கோத்தா அரசிற்கு கண்டம்:தொழிற்சங்கங்கள் போராட்டம்!

போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஆதரவளித்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட பிரதான இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

சுகாதாரப் பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி அளிக்காமல், மருத்துவமனைகளில் தாதியர்களும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலியாகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது சுகாதார சேவை பணியாளர் மரணமடைந்த சம்பவம் கண்டி பேராதனையில் பதிவாகியிருக்கின்றது.

பேராதனை போதனா மருத்துவமனையின் சுகாதார பணியாளரான 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்திருக்கின்றார். கண்டி - தலாத்துஓயாவைச் சேர்ந்த இந்தப் பெண் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டிருந்த நிலையில் 21ஆம் திகதி பி.சி.ஆர் செய்யப்பட்டபோது தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே அவர் நேற்று உயிரிழந்திருக்கின்றார். கண்டி மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சுகாதாரப் பணியாளர்களை ஓரங்கட்டி, மருத்துவர்களின் பெற்றோர், பிள்ளைகள், வீடுகளில் பணிப் பெண்களாக உள்ளவர்கள் எனன் பலருக்கும் சுகாதார அமைச்சினால் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் இன்று காலை முதல் நீண்டவரிசை காணமுடிந்தது. இந்த வரிசையில் சமூக இடைவெளிக்கூட கடைபிடிக்கப்படவில்லை.

சுகாதாரப் பணியாளர்களே இன்று கொரோனா தொற்று நோயாளர்களுக்கு அருகில் நின்று பணிசெய்கின்றார்கள். இந்நிலையில் அவர்களை ஒதுக்கித்தள்ளி, மருத்துவர்களின் உறவினர்களுக்கும், உறவுகளுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டிருப்பதை நாங்கள் எதிர்க்கின்றோம். முதலாவது சுகாதார பணியாளர்கள், சிகிச்சை நிலையங்களில் உள்ள பணியாளர்கள், பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு தடுப்பூசி அளித்திருக்க வேண்டும்.

அதனைவிடுத்து, மருத்துவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு சென்றால் நாட்டிலுள்ள கொரோனாவை ஒழிக்க முடியுமா? மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பினை அரசாங்கம் புறந்தள்ளிவிட்டது.

பொதுசுகாதார பரிசோதகர்கள், மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை தாதியர் சங்கம் என அனைவரும் ஒன்றிணைந்து இதற்கெதிராக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

சுகாதார அமைச்சால் எமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு தீர்வு தரும்வரை சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கும்படியான அறிவிப்பினை அரசாங்கம் 24 மணிநேரத்தில் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.     

No comments