அரசியல் கைதிகள் மீது புதிய வழக்குகள்?





இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை நிரந்தரமாக உள்ளே தள்ள இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.

இதனையே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில்,சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பதில் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் சரத்துகள் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டவரைவு தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை எனவும், அது மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், இலங்கை தெரிவித்துள்ளது.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய, சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு, மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியன, குறித்த சட்ட வரைவு இந்த நேரத்தில் தேவையற்றது என, வலியுறுத்தியதன் அடிப்படையில், குறித்த சட்டவரைவு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், இலங்கை தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதும், சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு முரணானதுமான அறிக்கைகளை முழுமையாக நிராகரிப்பதாகவும், இலங்கை அரசாங்கம், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இவ்வாறு தெரிவித்துக்கொண்டு சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளான முன்னாள் போராளிகளிற்கு எதிராக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய இலங்கை முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


No comments