கர்தினால் வீடு செல்வது நல்லது:மனோ கணேசன்!

 


2019 உயிர்த்த ஞாயிறு படுகொலை தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி  கத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்று தருவதாக சொல்லி, ஆட்சி மாற்றம் ஏற்பட பிரதான ஒரு காரணகர்த்தாவாக அமைந்த கர்தினால் மல்கம் ரஞ்சித், இப்போது திக்கற்று  நிற்கிறார் என தெரிவித்துள்ளார் மனோகணேசன் 

இப்போது, "கடந்த அரசும் ஏமாற்றி விட்டது". "இந்த அரசும் ஏமாற்றி விட்டது" எனக் கூறுகிறார். 

ஆனால், குண்டு தாக்குதல் தொடர்பில் கடந்த அரசில் பொறுப்பு தவறியவர்கள், இன்று இந்த அரசில்தான் இருக்கிறார்கள் என்பது கர்தினாலுக்கு மறந்து விட்டது.  

அப்புறம், குண்டு தாக்குதல், மத பின்புலம் கொண்டதல்ல, அது "அரசியல் பின்புலம்" கொண்டது என முதல்நாள் சொன்னார். 

அடுத்த நாளே, அதை "சர்வதேச அரசியல் பின்புலம்" என  திருத்தி சொன்னார். 

நியாயம் கிடைக்காவிட்டால், "சர்வதேச விசாரணை"யை கேட்பேன் என்றும் ஒருநாள் சொன்னார். 

இதேமாதிரி, இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் சார்பில், ஆயர் ராயப்பு "சர்வதேச விசாரணை" கோரிய போது, அதை இவர் கொழும்பிலிருந்து கண்டித்தார். 

கொழும்பு மறை மாவட்ட ஆயர் மல்கம், குண்டு வெடிப்பின் பின் ஏற்பட்ட சூழலில், தன்னை இலங்கை கத்தோலிக்கர்களின் ஒட்டு மொத்த தலைவராக காட்டிக்கொண்டார். 

இந்த கொழும்பு மறைமாவட்ட ஆயர் மல்கம், பேராயராகவும் அறியப்பட்டுள்ளார். 

அதேபோல் யாழ் மறைமாவட்ட ஆயரும், பேராயராக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கலத்துரையாடல் திருச்சபையில் நடைபெறுகிறது.   

எனது மாவட்டம் கொழும்பு கொச்சிக்கடையிலும், மட்டக்களப்பிலும் கொல்லப்பட்ட அப்பாவிகள், கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, அவர்களில் அதீத பெரும்பாலோர் தமிழர்கள் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். 

இந்த கத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்றுத்தந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவேன்  என்று சூளுரைத்து, ஆட்சி மாற்றத்துக்கு உதவியவர்,  கர்தினால் மல்கம்.

இன்று உள்நாட்டு விசாரணையால், நீதியை பெற்று தர முடியா விட்டால், சர்வதேச விசாரணையின் மூலமாகவாவது நீதியை பெற்றுத்தர, சொல்லியப்படி  கர்தினால் முன்வர வேண்டும். 

இன்று கர்தினால் மல்கம், சர்வதேச விசாரணை கோரினார் என்பதற்காக, மறைந்த மன்னார் மறை மாவட்ட ஓயுவுநிலை ஆயர் ராயப்பு யோசெப்பு மீண்டும் எழுந்து  வந்து கண்டிக்க மாட்டார். வாழ்த்தத்தான் செய்வார். 

ஆகவே, சர்வதேச விசாரணை தேவை. இல்லா விட்டால், தோல்வியை ஏற்று கர்தினால் மல்கம் ரந்சித் ஒதுங்க வேண்டும் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.


No comments