மாவை:சித்தரே நல்ல தலைவர்!



தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய இனத்தினுடைய நன்மை கருதி சிதறிப் போயிருக்கக் கூடிய தமிழர் தரப்புக்களை ஒற்றுமைப் படுத்த வேண்டிய தேவை கருதி அதனுடைய முக்கியத்துவம் கருதி இன்றைக்கு சகல தமிழ் தரப்புகளையும் ஒன்றிணைக்க கூடிய ஆற்றல் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம்; இருப்பதாக நான் கருதுகிறேன். 

ஏனென்றால் எந்த ஒரு விடயத்தையும் நிதானமாகவும் பொறுப்பாகவும் செயற்படுத்தி எல்லோரோடும் நட்போடு பழகக் கூடிய தன்மையும்  இருக்கக்கூடிய சித்தார்த்தன் ஒற்றுமை முயற்சியை தலைமை தாங்கி கொண்டு செல்ல வேண்டும் என்று நான் அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இதனிடையே தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் எதிர்காலத்தில் மாவை இணைவது பெருமகிழ்ச்சி அளிக்கின்றது என  செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஒருமித்த நிலைப்பாட்டை எட்டும் வகையிலே கடந்த சில மாதங்களாக சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.  

இதில் பல கூட்டங்களில் மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்துகொண்டு இருந்தாலும்  இறுதி நேரங்களில் பின்வாங்கும் போக்கினை கடைப்பிடித்து இருந்தார்.  அதற்கான காரணத்தை இப்போதுதான் அவர் தெளிவு படுத்தி இருக்கிறார்.  இதனை ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தால் இன்னும் துரிதமான முன்னேற்றத்தை இவ்விடயத்தில் அடைந்திருக்க முடியும்.  

இருப்பினும் இந்த விடயங்களை  சித்தார்த்தன் அவர்களும் இணைந்தே முன்னெடுத்திருந்தார் என்பதை  மாவை சேனாதிராஜா நன்கு அறிந்திருந்தார்.

சித்தார்த்தன் அவர்கள் தலைமை தாங்கும் ஒருமித்த நிலைபாட்டு முன்னெடுப்பில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவதில் விருப்பத்தை தெரிவித்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. அதை நாம் வரவேற்கிறோம் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


No comments