15 இலட்சம் பெறுமதியான 100 கிலோ தங்கூசி வலைகளுடன் ஒருவர் கைது!!


15 இலட்சம் பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (31) பகல் 12.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைச்சி குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து விற்பனை செய்யப்பட்ட 100 கிலோ மதிக்கத்தக்க தடை செய்யப்பட்ட தங்கூசி வலை மீட்கப்பட்டது.

குறித்த வலையின் பெறுமதி ஏறத்தாழ 15 லட்சம் மதிக்கத்தக்கது எனவும், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபையினர் தெரிவிக்கின்றனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து யாழப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்ட தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபை உத்தியோகத்தர் கு.சங்கீதன், முல்லைதீவு மாவட்ட நீரியல் வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர்களான யோ. பிரசாத், மா. இளவரசன் ஆகியோர் தேடுதல் மேற்கொண்டனர்.

இதன் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் மதிக்கத்தக்க 100 கிலோ மதிக்கத்தக்க தடை செய்யப்பட்ட தங்கூசி வலை மீட்கப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் முல்லைத்தீவு பொலிஸாரிடம் அதிகாரிகளால் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட வலைகள் கிளிநொச்சி அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments