில் தூதுவர் மெக்கெய்ன் இன்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மக்களின் உணவு பாதுகாப்பு மற்றும் ஏனைய மனிதாபிமான தேவைகள் குறித்து கலந்துரையாடினார்.

சந்திப்பைத் தொடர்ந்து தூதுவர் மெக்கெய்ன் தனது டுவிட்டர் செய்தியில்:-

இலங்கையர்களுக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் குறித்து விவாதிக்கவும், அவசர மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செயல்படும் பல வழிகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

தூதுவர் மக்கெய்ன் செப்டம்பர் 25-28 வரை இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையில் அமெரிக்க உணவு உதவித் திட்டங்களை முன்னிலைப்படுத்தவும், தீவு தேசத்துடனான அமெரிக்க அர்ப்பணிப்பு மற்றும் நீடித்த பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும் உள்ளார்.

கொழும்பில் உள்ள சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களைச் சந்திப்பதற்கு மேலதிகமாக, தூதுவர் மெக்கெய்ன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்குடன் இணைந்து மத்திய மாகாணத்திற்குச் சென்று பள்ளிகள், விவசாய ஆராய்ச்சி வசதிகள் மற்றும் சமூக அமைப்புகளுக்குச் சென்று நிவாரணம் பெறுபவர்கள் மற்றும் செயல்படுத்துபவர்களைச் சந்திப்பார். 

No comments