இலங்கையில் 4 மாதங்களில் யானை தாக்கி 34 பேர் பலி!



இலங்கையில்  இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் யானை மற்றும் மனிதர்களுக்கு இடையிலான மோதலில் 34 பேர் மரணித்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 47 காட்டு யானைகளும் உயிரிழந்ததாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மாகாணங்கள் மற்றும் 19 மாவட்டங்களில் உள்ள 131 பிரதேச செயலகப் பிரிவுகளில் யானை மற்றும் மனித மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டில் உயிரிழந்த 47 காட்டு யானைகளில், 13 யானைகள் துப்பாக்கிச் சூடு காரணமாகவும், மேலும் 17 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கியும் மரணித்துள்ளன.

கடந்த 3 வருடங்களில் யானை-மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன. 2019ஆம் ஆண்டில் 407 யானைகள் உயிரிழந்துள்ளதுடன் 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டில், யானை-மனித மோதலால் 112 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் கடந்த வருடத்தில் யானை-மனித மோதலால் 142 பேர் உயிரிழந்ததாகவும் விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் – மிகிந்தலைப்பபகுதியில் மின்சாரம் தாக்கி நேற்று 3 யானைகள் பலியாகின.

புதுக்குளம் பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றின் உரிமையாளரால் சட்டவிரோத மின்சார வேலி ஒன்று அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மோதி குறித்த யானைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments