தோல்வியான உதாரணங்களால் இலங்கையின் பொறுப்புக்கூறல் வரலாறு நிரம்பியுள்ளது.


உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க இலங்கை அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதீட்டை இலங்கை அரசாங்கம் இன்று சமர்ப்பிக்க உள்ள நிலையில் சர்வதேச மன்னிப்பு சபை நேற்றைய தினம் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு இடைக்கால நீதி நடைமுறைக்கு வழிவகுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் இருந்து கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டது.

இதனையடுத்து காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் கரிசனை ஏற்பட்டுள்ளதாக மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இவற்றுக்கான பாதீடு மீண்டும் அறவிடப்படலாம் என்றும் மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

மோதலினால் மோசமாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உறவினர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள், அவர்கள் நீண்டகாலமாக போராடிய உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கு இந்த இரண்டு அலுவலகங்களும் பொறிமுறைகளாக இருந்தன.

எனவே நாட்டின் வரலாற்றில் இந்த இருண்ட காலத்தின் அத்தியாயத்தை மூடுவதற்கு இரு நிறுவனங்களும் திறம்பட செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள தீர்வை வழங்குவதற்காக அந்த இரண்டு அலுவலகங்களுக்கும் போதுமான நிதியை பாதீட்டின் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒதுக்கவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் உள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக அப்போதைய அரசாங்கத்தால் முறையே 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சட்டத்தின் பிரகாரம் காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு தொடர்பான அலுவலகம் என்பன நிறுவப்பட்டன

2019 நவம்பரில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்குவதை நிறுத்தி அவர்களை மேலும் நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

காணாமல்போனோர் அலுவலகத்தின் பணிகள் இலங்கை பாதுகாப்பு தரப்புக்கு எதிராக போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க உதவும் என்ற அச்சத்தில் அலுவலகத்தை நிறுவும் சட்டத்தை மீளாய்வு செய்யப்போவதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறை மூலம் 'நிலையான அமைதியை' அடைவதற்கான ஒரு தேசிய முயற்சியைத் தொடரும் என்று, ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தில் இருந்து விலகியதன் பின்னர் இலங்கை அரசாங்கம் கூறியது.

உண்மை நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, குற்றவாளிகளை பொறுப்புக்கூறவைத்தல் போன்றவற்றின் தோல்வியான உதாரணங்களால் இலங்கையின் உள்நாட்டு பொறுப்புக்கூறல் வரலாறு நிரம்பியுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள உள்ளூர் பொறிமுறைகளின் திறமையான செயல்பாட்டைத் தடுப்பதற்கான நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் சொந்த உறுதிப்பாட்டுடன் இது முரண்படும்.

எனவே, குறித்த இரண்டு அலுவலகங்களுக்கும் போதுமான வளங்களை அளித்து அவற்றை முழுமையாக இயக்கச்செய்யவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

No comments