ஐ.நாவில் பெயரளவில் சுயநிர்ணய உரிமை இருப்பது பயன்தராது - கஜேந்திரகுமார்


ஐ.நா.கட்டமைப்புக்கள் பெயரளவில் சுயநிர்ணய உரிமையை வைத்திருக்கும் வரையில் அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான திட்டமிடல் தொடர்பான பொது விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வின் பிரிக்க முடியாத உரிமையான சுயநிர்ணய உரிமையை பெற்றிட நியாயமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள உரித்துடையவர்கள் என  வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான செயல்திட்டம் வெளிப்படுத்துகிறது.

இலங்கை அரசால் இழைக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் மத்தியில், தமிழ்த்தேசமானது  தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்காக போராடிவருகிறது. இலங்கை அரசானது வன்முறையை கட்டவிழ்த்தபோது, அதிலிருந்து தம்மை பாதுகாக்கவே தமிழர்களும் ஆயுதவழி போராட்டத்தை எடுக்க நேர்ந்தது.

2002 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இரண்டு தரப்பினருக்கும் போர்முனையில் ஏற்பட்ட படைவலுச்சமநிலையே, இதற்கு அடிப்படை காரணமாகும்.

தமிழர் தாயகத்தின் ஏறத்தாழ 75 சதவீதமான நிலப்பரப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளும் ஆளுகைக்குள்ளும் இருந்த அப்போதைய களநிலை யதார்த்தத்தின் அடிப்படையில், ஈழத்தமிழரின் தேச அந்தஸ்தும் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்டு, ஆகக் குறைந்தது இந்த அரசின் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு ஒரு சமஷ்டி ஆட்சி முறைமை உருவாகும் எனவே எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதன் மூலமாக ஈற்றில் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய ஏதுநிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் நிகழ்த்தப்பட்டதோ  முற்றிலும் வேறுபட்ட ஒரு நிகழ்வே. இந்த அரசானது, சர்வதேசத்தின் பல்வேறு தரப்புகளின் ஆதரவுடன், இராணுவ நடவடிக்கையையே தமது தீர்வாக முன்வைத்தது.

இலங்கை அரசின் தொடர் அடக்குமுறைகளேரூபவ் தமிழர்கள்ரூபவ் தம்மீது  இந்தஅரசு இனப்படுகொலையை புரிந்தது என குற்றஞ்சாட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையும் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை பெயரளவில் மட்டும் கருதியிருக்கும் வரை, சுயநிர்ணய உரிமைக்காக போராடுகின்ற அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும், தொடர்ந்தும் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள் என்பதை இங்கு வெளிப்படுத்திக்கொள்கிறேன் என்றார்.

No comments