6ம் திகதி கடை அடைப்பு பிசுபிசுக்கிறது?


6ம் திகதிய ஜேவிபி ஆதரவு தொழிற்சங்கங்களது கடை அடைப்பிற்கு ஆதரவு வழங்க ஒரு பகுதி தொழிற்சங்கங்கள் மறுத்துள்ளன.

குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி முன்னெடுக்க உத்தேசித்துள்ள வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லையென, பல அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தமது சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று  (04) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

உத்தேச வேலைநிறுத்தமானது, தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அல்லவென்றும், பல அரசியல் கட்சிகளின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படவுள்ளதெனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு  அறிவித்துள்ளது.

No comments