தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசின. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்கவில்லை.

இந்நிலையில், இந்தப் பேரவையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைந்து பயணிக்குமா? என்று அந்தக் கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரனிடம் ஊடகம் ஒன்று கேட்டபோது:-

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி வெற்றிகரமாக மக்கள் எழுச்சிப் போராட்டமாக இடம்பெற்றது. இதற்கு தமிழ் அரசுக் கட்சியும் ஆதரவளித்தது.

ஆனால், இந்தப் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் விதமாக பச்சைத் துரோகத்தனமாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

இன்று தமிழ் மக்களுக்கு பலவீனமான ஐ.நாவின் அறிக்கை ஒன்று வந்துள்ளது என்றால் அதை முழுமையாக தமிழ் அரசுக் கட்சிதான் ஏற்க வேண்டும்.

சுமந்திரனின் இந்தத் துரோகத்தனத்தை நியாயப்படுத்தும் விதமாகவே எம்.கே.சிவாஜிலிங்கமும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தரப்புக்கள் கூடித்தான் இந்தப் பேரவையை அமைக்கின்றன. இது முழுக்க முழுக்க கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றி தாங்கள் செய்யும் துரோகத்தை மறைக்கும் விதமாகவே நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.

தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அந்தக் கூட்டிலிருந்து கொண்டு கோட்டாபயவை பாதுகாப்பதற்காக நாடகமாடுகிறார் என்பதே எமது கருத்து என்றார்.

No comments