ஊழியரின்றி பிசுபிசுத்தன அரச அலுவலகங்கள்!



இலங்கையில் அரச செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்காக இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்று நிருபம் ஒன்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் 2 வாரங்களுக்கு இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறைந்தளவான பணிக்குழாமினரை சேவைக்கு அழைக்கும் போது, சுழற்சி முறை மற்றும் வேறு ஏதேனும் பொறிமுறைமையை பின்பற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கட்டாய சேவைக்கு அழைக்கப்படுகின்ற நாட்களில் சேவைக்கு சமூகமளிக்காத பணியாளர்களது பணிநாள், தனிப்பட்ட விடுமுறையில் கழிக்கப்படும்.


அதேநேரம், அனைத்து பணியாளர்களும் இணையவழியில் தொழிலாற்றுவதற்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதேவேளை தனியார் துறை ஊழியர்களை கடமைகளுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி, முடிந்தவரை வீட்டிலிருந்தே கடமைகளை இணையவழியில் முன்னெடுக்குமாறும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.


அதேநேரம் இன்று முதல் 3 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.


எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகப் பணிகளை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்


அனைத்து தனியார் பேருந்துகளுக்கும், அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் குறித்த பேருந்துகளின் சாரதிகள் வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்வதனை தவிர்க்க வேண்டும்.


எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும், அத்தியாவசிய சேவைகளுக்காக, தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments