படையினர் வீதியை மூடினர்:மக்கள் திண்டாட்டம்!




எள் என்றால் எண்ணெயாக நிற்கும் இலங்கை இராணுவம் பருத்தித்துறை-கொடிகாமம் வீதியை மூடியுள்ளதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் பரிதாபம் நடந்துவருகின்றது.

கொடிகாமம் - பருத்தித்துறை பிரதான வீதி மூடப்பட்டுள்ளமையால் , குறித்த வீதியினால் பயணம் செய்யும் பலரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன் , பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.  

கொரோனா தொற்று காரணமாக கொடிகாமம் வடக்கு மற்றும் மத்தி ஆகிய இரு கிராம சேவையலாளர் பிரிவு கடந்த 5ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் குறித்த இரு கிராமங்களும் அமைந்துள்ள பகுதியூடாக செல்லும் கொடிகாமம் - பருத்தித்துறை பிரதான வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த வீதியில் கடமையில் இருக்கும் இராணுவத்தினரே  வீதியூடான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளனர்.   

அதனால் தென்மராட்சி , வடமராட்சி பிரதேசங்களுக்கு சென்று வருவோர் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் , பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து வேறு வீதிகளூடாக பயணிக்கின்றனர்.   

இது குறித்து சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது , " பிரதான வீதிகளினூடான போக்குவரத்தினை தடை செய்யவில்லை எனவும் , குறித்த இரு கிராமங்களுக்குள் உட்செல்ல, வெளியேற மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


No comments