மன்னாரில் இதுவரை எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை!

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் உரிய நேரத்திற்கு வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தலை பொறுத்தவரையில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை என மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் நிலையமான மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் மாவட்டத்தில் இம்முறை வாக்களிக்க 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் புத்தளத்திலிருந்து இடம்பெயர்ந்த 5 ஆயிரத்து 807 வாக்களர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புத்தளத்தில் 12 விசேட வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெயர்ந்த மன்னார் மாவட்ட வாக்களர்கள் வாக்ளிக்க முடியும்.

மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் நிலையங்கள் 15 அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கடமைகளில் ஆயிரத்து 202 உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை 8 மணி முதல் 10 மணி வரையான நேரப்பகுதிக்குள் 76 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைக்கு 130 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் தேர்தலை பொறுத்த வரையில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை” என மேலும் தெரிவித்தார்.

No comments