விஜயதாசவை ஊழ்வினை பயன் உறுத்துகின்றது!



முன்வினையின் பயனையே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தற்போது அனுபவிக்கிறார்.அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் நீதியமைச்சர் பதவி வகித்துக்கொண்டு ராஜபக்சர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜக்சவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அச்சுறுத்தியதாக குறிப்பிடப்படும் விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருடர்களுக்கு தண்டனை வழங்குவதாக குறிப்பிட்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்தது. இவ்வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு இவ்வாறானவர்களும் ஒரு காரணியாகும். நீதியமைச்சர் பதவி வகித்துகொண்டு ஒரு தரப்பினருக்கு சார்பாக செயற்பட்டமை குறித்து இவரே பல முறை பகிரங்கமாக ஊடகங்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது அரசியல் செயற்பாட்டை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தமிழர்கள் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள் அதற்கு இடமளிக்க கூடாது என்று போலியான குற்றச்சாட்டை முன்வைத்து அரசாங்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது. 69 லட்ச மக்களும் பொய்யான வாக்குறுதிகளினால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

இனியாவது பெரும்பான்மை மக்கள் உண்மை தன்மையை புரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments