வசந்த் அன் கோ உரிமையாளர் கொரோன தாக்கத்தினால் மரணம்!


 வசந்த் அன் கோ உரிமையாளர் என்று அறியப்பட்ட, நாடறிந்த தொழிலதிபரும் அரசியல்வாதியுமான வசந்தகுமார் நேற்று (ஆகஸ்டு 28) கொரோனா தொற்று தாக்கு அதையடுத்த உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார்.

வசந்தகுமாருக்கு பிரதமர் மோடி முதல் பல்வேறு தலைவர்களும் இரங்கல் குறிப்பு எழுதியிருக்கிறார்கள்.

தமிழகத்தின் மீது வசந்தகுமாருக்கு இருந்த வேட்கை: பிரதமர் மோடி

மக்களவை உறுப்பினர் திரு. ஹெச். வசந்தகுமார் அவர்களின் திடீர் மறைவு வேதனையை உண்டாக்குகிறது. வணிகத்திலும், சமூக சேவையிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். அவருடைய எனது உரையாடல்களின் போதெல்லாம், தமிழகத்தின் வளர்ச்சியின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வேட்கையையும் நன்கு உணர்ந்திருக்கிறேன். வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராளி: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான எச்.வசந்தகுமார் மறைந்த செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவர் ஒரு சிறந்த தொழில் அதிபர், அரசியல்வாதி. போராளியாக பிறந்த அவர் தமிழக மக்களின் நலனுக்காகவே தன்னுடைய வாழ்நாளை செலவிட்டார். அவருடைய மறைவு குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி, தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு

ஏழைகளின் கல்வி- பொருளாதார வளர்ச்சிக்கு பணியாற்றியவர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

விற்பனையாளராக தனது வாழ்வினை ஆரம்பித்த வசந்தகுமார் தனது கடினமான உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர். ஏழை எளிய மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணிகள் ஆற்றியவர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக இருமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்று மக்கள் பணியாற்றினார். வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடின உழைப்பாளர்: மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவருமான திரு. எச்.வசந்தகுமார் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரும் வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்முகம்- பழகுவதற்கு இனியர்; கடின உழைப்பாலும் சலியாத முயற்சியாலும் சாதித்துக் காட்டிய வெற்றியாளர் திரு. வசந்தகுமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், 'இலக்கியச் செல்வர்' திரு. குமரி அனந்தன் அவர்களுக்கும், மாண்புமிகு தெலங்கானா மாநில ஆளுநர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும் - தொண்டர்களுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த ஆறுதலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காமராஜரின் தொண்டர்: பொன்.ராதாகிருஷ்ணன் ( பாஜக மூத்த தலைவர், வசந்தகுமாரை எதிர்த்து தேர்தலில் நின்றவர்)

தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்களில் முக்கிய ஒருவராக உயர்ந்து சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உழைத்த திரு. வசந்தகுமார் அவர்களின் மரணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாபெரும் இழப்பாகும்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று பணிபுரிந்த நிலையில் அவருடைய மரணம் பாராளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது. காமராஜரின் தொண்டராக, தொழிலதிபராக, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட ஹெச். வசந்த குமார் அவர்களின் மறைவுக்கு அவரது குடும்பத்தாருக்கும், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆன்மா நற்கதியடைய அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

No comments