நிலவில் மண், கல் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்த சீன விண்கலம்!


சீனாவின் சாங்கே-5 (Chang’e-5) விண்கலம் நிலவில் இருந்து கல், மண் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது.

இந்த விண்கலம், நெய் மங்கோல் என்ற பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் தரையிறங்கியது.

அமெரிக்காவின் அப்பலோ மற்றும் சோவியத் ரஷ்யாவின் லூனா திட்டங்கள் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன், நிலவில் இருந்து மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர் இப்போது சீனா நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளது.

இந்த மாதிரிகள், நிலவின் மண்ணியல் மற்றும் ஆரம்ப கால வரலாறு குறித்து அறிந்துகொள்ள உதவக்கூடும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 24ஆம் திகதி ஏவப்பட்ட சங்கே – 5. இந்த விண்கலம் கடந்த 1 ஆம் திகதி நிலவை சென்றடைந்தது. பின்னர் விண்கலத்தில் இருந்து லேண்டர்அசென்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கு பாறைதுகள்கள், மண் மாதிரிகளை சேகரித்த லேண்டர்அசென்டர் நிலவு பரப்பிலிருந்து கடந்த 3ஆம் திகதி புறப்பட்டு, நிலவைச் சுற்றிக்கொண்டிருந்த ‘சேஞ்ச்5’ விண்கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இந்த விண்கலம் மொத்தம் இரண்டு நாட்கள் மட்டுமே நிலவில் செலவழித்தது.

நிலவைச் சுற்றி வந்துகொண்டிருந்த சேஞ்ச்5 விண்கலத்தின் பாதை பூமியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பப்பட்டது. விண்கலத்திலிருந்த 4 என்ஜின்கள் 22 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டதில், அதன் சுற்றுவட்டப் பாதை பூமியை நோக்கித் திரும்பியது. இந்த விண்கலம் வியாழக்கிழமை அதிகாலை வேளையில் பூமிக்கு திரும்பியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்து வந்த 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.  ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய 2 நாடுகள் நிலவின் மாதிரிகளை சேகரித்து வந்து ஆராய்ச்சி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments