சுன்னாகம் காவல்நிலைய கொலை:சிறை தண்டனை!



சுன்னாகம் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை கொலை செய்து இரணைமடு குளத்தில் வீசிய குற்றச்சாட்டில் ஆறு பொலீஸாருக்கு 10 வருட சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

சுன்னாகம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்ததாக கருதப்படும் வழக்கில் 11 வருடங்களின் பின்னராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வறிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு, 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி புத்தகப்பைகளை அன்பளிப்புச் செய்தவர்களில் ஜந்து பேரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்திருந்தனர். 

கைதானவர்கள் பின்னர் நீதிமன்றில் பின்னர் அளித்த வாக்குமூலத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தினுள் சித்திரவதை செய்வதற்கென பிரத்தியேக அறை ஒன்று உள்ளது. அந்த அறைக்குள் எம்மை அழைத்து சென்றனர். அங்கு ஊரெழு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுத்துறையினர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர், எம்மீது சித்திரவதைகளைப் புரியத் தொடங்கினர்.

எம்மீது மின்சாரத்தை பாய்ச்சினார்கள். கால் பாதங்களில் ஆணிகளை அடித்தார்கள். கைப்பெருவிரலில் குழாய் ஒன்றினை நுழைத்து, அந்த குழாயை மேலே தூக்கிக் கட்டினார்கள். அதன்போது எமது முழுஉடல் பாரமும் விரலிலேயே தூங்கியது. மேசைக்கு குறுக்கே கை, கால்களை இழுத்துக் கட்டி தாக்கினார்கள்.

இவ்வாறு மிக மோசமான சித்திரவதைகளை சுன்னாகம் பொலிஸார், எம்மீது மேற்கொண்ட னர். இதன் போது எமது நண்பனான சுமன் என்பவரை இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி வைத்து ‘உனக்குத் தனிநாடு வேணுமா’ என கேட்டுத் தாக்கினார்கள்.

பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலால் நண்பனின் வாய் மற்றும் மூக்கில் இரத்தம் கொட்டி நண்பன் உயிரிழந்துவிட்டான். அதனை அடுத்து எம்மை அந்த அறையில் இருந்து பொலிஸார் அப்புறப்படுத்திவிட்டனர்.

பின்னர், உயிரிழந்த எமது நண்பனின் உடலை கிளிநொச்சி, இரணைமடு குளத்தினுள் வீசியுள்ளனர். பின்னர் நண்பன் குளத்தில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டதாக மரணச்சான்றிதழ் கொடுத்து, பொலிஸார் அதனைத் தற்கொலையாக மாற்றி விட்டனர்” என தமது வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.

இந்நிலையிலேயே தற்போது அவர்களிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது


No comments