யாழில் கண்டுகொள்ளவில்லை: மட்டக்களப்பில் தடை!



யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் நேற்றைய தினம் நல்லூரில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நினைகூருவதற்கு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், நேற்று புதன்கிழமை (15) தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை மேஜர் தியாகராசா சரவணபவன், தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணபிள்ளை சேயோன்,  பேரின்பராசா ஜனகன், சுவீகரன் நிசாந்தன் ஆகிய 4 பேருக்கு எதிராகவே தடையுத்தரவு பிறப்பித்துள்ளது என   பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நால்வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவு கூரும் நடவடிக்கையை நேற்று 15ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதிவரை மேற்கொள்ள உள்ளதாக பொலிஸ் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களால் நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொ.ப.கஜநாயக்கா மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்தார்.

இவ்வாறான நிகழ்வு நடந்தால் இதற்கு எதிரானவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவாய்ப்பு இருப்பதனால் மற்றும் நாட்டில் தற்போது கொரோனா நோய் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாகக் இந்த நோய் தொற்று கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார நடவடிக்கையினை நாட்டு மக்கள் கடைப்பிடிக்க அவசியம் இருப்பதனால் இவ்வாறான நினைவு கூறல் நடவடிக்கையை நடைபெறாமல் தடை உத்தரவு ஒன்றை பிரசுரிக்குமாறு மன்றுக்கு அறிக்கை செய்தனர் 


இதன் பிரகாரம் பொலிஸாரினால் மன்றுக்கு கோப்பிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் பொலிஸார் குறித்த இடத்தில் 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையில் மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் மேற்படி நடவடிக்கையினை தடுத்து நிறுத்தும் பொருட்டு தடை உத்தரவை பிறப்பிப்பதற்கு ஏதுக்கள் இருப்பது மன்று திருப்திபடுவதனால் 1979ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச்சட்டகோவையின் பிரிவு (106)1 கீழ் பொலிஸார் கோரியவாறு தடை உத்தரவு பிறப்பித்து கட்டளைபிறப்பித்துள்ளது.


இந்த நீதிமன்ற தடை உத்தரவுனை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

No comments