தமிழகத்தில் போராட்டம்:பிஜேபிக்கு தலையிடி?



நடுக்கடலில் இந்திய மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், மீனவர்களின் உடலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யக் கோரியும், உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியும் இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை மறுதினம் 24 ஆம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளர் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம் ஆகிய நான்கு மீனவர்களும் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் நெடுந்தீவுக்கும் கச்சதீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்பமுயன்ற போது இலங்கைக் கடற்படை ரோந்து கப்பல் மீது மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது.

இதனால் படகில் இருந்த நால்வரும் நடுக்கடலில் மாயமாகினர். மாயமான மீனவர்கள் கடந்த இரண்டு நாள்களாக  தேடி வந்த நிலையில் நான்கு மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்க தலைவர்கள் தங்கச்சி மடத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உயிரிழந்த நான்கு மீனவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டு தமிழக மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டு வரும் இலங்கை அரசை கண்டித்தும் நாளை மறுதினம் 24 ஆம் திகதி முதல் கடலோர மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து தங்கச்சி மடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்துள்ளனர்.

No comments