நினைவுத் தூண் தகர்ப்பு; இலங்கை தூதரகம் முற்றுகை!

 


முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து வரும் 11ஆம் தேதி, இலங்கை தூதரகம் முற்றுகையிட முடிவெடுத்துள்ளனர்.

இதில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும், தமிழின உணர்வாளர்களும், மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அழைப்பில்..

தமிழ் இனப்படுகொலையை பிரதிபலிக்கும் முகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சிங்கள பேரினவாத அரசின் இந்த நடவடிக்கை, தமிழர் இன அழிப்பு போர் இன்னும் முடியவில்லை என்பதை தான் வெளிப்படுத்துகிறது.  

தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து, தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாக தமிழீழம் அமையும் என்ற லட்சிய கனவோடு, போராட்டத்தை முன்னெடுத்தவர் தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன்.  

சிங்கள ராணுவம், ஆயுதமேந்திப் போராடிய தமிழர்களை மட்டுமல்லாது, அப்பாவி மக்களையும் கொன்றொழித்தபோதும், சிங்கள மக்களைக் கொல்லுங்கள் எனும் உத்தரவு தேசிய தலைவர் பிரபாகரனிடம் இருந்து வந்தது கிடையாது. இது தான் தமிழர்களின் அறம். 

ஆனால், தேசிய தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் உள்பட ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகளையும், சிறுவர்களையும், ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது சிங்கள ராணுவம். தமிழர்களின் வீட்டையும், நிலங்களையும் அபகரித்து, தமிழ் பெண்களை சூறையாடி உள்ளிட்ட பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றியது சிங்கள பேரினவாத அரசு. 

இந்த தமிழின படுகொலையை பிரதிபலிக்கும் வகையில், கடந்த 2018ஆம் ஆண்டு,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. 

இதனை பொறுத்து கொள்ள முடியாத ராஜ பக்சே, தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு,  முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இரவோடு இரவாக இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளது. இதனை அறிந்து மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்ட போது, அவர்களை சிங்கள ராணுவமும், காவல்துறையும் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, நினைவுத்தூபி அகற்றப்படவேண்டிய ஒன்று,  மீறினால் மிரட்டல்களை கையாளுவோம் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சிங்கள பேரினவாத அரசின் இந்த செயல், ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஈழத்தில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை சிங்கள பேரினவாத அரசு, பலிவாங்கிய நிலையில், இதுவரை நியாயம் கேட்டு தமிழர்கள் போராடி வருகின்றனர். இப்படியான நிலையில், தமிழர்கள் மீதான வன்மமும், ஆத்திரமும் துளியளவும் அடங்காத சிங்கள அரசு, நினைவுச்சின்னங்களை தரை மட்டமாக்கியுள்ளது. தமிழர்களின் நினைவுச் சின்னங்களை, சிங்கள அரசு இடிப்பது ஒன்றும் புதியதல்ல. 

ஏற்கனவே, தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. தமிழர்களின் கல்லறைகள் இடிக்கப்பட்டது. தமிழர் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட ராணுவ முகாம்கள், ஈழத் தமிழர்களைக் கண்காணிப்பு வளைத்துக்குள் தள்ளி இருப்பது மட்டுமின்றி, ராணுவத்தினரின் அத்துமீறல்களும் தொடருகின்றன.


 தமிழ் இளைஞர்களை சித்ரவதைகளுக்கு உள்ளாக்குவதும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதும், அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன.

தெருக்களுக்கு சிங்களப் பெயர்களைச் சூட்டுதல், தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களைப் பறித்துக்கொண்டு, அவற்றில் பவுத்த விகாரைகளை எழுப்புதல், தமிழர்களின் ஆலயங்களை அழித்து ஒழித்தல் போன்றவற்றின் மூலம் தமிழ் இனத்தின் பண்பாட்டு அடையாளங்களை, சுவடு தெரியாமல் அழிக்கின்ற வேலைகளை சிங்கள பேரினவாத அரசு, ராணுவத்தின் துணை கொண்டு செயல்படுத்தி வருகின்றது. 

கடந்த 2019ல், முல்லைத் தீவில்,  பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயிலை சிங்கள ராணுவ உதவியுடன் கைப்பற்றிக் கொண்ட சிங்கள பவுத்த பிக்குக் கொலம்ப மேதாலங்க தேரர் என்பவர், அந்த ஆலயத்தை 'குருகந்த் ரஜமஹா' எனும் பவுத்த விகாரையாக மாற்றிக் கொண்டார். 

பிரபாகரன் இனவாதி, பாசிசவாதி, போர் முடித்து விட்டது, ஈழத்தில் அமைதி திரும்பி விட்டது என்றெல்லாம் பேசியவர்கள், இதற்கென்ன பதில் சொல்ல போகிறார்கள்.  

ஒன்றை மட்டும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் கல்லறையே இருக்க கூடாது என்று நினைக்க கூடிய சிங்கள பேரினவாத அரசு, அங்கு தமிழர்களை சுதந்திரமாக இருக்கு விடுமா என்பதை, சிங்கள அரசுக்கு வாக்கலத்து வாங்கியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் ராஜ பக்சே ஆண்டாலும், வேறு யார் ஆண்டாலும், தமிழர்களுக்கு நிலையான வாழ்வும், சுதந்திரமும் கிடைக்காது. 


இலங்கை அரசால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் போக, எஞ்சி உள்ள தமிழர்களை, கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுத் தாக்குதல்கள் மூலம் அழித்து ஒழிப்பதில் இலங்கை அரசும், பவுத்த மதவாதக் கும்பலும் கரம் கோத்துக்கொண்டு செயல்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

எனவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தரைமட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வரும் 11 ஆம் தேதி காலை 10 மணியளவில் இந்த கண்டன  முற்றுகை ஆர்ப்பாட்டத்தை, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கிறது. 

இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நானும் பங்கேற்கிறோம். ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும், தமிழின உணர்வாளர்களும், மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்,என தெரிவித்துள்ளார்.

#srilankaMonumentdemolition #yaalMonumentdemolition #velmurugan #protest #srilankaempassy

No comments