பிரான்சில் மீண்டும் நாடுதழுவிய பொதுமுடக்கம்!


பிரான்சில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு முன்புவரை, கடந்த மார்ச் 31ஆம் தேதி 7,578 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதே அதிகபட்ச தினசரி பாதிப்பாக இருந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 7,379 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரான்சில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,67,077 பேராக அதிகரித்துள்ளது.
 
பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் "அதிவேகமாக" அதிகரித்து வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை 5,429 பேருக்கும், வியாழக்கிழமை 6,111 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியான நிலையில் அவற்றை விட அதிகமான எண்ணிக்கை நேற்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நோய்த்தொற்று மீண்டும் அதிவேகமாக அதிகரித்தாலும், பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் கட்டுக்குள்ளேயே இருப்பதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
 
பிரான்சில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக நேற்று உயிரிழந்த 20 பேரையும் சேர்த்து இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 30,596 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
 
வெள்ளிக்கிழமையன்று நோய்த்தொற்று பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியிடுவதற்கு சற்று முன்னதாக பேசிய அந்த நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டை மீறிவிட்டால் இரண்டாவது முறையாக நாடு தழுவிய பொது முடக்கத்தை அமல்படுத்துவதை தவிர்க்க முடியாது என்று கூறினார்.
 
ஏற்கனவே மோசமான நிலையிலுள்ள நாட்டின் பொருளாதாரம் மீண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு தடையாக கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுவதை தவிர்க்க தனது அரசு முயற்சித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
 
"பரவலை கட்டுப்படுத்துவதே கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானது. இதில் மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்" என்று மக்ரோங் தெரிவித்துள்ளார்.

 

No comments