தப்பியோடி புரண்ட வாகனம்!



யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் இன்றைய தினம்  விசேட அதிரடி படையினரால் துரத்தி செல்லப்பட்ட கன்ரர் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

பொலிஸ் விசேட அதிரடி படையினர் அப்பகுதியில் திடீர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வேளை வீதியில் வந்த கன்ரர் ரக வாகனத்தை சோதனை நடவடிக்கைக்காக மறித்த போது , சாரதி வாகனத்தை நிறுத்தாது , ஒட்டிச்சென்றுள்ளார். 

அதனை அடுத்து பொலிஸ்  விசேட அதிரடி படையினர் வாகனத்தை துரத்தி சென்ற போது , கன்ரர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து , வீதியோரமாக இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி , அருகில் இருந்த வயல் வெளிக்குள் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. 

விபத்தினை அடுத்து கன்ரர் வாகனத்தில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் , சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் , பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. 

அதேவேளை , குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை பொலிஸ் விசேட அதிரடி படையினர் மடக்கி பிடித்திருந்ததுடன் , சாரதியையும் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments