மன்னாரில் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்!


மன்னார் பள்ளிமுனையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(13) இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நேற்று நள்ளிரவு இரணை தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக தெரிய வருகின்றது. மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து படகு ஒன்றில் 4 மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கடற்தொழிலுக்குச் சென்றுள்ளனர். 

கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் பள்ளிமுனை கடற்கரையில் உள்ள கடற்படையினரின் சோதனை மற்றும் பதிவுகளை மேற்கொண்ட நிலையில் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இதன் போது நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இரணை தீவு கடற்பரப்பில் வைத்து கடல் றோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த படகை நிறுத்தி சோதனையிட்டதோடு தேவையற்ற காரணத்தை கூறி குறித்த 4 மீனவர்களையும் கூமார் 3 மணி நேரம் கடலில் தடுத்து வைத்ததாகவும், பின்னர் கடற்படையினர் கொண்டு வந்த தடியினால் மீனவர்களை தாக்கியதோடு, மீனவர்களின் தொலைபேசி மற்றும் டோச் லைட் போன்றவற்றை பறித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பள்ளிமுனை கடற்படை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

No comments