ஊடகவியலாளர் நிலக்சன் பதக்கம்:அமரர் தில்காந்திக்கு!

 


யாழ் பல்கலைக்கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” இவ் ஆண்டு அமரர் செல்வி நவரத்னம் தில்காந்திக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.

மொனராகலையில் மரகலை தோட்டம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த அமரர் செல்வி நவரத்னம் தில்காந்தி யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் கல்விகற்று ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்று யாழ். பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அண்மையில் நோயுற்றநிலையில் இயற்கை எய்தியிருந்தார்.

அவருக்கு சமர்ப்பணம் செய்யும்வகையில் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி பட்டமளிப்பு விழா நாளை(3)முதல் மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழாவின்போது கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வருகின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அவரது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இதன்மூலம் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் நான்காவது வருடமாக தற்போது வழங்கப்படவுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதலாவது தக்கப்பதக்கத்தினை செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாரும் 2020 ஆம் ஆண்டு தினேஸ் விஜயதர்சினியும் 2021 ஆம் ஆண்டு செல்வி முனியப்பன் துலாபரணியும் பெற்றுக் கொண்டிருந்தனர்

No comments