அடக்கத்திற்கு காசு கேட்கும் செல்வம்!

 


வன்னி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கைகளின் போது உறவினர்களிடம் பணம் அறவீடு செய்யப்படுகின்றமை  தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  கேள்வி எழுப்பியுள்ளர்.

இலங்கை அரசின் இத்தகைய செயற்பாடு மக்களிடம் பல்வேறு துயரங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அவர்; அனுப்பி வைத்துள்ளார்.

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொரோனா தொற்றால் இறப்பினை தழுவி கொண்டவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு வவுனியா நகர சபையினால் நிதி அறவிடப்படுகிறது.

மூன்று மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இறப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யும் இடமாக வவுனியா அமைந்துள்ளது.

வவுனியா நகர சபை ஒருவரை தகனம் செய்ய 7 ஆயிரம் ரூபாவினை அறவிட்டு வருகின்றது.

இன்றைய கடினமான சூழலில் வாழும் மக்கள் இந்த தொகையினை வழங்க முடியாத நிலையில் உள்ளனர்.மக்களின் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் வவுனியா நகரசபை கூட்டமைப்பின் வசமுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments