பிள்ளையானின் தவிசாளர் அடாவடி?


வாழைச்சேனை பிரதேசசபையில் பிரதி தவிசாளரை, பெண் தவிசாளர் கட்டியணைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் தோல்வியடையும் என்பதால், வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்காமலிருக்க தவிசாளர் பல பிரயத்தனங்கள் மேற்கொண்டு வருகிறார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆளுகையிலுள்ள இந்த சபையில் பெரும்பாலான உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை எதிர்க்கிறார்கள். வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்க தம்முடன் பண பேரத்திற்கும் பிள்ளையானின் சகோதரர் முயன்றதாக எதிர்க்கட்சிகள் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் கொரோனா நிலவரத்தை காரணம் காட்சி சபையை காலவரையின்றி தவிசாளர் ஒத்திவைத்தார். அத்துடன், உறுப்பினர்கள் சபை அமர்விற்கு சென்றபோது, பொலிசாரை நிறுத்தி அச்சுறுத்த முற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

இந்த நிலையில் கிழக்கு உள்ளூராட்சி ஆணையாளரிடம் எதிர்க்கட்சிகள் வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், 7 நாட்களில் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தார்.

இதனடிப்படையில் இன்று சபை கூடியது.

தமக்கு ஆதரவானவர்களை அழைத்து இரகசியமாக வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வருவதற்கு முன்னதாக ஆளுங்கட்சியினர் கூடி வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க தயாராக இருந்துள்ளனர். ஏனைய உறுப்பினர்கள் நுழைய முடியாதவாறு வாயில்கள் அடைக்கப்பட்டிருந்தன.

எதிர்க்கட்சிகள் பலவந்தமாக கதவை திறந்து கொண்டு நுழைய முயன்ற போது, தவிசாளர் ஓடிவந்து, பிரதி தவிசாளர் உள்நுழைய முடியாதவாறு கட்டிப்பிடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்துகின்றன. பின்னர் எதிர்தரப்பினர் உள்நுழைந்து, தவிசாளரின் பிடியிலிருந்து பிரதி தவிசாளரை இழுத்து எடுத்தனர்.

எதிரணியினரும் உள்நுழைந்ததும், அங்கு களேபரம் ஏற்பட்டது.

தவிசாளர் தனது ஆடைகள் கிழிக்கப்பட்டதாக, தாக்கப்பட்டதாக கூறி வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார்.

தமது தரப்பினரை வைத்து, தவிசாளரே தனது ஆடையை கிழித்து விட்டு நாடகம் ஆடுவதாக எதிரணியினர் குற்றம்சுமத்தியுள்ளனர்.

No comments