நாளை தமிழரசுக்கட்சி கூடுகிறது!


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

ரெலோவின் முன்னெடுப்பில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் கோருவதற்கான எழுத்துமூலமான வரைவினை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் செயற்பாட்டில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டினை எடுப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கடந்த 12ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தின் போது 13ஐ வலியுறுத்தி எழுத்துமூலமாக கோரிக்கையை முன்வைப்பதற்கு இணக்கப்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை தமிழரசுக்கட்சியின் சம்மதத்தினைப் பெறுவதற்கு முனைப்புக்களைச் செய்துள்ளார்.

அதனடிப்படையிலேயே நாளைதினம் கொழும்பில் உள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது, தமிழரசுக்கட்சி 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள் தமது நிலைப்பாடுகளை கட்சித்தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடத்திலும் சம்பந்தனிடத்திலும் வெளிப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments