முடிவு ஜனநாயக விரோதமானது! அமைப்பாளர், பேச்சாளராகத் தொடருவேன்

எனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு எதிரானது, இயற்கை நீதிக்கோட்பாட்டுக்கு எதிரானது என்பதனால் நான் தொடர்ந்து

கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பேன் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இரு தினங்களில் எனக்கு கட்சி தலைவர் மற்றும் செயலாளரினால் நான் பதவி விலக்கப்பட்டுள்ளதாக கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.

சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் , ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து அதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளேன்.

நான் பல்கலைகழகத்தில் சட்டப்பீடத்தில் கற்றுக்கொண்டிருந்த கால பகுதியில் , யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் எமது இனத்தின் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் கை கோர்த்து, பயணித்தேன்.

2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற  தேர்தலில் படு தோல்வியடைந்தோம். அதனை அடுத்து பலர் எமது அமைப்பில் இருந்து விலகி சென்றனர். இருவர் துரதிஸ்டவசமா இறந்து போனார்கள். அதன் பின்னர் தலைவர் , செயலாளர், நான் ஆகிய நாங்கள் மூவருமே எமது அமைப்பை தொடர்ந்து முன்னெடுத்தோம். பல்வேறு அச்சுறுத்தல்கள் , நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து எமது அமைப்பை கட்டியொழுப்பினோம்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை பெற்றோம். அதன் பின்னர் எமது அமைப்பு உத்வேகத்துடன் முன்னோக்கி சென்றது.

இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் நான் இந்த தேர்தலில் தோல்வியுற்றால் , தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் என அறிவித்திருந்தேன். இதனை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அரசியலில் இருந்து வெளியேறுவதை பலரும், விரும்பாததல், நான் தொடர்ந்து அரசியலில் பயணிப்பேன்.

எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்துள்ளேன் எனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் இயற்கை நீதி கோட்பாட்டுக்கு எதிரானது. 

மத்திய குழு கூட்டம் ஏன் ? எதற்கு ? என கூறப்படாமல் கூட்டப்பட்டது. எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. என் தரப்பு நியாங்களை கூற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை இது ஜனநாயகம் இல்லாதது. அறமற்ற செயற்பாடாகும். 

அதில் பிரதான குற்றசாட்டு பணம் வாங்கியதாக உள்ளது. நான் என சொந்த தேவைக்காக பணம் பெறவில்லை. அதனை முற்றாக மறுக்கிறேன். ஏனைய விடயங்கள் தொடர்பில் பொது வெளியில் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை.  அது தொடர்பில் எனது பதில் கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.


எனக்கு எதிராக கட்சியினால் எடுக்கப்பட்ட ஜனநாயக பண்பற்ற ஒரு தீர்மானம் என்பதாலும் , இயற்கை நீதி கோட்பாட்டிற்கும் எதிரானது என்பதனால் , நான் தொடர்ந்து தேசிய அமைப்பாளராகவும் , ஊடக பேச்சாளராகவும் செயற்படுவேன். எம் இனத்திற்காக உயிர் நீத்தவர்களை மனதில் நிறுத்தி அர்ப்பணிப்புடன் எனது செயற்பாடுகள் தொடரும் என ஆணித்தரமாக கூறுகிறேன்.


இன்று தேசியம் பேசுபவர்கள் பிளவுபட்டு நிபதனால் , சிங்கள கட்சிகள் , தேசியம் பேசாதவர்கள் வெற்றி பெறுகின்றார்கள். அதனால் சிறு சிறு பிரச்சனைகளுக்காக பிரிந்து செல்வதனை நான் என்றைக்கும் ஏற்கமாட்டேன்.


தேர்தல் காலத்தில் எனக்கு எதிராக கட்சியை சேர்ந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் , கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கடந்த 09ஆம் திகதி எனது நண்பன் சட்டத்தரணி அர்ஜூனாவுடன் சென்று சந்தித்து முறையிட்டு சில ஆதாரங்களையும் முன் வைத்தோம். அது தொடர்பில் எனக்கு இதுவரை தலைவர் எந்த பதிலையும் தரவில்லை.

எனக்கும் தலைவருக்கும் இடையிலான உறவு ஆழமானது  நாம் என்றும் இணைந்து செயற்படுவேன். நான் எனது கட்சியுடன் நேசக்கரத்தை நீட்டுவேன். எனது கட்சி நிறுவனமயப்படுத்தப்பட்டு மக்கள் சேவைக்காக செயற்படும். அதற்காக தொடர்ந்து செயற்படுவேன் என உறுதி அளிக்கிறேன்.

காலங்கள் பல பதில்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் என நம்புகிறேன். என தெரிவித்தார்.  

No comments