தாய்லாந்தில் குண்டு வெடிப்பு:கோத்தாவுக்கு பிரச்சினையில்லையாம்!



தெற்கு தாய்லாந்தில் மூன்று மாகாணங்களில் 17 இடங்களில் குண்டு வெடிப்புக்கள் , தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தாய்லாந்தில் தற்போது தங்கியுள்ளார். அவர்  தங்கியுள்ள பிரதேசம் அதீத பாதுகாப்பு உள்ள பகுதி என அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தெற்கு தாய்லாந்தின் பட்டானி , நாரதிவாட் மற்றும் யாலா ஆகிய மூன்று மாகாணங்களில் நேற்றைய தினம் புதன்கிழமை தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

குறித்த மாகாணங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகள் , வர்த்தக நிலையங்கள் , எரிவாயு விற்பனை நிலையம் என்பவற்றை இலக்கு வைத்தே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பெண்களை போன்று உடை அணிந்து , பெண்கள் ஓட்டும் மோட்டார் சைக்கிள்களில் வந்த தாக்குதலாளிகள் பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தாய்லாந்தில் பௌத்தர்களின் ஆதிக்கமே காணப்படும் நிலையில் , முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களில் கிளர்ச்சிகள் , வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

தம்மை இரண்டாம் தர குடிமக்கள் போன்று தாய்லாந்து அரசாங்கம் நடாத்துவதாக முஸ்லீம் மக்கள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றனர். அந்நிலையில் தாய்லாந்து இராணுவத்தினரின் அடக்கு முறைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையிலையே நேற்றைய தினம் 17 இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 



No comments