வெளிவந்தது கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்!


தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.


வவுனியா நகர சபை மண்டபத்தில் நடந்த நிகழ்வில் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், பங்காளி கட்சிகளின் தலைவர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோரும் இதில் கலந்த கொண்டனர்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனம் - 2020

தமிழ் மொழியினதும் இலங்கை வாழ் தமிழ்ச் சமூகத்தினதும் தொன்மை 
வடகிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் வாழ்ந்து வந்த இலங்கையின் தமிழ் சமூகமானது இடைக்கற்காலம், பெருங்கற்கால மக்களின் ஒன்று கலப்பில் இருந்து தோன்றியவர்கள். இடைக்கற்கால கலாசாரமானது கிறிஸ்துவுக்கு முன் 28000வருடகால நீண்ட இருப்பைக் கொண்டது. பெருங்கற்கால கலாசார மக்கள் திராவிடர்கள் என்று முன்னைய தொல்பொருளியல் ஆணையாளர் செனரத் பரணவிதான அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். இவர்கள் தென் இந்தியாவின் பல பாகங்களிலும் இருந்து கிறிஸ்துவுக்கு முன் 800ம் ஆண்டளவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் ஆவார்கள். இவ்விருசாராரும் ஒன்றிணைந்ததானது ஒரு நீண்டகால செயற்பாடாகும். இவ்வொன்றிணைதலானது ஆரம்ப சரித்திர காலமான கி.மு 250 தொடக்கம் கி.பி 300 வரையிலான காலத்திலேயே முழுமையடைந்தது.

பெருங்கற்கால கலாசாரமானது நாகர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. அவர்கள் தமிழ் மொழி பேசுபவர்களாகவும் வாணிபம், பண்பாடு போன்றவற்றைப் பற்றி உபகண்டத்தில் தமிழ் நாட்டுக்கு அப்பால் வாழ்ந்த மக்களுடன் பேசும் போது பிராகிருத மொழியை தொடர்பாடல் மொழியாகப் பேசுபவர்களாகவும் இருந்தார்கள்.

அண்மையில் வெளியிடப்பட்ட அறிஞர்கள் சிலரின் கருத்துப்படி இலங்கையின் பல பாகங்களில் தமிழ் ப்ராமி எழுத்துப் படிவங்களில் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் காணப்பட்டதாகவும், கல்மேடைகளில் (னுழடஅநளெ) தமிழ்மொழி காணப்பட்டதாகவும் மற்றும் பல பிரேத அடக்க அல்லது தகன இடங்களில் உள்ள நினைவுச்சின்னங்களிலும் தமிழ் மொழி காணப்பட்டதாகவும் அறியத் தந்துள்ளனர். 

இவற்றில் நாகர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும் வேள் எனப்படும் மக்கட் தலைவர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவுந் தெரிய வருகின்றது.

பெருங்கற்கால கலாசாரத்துடன் தமிழ் மொழிக்கு கிட்டிய உறவு இருப்பதை வைத்து பெருங்கற்காலம் அறிமுகப்படுத்தப்பட்ட காலமான கி.மு 800ம் ஆண்டு தொடக்கம் தமிழ் மொழியானது இந் நாட்டில் பேசப்பட்டு வந்துள்ளது என்ற முடிவுக்கு வரலாம்.

தமிழ் ப்ராமி பொறிப்புக்களைக் கொண்ட மனித கைத்திறன் கொண்டு உண்டாக்கப்பட்ட பொருட்கள் மற்றும் உருப்படிகள் பல வகையாகவும் பல இடங்களிலும் காணப்பட்டுள்ளன. அவை மடபாண்டத் துண்டுகளிலும், எண்ணை அழுத்திகள், உரல்கள், அம்மிகள், முத்திரைகள், உலோகத்தால் மற்றும் களிமண்ணிலாலான விளக்குகளில் காணப்படுகின்றன. மற்றும் சைவம், நாக மரபு, பௌத்தம் ஆகியன சம்பந்தமான வழிபாட்டு, பூஜைச் சின்னங்கள் போன்றவற்றிலும் காணப்படுகின்றன.

மேலும் குன்றுகளில், கற்பாறைகளில், வயல் வெளிகளில், வனங்களில், சுவர்களில், சமயசார்பற்ற மற்றும் சமய ரீதியான நினைவுச் சின்னங்கள் போன்றவற்றிலும் காணப்பட்டுள்ளன. பலவிதமான சான்றுகளில் இருந்தும் அவை காணப்பட்ட பலதரப்பட்ட இடங்களில் இருந்தும் இந் நாட்டில் பிரதேச ரீதியாகப் பக்கம் பக்கமாக உள்ள சுமார் நாலில் ஒரு பங்கு நிலத்தின் மீது தமிழ்மொழி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது என்று காணக்கூடியதாக உள்ளது .

ஈழம், இலங்கை, இலங்கா என்ற பெயர் கொண்ட எமது தாயகம் எனக்கூறும் எங்கள் தீவில் கற்கால மக்கள் கிறிஸ்துவுக்கு முன் 5000 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதை சிரான் டெரனியகல, சுதர்சன் செனவிரத்ன, பத்மநாதன், இந்திரபாலா மற்றும் புஸ்பரத்தினம் போன்றவர்களின் தொல் பொருளியல் ஆய்வுகளின் மூலம் நாம் ஏற்றுக் கொள்வதோடு குறித்த கற்கால மக்களின் வழிவந்தவர்கள் தான் நாம் என்பதையும் பின்னர் தென்னிந்தியாவில் இருந்து அலை அலையாக இங்கு வந்து குடியேறிய மக்கட் கூட்டத்தினரதும் வழித் தோன்றல்களே நாம் என்பதை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் முக்கியமாகஇலங்கையின் வடக்கு, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறிஸ்துவுக்கு 800 வருடங்களுக்கு முன்பிருந்தே இங்கு பெருவாரியாக வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதை இனங்கண்டு கொண்டு போர்த்துக்கேயர், டச்சுக்காரர் மற்றும் பிரித்தானியர்கள் 15ம் நூற்றாண்டில் இருந்து இங்கு படைஎடுத்து வருவதற்கு முன்னரே இங்கு இறைமை கொண்ட தமிழ் இராஜ்யங்கள் இருந்து வந்துள்ளன என்பதையும் அதன் பின்னர் பல காலத்தின் பின் இறைமை கொண்ட சிங்கள இராஜ்யங்களும் நாட்டின் வேறு பகுதிகளில்இருந்து வந்துள்ளன என்பதையும் ஒப்புக்கொண்டு பின்னர் 1833ம் ஆண்டிலேயே முழுத் தீவும் நிர்வாக வசதிக்காக பிரித்தானியர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது என்பதை அடையாளப்படுத்திக் கொண்டு பிரித்தானியர்களிடம் இருந்து 1948ம் ஆண்டில் நாடு “சுதந்திரம்” பெற்ற நாளில் இருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது அரசியல் உரிமைக்காக முதலில் அகிம்சை முறையிலும், பின்னர் ஆயுதம் தாங்கியும் மீண்டும் இப்பொழுது அரசியல் ராஜதந்திர, அகிம்சை வழிகளிலும்  போராடி வருகின்றார்கள் என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு 
தற்போது வடக்கு, வடமேற்கு, கிழக்குமாகாணங்கள் என்று அடையாளப்படுத்தப்படும் இடங்களில் கி.மு. 800ம் ஆண்டளவில் இருந்து தமிழர்களைக் கொண்ட தேசமானது இருந்து வந்துள்ளமை சான்றமைந்துள்ள நிகழ்வு என்பதைக் கவனத்தில் எடுத்து 1947ம் ஆண்டில் சோல்பரி அரசியல் யாப்பு இயற்றப்பட்ட போது அரசியல் யாப்பின் உடன்பாட்டு உறுப்புரை 29 நிலைபேறான உறுப்புரையாக அமையப்போகின்றதென்ற அடிப்படையில் இரு தேசங்களும் ஒன்றிணைய பின்வருமாறு குறித்த உறுப்புரை தயாரிக்கப்பட்டு அரசியல் யாப்பில் உட்படுத்தப்பட்டது.

உறுப்புரை 29(2) பின்வருமாறு அமைந்தது –

எந்த ஒரு சட்டமும்

(அ) யாதொரு மதத்தைப் பின்பற்றி நடப்பதைத் தடைசெய்வதாகவோ கட்டுப்படுத்துவதாகவோ அமையக் கூடாது.

(ஆ) மற்றைய சமூகங்களையும் மதங்களையும் கட்டுப்படுத்தாத சட்டம் எதுவும் குறிப்பிட்ட சமூகங்களையோ மதங்களையோ சார்ந்தவர்களை மட்டும் கட்டுப்படுத்துவதாக அவர்கள் மீது ஆற்றல் இன்மையையோ கட்டுப்பாடுகளையோ விதிப்பதாக அமையக்கூடாது.

(இ) மற்றைய சமூகங்களுக்கும் சமயங்களுக்கும் அளிக்கப்படாத எந்த ஒரு சிறப்புரிமையும் சலுகையும் இன்னொரு சமூகத்திற்கோ சமயத்திற்கோ அளிப்பதாக சட்டம் அமையக்கூடாது.

(ஈ) எந்த ஒரு மத நிறுவனத்தின் யாப்பும் அந்த நிறுவனத்தின் ஆளும் அங்கத்தின் சம்மதம் இன்றிமாற்றப்படும் சட்டம் இயற்றலாகாது.

தமிழ், சிங்கள தேசங்களின் இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டு உறுப்புரிமையான சோல்பரி அரசியல் யாப்பின் உறுப்புரை 29(2) இன் ஏற்பாடுகளை மீறும் வகையில் 1956ம் ஆண்டில் “உத்தியோகபூர்வ மொழிச்சட்டம்” இயற்றப்பட்டதென்பதைக் கருத்திற் கொண்டு அதாவது தமிழர்களுக்கு எதிராகப் பல சட்டங்கள் பின்வருமாறு இயற்றபட்டுள்ளன என்பதும் கருத்திற் கொள்ளப்படுகின்றது.

அ. 1949ம் ஆண்டின் குடியுரிமைச்சட்டம் - இச் சட்டம் மத்திய மாகாணத்தில் வாழ் தமிழர்களை நாடற்றவர்கள் ஆக்கியது. நாட்டின் அப்போதிருந்த தமிழ் மக்கட் தொகையில் சுமார் ஐம்பது வீதத்தினரின் வாக்குரிமையை இச்சட்டம் பறித்து பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் தொகையை அரைவாசியாகக் குறைத்தது.

ஆ. 1971ம் ஆண்டின் தரப்படுத்தல் என்ற பக்கச்சார்பான சட்டத்தால் பல்கலைக்கழக தமிழ் மாணவ நுழைவானது பாதிக்கப்பட்டது.தமிழ் மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு உயர்கல்வியிலும் கல்வித் தரத்தினூடாக நிர்வாகப் பதவிகளிலும் கிடைத்த வாய்ப்புக்கள் அனைத்தும் பறிக்கப்பட்டது.

இ. 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டம் - 1979ம் ஆண்டில் இருந்து இன்று வரையில் இச் சட்டமானது ஆயிரக் கணக்கான தமிழர்களை குற்றச்சாட்டுக்களோ, விளக்கமோ இல்லாது சிறைப்படுத்தி வைக்கப் பாவிக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த சில மணித்தியாலங்களுக்குள் இரண்டு தமிழ் இணைஞர்கள் காணாமல் போனார்கள். இன்னொருவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த நிகழ்வில் இருந்து தான் காணாமற் போன தமிழர்களின் பிரச்சனை உருவாகியது. ஐ.நா மனித உரிமைப் பேரவை ஏகோபித்த முடிவெடுத்து இலங்கை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரியும் இலங்கை அரசாங்கம் அச்சட்டத்தை நீக்காது தொடர்ந்து புதிய சட்டத்தை உருவாக்கி இன்னும் அதன் வீரியத்தினை அதிகரிக்க திட்டமிடுகிறது.தமிழ் மக்களை சிறைப்படுத்தி வருகின்றது.

ஈ. குடியேற்றம் பற்றிய சட்டங்கள் - முழு நாட்டின் மக்கட் தொகையின் விகிதாசாரத்தை குடியேற்றத்தின் போது பின்பற்ற வேண்டும் என்று கூறி வடக்கு, கிழக்கு உள்ளுர் மக்கள் தங்களின் பாரம்பரிய இடங்களில் காணி பெறுவதைத் தடுத்து வந்துள்ளார்கள். மகாவெலி அதிகாரசபைதொல் பொருளியல் திணைக்களம் என்பன இந்த விடயத்தில் முக்கியமான ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களாக உள்ளன. பெரும் குற்றங்களை அவை இழைக்கின்றன. இவ்வாறான குடியேற்ற சட்டங்களின் நிமித்தம் தமிழ் மாகாணங்களின் பாரம்பரிய காணிகள் சிங்களக் குடியேற்றங்களால் சீரழிந்து வருவதை நாம் காணலாம்.

உ. தமிழர்களுக்கு எதிரான சட்டங்களை விட நாட்டின் முழு அரச நிர்வாக அலகும் தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசத்தின் குடிப்பரம்பலை மாற்றவும் தமிழர்களை அடி பணிய வைக்கவுமே பிரயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஊ. தமிழர்க்கு எதிரான யாப்புக்கள் -தொடர்ந்து வந்த சிங்கள அரசாங்கங்கள் தமிழர்க்கெதிரான அரசியல் யாப்புக்களையே நிறைவேற்றி வந்துள்ளன. பிரித்தானியர்களால் எமக்குத் தந்துவிட்டுப் போன அரசியல் யாப்பின் படி தமிழர்களுக்கு உத்தரவாதத்துடன் வழங்கப்பட்ட பாதுகாப்பை இந்த யாப்புக்கள் மீறியது மட்டுமல்லாமல் மேலும் தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஏற்பாடுகளையும் அவற்றில் உள்ளடக்கியுள்ளன. இலங்கையின் ஆட்சி அமைப்பு முறை பிரித்தானியர்களால் நிபந்தனைகளுக்கு அமைவாகவே தரப்பட்டது என்பதை சிங்கள அரசியல்வாதிகள் மறந்து தான்தோன்றித்தனமாக தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புறக்கணித்தே புதிய அரசியல் யாப்புக்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பிரித்தானியர் தந்த அரசியல் யாப்பின் உறுப்புரை 29(2)ஆனது மாற்ற முடியாத நிலைபேறான உறுப்புரை என்பதை மறந்தே பின்வந்த குடியரசு அரசியல் யாப்புக்கள் இயற்றப்பட்டுள்ளன. எது எவ்வாறெனினும் குடியரசு யாப்புக்களுக்குத் தமிழர்கள் தமது சம்மதத்தைத் ஒருசந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை. 

இவ்வாறாக கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்புக்கள் ஆவன:

1. சோல்பெரி அரசியல் யாப்புக்கு மாற்றாக 1972ல் கொண்டு வந்து இயற்றப்பட்ட குடியரசு அரசியல் யாப்பு என்று அழைக்கப்பட்ட யாப்பே முதலாவது. தமிழ்த் தலைவர்கள் அரசியல் நிர்ணய சபை நடவடிக்கைகளில் பங்குபற்றி தமிழரைப் பாதுகாக்கும் விதமாகக் கருத்துக்களை முன்மொழிந்தார்கள். ஆனால் சிங்கள உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த அரசியல் நிர்ணயசபை அவற்றை ஏற்காது முறியடித்துத் தமக்கு ஏற்றவாறு யாப்பைத் தயாரிக்க முற்பட்டது. இதன் காரணத்தால் தமிழ் தலைவர்கள் அரசியல் நிர்ணயசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள். 

சமூக ரீதியான தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய விருப்பங்களைப் புறக்கணித்தும் ஆங்கிலேயருக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களைக் கைவிட்டும் ஒற்றையாட்சி கொண்ட நாட்டை உறுதி செய்து சிங்கள மொழியை ஒரே உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்து பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்தது புதிய யாப்பு.
அவசரத்தை முன்னொட்டி தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்று சேர்ந்து தமிழர் கூட்டணியை உருவாக்கினர். 1972 மே மாதம் 22ந் திகதியே குறித்த குடியரசு அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்ததால் அந்தத் தினத்தை ஒவ்வொரு வருடமும் தமிழர்கள் கறுப்புத் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரினார்கள். தமிழர்கள் ஏகோபித்த விதத்தில் அவ் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டனர்.

குடியரசு யாப்புக்கு கண்டனம் நடத்திய 72 மாணவர்கள் அவசரகால விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவித குற்றப் பத்திரிகை பதியாமலும் விசாரணை நடத்தாமலும் ஆறு மாதத்திற்கு மேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதுவே தமிழ் மக்களின் உரிமைகளுக்கான இயக்க ரீதியான போராட்டத்தில் மாணவர்களதும் இளைஞர்களதும் பங்குபற்றலைத் தொடக்கி வைத்தது எனலாம். தொடர்ந்து 1973ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 42 தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு அவசரகால விதிகளின் கீழ் இரண்டரை வருடங்கள் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். தமிழர் தாயகத்தில் அரசியல் யாப்புக்கெதிரான எதிர்ப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

தமிழ்த் தலைவர் திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் அரசியல் யாப்புக்கெதிரான நடவடிக்கையாக தமது பாராளுமன்ற ஆசனத்தை இராஜனாமா செய்தார். அப்போதைய பிரதம மந்திரி திருமதி.ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கோரியும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவதானால் குறித்த 42 தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிரதம மந்திரி அதற்கு ஒத்துக்கொண்டு குறித்த சிறைக் கைதிகளை விடுவித்தார். அதன்பின் நடந்த தேர்தலில் திரு.செல்வநாயகம் அவர்கள் அமோக வெற்றியீட்டினார். அந்தத் தேர்தல் ஊடாகத் தமிழ் மக்கள் புதிய யாப்பை முற்றிலும் நிராகரித்திருப்பதை வெளிக்காட்டினார்.

2. 1978ல் அடுத்த யாப்பு தயாரிக்கப்பட்டது. அதுவும் தமிழ் மக்களின் உரித்துக்களையும் பாதுகாப்பையும் முற்றிலும் புறக்கணித்தது. அந்த யாப்பின் ஊடாக ஒற்றையாட்சி வலுப்படுத்தப்பட்டது. மேலும் சிங்களம் தனி அரசாங்க மொழியாகத் தொடரவும் பௌத்தத்திற்கு முதலிடம் வழங்கவும் வழி வகுத்தது. 
மேலும் தமிழ் மக்கள் தமது குடியுரிமைகளையும் அரசியல் உரிமைகளையும் கோரியதால், பல திட்டமிடப்பட்ட இனப்படுகொலைகளுக்கு ஆளானார்கள்.

அ. 1958ம் ஆண்டு மே மாதத்தில் - சிங்கள அரசியல் தலைவர்களினதும் பாதுகாப்;புப் படையினரின் ஒத்துழைப்புடனும்சிங்கள பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் குடிமக்கள் தாக்கப்பட்டார்கள். நூற்றுக்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டார்கள். பல தமிழ்ப் பெண்கள் பால் ரீதியாக தாக்கப்பட்டார்கள். பலர் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். புகலிடம் தேடி தமிழர்கள் தமிழ்ப் பிரதேசங்களுக்குத் தப்பி ஓடினார்கள். நடந்த கொலை அசம்பாவிதங்களுக்கும் பால் ரீதியான தாக்குதல்களுக்கும் எவருமே குற்றவாளியாக்கப்படவில்லை. 

ஆ. 1977ம் ஆண்டு ஆகஸ்டில் - சிங்கள அரசியல் தலைவர்களினதும் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடனும் சிங்கள பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் குடிமக்கள் தாக்கப்பட்டார்கள். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டார்கள். பல தமிழ்ப் பெண்கள் பால் ரீதியாகத் தாக்கப்பட்டார்கள். பலர் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். புகலிடம் தேடி கப்பல்களில் தமிழர்கள் தமிழ்ப் பிரதேசங்களுக்கு தப்பி ஓடினார்கள். நடந்த கொலைகளுக்கும் பால் ரீதியான தாக்குதல்களுக்கும் எவருமே குற்றவாளியாக்கப்படவில்லை. 

இ. 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் சிங்கள வன்முறைக் குழுவொன்றினால் எரிக்கப்பட்டது.  97,000 அரிய நூல்களுடன் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட இந்த நிகழ்வானது  20 ஆம் நூற்றாண்டின் மோசமான இன, கலாசார அழிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.  இந்த வன்முறைகளின் தொடர்ச்சியில் யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள்,ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன.

ஈ. 1983ம் ஆண்டு ஜூலை மாதம்- சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த குழந்தைகள் உள்ளடங்கிய தமிழர்கள் இலங்கையரசாங்கத்தின் உதவியோடும் இலங்கை பாதுகாப்புப் படையினரின் அனுசரணையுடனும் 3000ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ்ப் பெண்கள் சிங்களக் காடையர்களால் பால்ரீதியாகத் தாக்கப்பட்டார்கள்,பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். எவருமே நடந்த கொலைகளுக்கு குற்றவாளிகள் ஆக்கப்படவில்லை. தமிழர் புகலிடம் தேடி தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் தமிழ்ப் பிரதேசங்களுக்கு ஓடினார்கள். பல ஆயிரம் தமிழர்கள் இந்தியா நோக்கியும் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றை நோக்கியும் ஓடினார்கள். அவ்வாறு ஓடியவர்கள் தான் தற்போதைய பத்து இலட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தமிழர்கள். 

உ. அமைதி கூட்டங்களின் மேல் தாக்குதல்- யாழ்ப்பாணத்தில் 1974ல் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மகா நாட்டில் தமிழறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கு அவர்கள் பேச்சைமக்கள் ஆவலாகக் கேட்டுக் கொண்டிருந்த போது, பொலிசாரால் தாக்கப்பட்டனர். 11 பொது மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். அமைதிக் கூட்டங்களின் மீதான இவ்வாறான தாக்குதல்கள் 1974 தொடக்கம் நடைபெற்று பல பொது மக்கள் உயிர்மாண்டுள்ளனர். நடந்த கொலைகளுக்கு எவருமே குற்றவாளிகளாக்கப்படவில்லை. மாறாக குறித்த தாக்குதலை முன்நின்று நடத்திய பொலிஸ் அலுவலர் உயர் பதவி பெற்றார். வருடா வருடம் ஆயிரக்கணக்கான தமிழரின் அமைதிக் கூட்டங்கள் படையினரால் தாக்கப்பட்டு வந்ததே சரித்திரம்.

மேலும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான 1987ம் ஆண்டு இயற்றப்பட்ட இரு நாடுகளுக்கிடையிலான சர்வதேச ஒப்பந்தத்தில் “வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் என்பதை ஏற்றுக் கொண்டு”என்று இருப்பதை வலியுறுத்திக் கொண்டு,மேலும் இலங்கை படையினரும்அவற்றின் தலைவர்களும் யுத்த குற்றங்கள், மனிதர்களுக்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை போன்றவற்றை தமிழர்களுக்கு எதிராக இழைத்தமையும் தொடர்ந்து வந்த சிங்கள அரசாங்கங்கள் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைகளை அதிகாரப் பரவல் மூலம் கொடுக்க மறுத்தமையும் மனதில் கொள்ளப்படுகின்றன. 

அவை சம்பந்தமான விபரங்கள் பின்வருமாறு

தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களினால் வழி நடத்தப்பட்ட இலங்கைப் பாதுகாப்புப் படையினர் தமிழ் மக்களுக்கெதிராக மனிதாபிமானத்துக்கு எதிரான   போர்க் குற்றங்களையும் இனப்படுகொலையையும் செய்தமை உண்மையாகும். இவ்வாறான சர்வதேசக் குற்றங்களை இயற்றிய இலங்கை ஜனாதிபதிகளுள் தற்போதைய ஜனாதிபதி கோதாபாய இராஜபக்ச மேலும் முன்னைய ஜனாதிபதிகள் மைத்திரிபால சிரிசேன, மகிந்த இராஜபக்ச, திருமதி சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்க மற்றும் ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆகியோரும் அடங்குவர்.

அ. 2009 மே மாதம் முடிவடைந்த போரின் கடைசி 6 மாதங்களில் ஐ.நா. உள்ளக மதிப்பீட்டு அறிக்கையின்படி சுமார் 70,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர.; அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர்.

ஆ. 1979ம் ஆண்டு தொடக்கம் குழந்தைகள் உள்ளடங்கலாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயினர். சிலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். உலகில் காணாமல் ஆக்கப்பட்டோரின் தொகையினர் சம்பந்தமாக இரண்டாம் இடத்தைப் பெற்ற நாடு இலங்கையே என்று ஐ.நா கூறியுள்ளது. 

இ. இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் தமிழ்ப் பெண்கள் பால் ரீதியாகத் தாக்கப்பட்டும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டுமுள்ளனர். 

ஈ. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயல் திட்டக்குழுவின் (ஐவுதுP) அறிக்கையொன்று இலங்கை படையினரால் நடாத்தப்பட்ட பாலியல் வல்லுறவுமுகாம்கள் பற்றி விபரங்கள் தந்துள்ளது. அங்கு தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருக்கப்பட்டார்கள் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைமேலும்பின்வருமாறு கூறுகின்றது –

அ. “கசாப்புக் கடைக்காரன் முன்னிலையில் இருக்கும் இறைச்சித் துண்டை தேர்ந்தெடுக்கச் சொல்வது போல் எமது அறைக்குள் வந்த ஒரு சிரேஷ்ட அதிகாரியிடம் அவருக்குத் தேவையானவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறப்பட்டது. அவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு என்னைத் தேர்ந்தெடுத்தார். அவர் என்னை இன்னொரு அறைக்குக் கொண்டு போய் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார்;”.

ஆ. “இரு பெண்கள் தம்மை மற்றப் பெண்களுடன் சேர்த்து ஒரு குழுவாக ஒரு அறையில் வைத்திருந்தமை பற்றிப் பேசினார்கள். எந்த ஒரு போர் வீரரும் அந்த அறைக்கு வந்து தேவையான ஒருவரை தேர்ந்தெடுத்துச் சென்று அடுத்த ஒரு அறையில் அல்லது முகாமில் அவர் பாலியல்வல்லுறவுக்குட்படுத்தப்படலாம்;” என்கின்றது ஐவுதுP என்னும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயல்திட்டக் குழு.
இவ்வாறான சர்வதேசக் குற்றங்கள் புரிந்தமைக்கு எவரும் குற்றஞ் சாட்டப்படவில்லை. இதுவரையில் இழைக்கப்பட்ட இவ்வாறான அதிதொகையான கொடூரங்களுக்கு எவருமே பொறுப்புடையவராக்கப்படவில்லை.

இவ்வாறான குற்றங்களைப் புரிந்தவர்கள் பற்றி விசாரணை செய்து அவர்களைத் தண்டிக்க முற்படாமல் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இவ்வாறான சர்வதேசக் குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு சன்மானங்களும் வெகுமதிகளுமே அளித்துள்ளன. உதாரணத்திற்கு ஐக்கிய நாடுகளால் அடையாளம் காணப்பட்ட போர்க் குற்றவாளியான சவேந்திரா சில்வா என்பவர் இராணுவத் தளபதி ஆக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச குற்றங்கள் மேலும் அதிதொகையான கொடூரங்கள் சம்பந்தமாக ஐக்கிய நாடுகளின் பங்கு.

2015ம் ஆண்டு செப்ரெம்பர் மாத கூட்டத் தொடரில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை இவ்வாறான சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல் பற்றி ஒரு கூட்டத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. அதே கூட்டத் தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னிலையில் தமக்கிருக்கும் கடப்பாட்டை நிறைவு செய்ய இரு வருடகால நீட்சி பெற்றுக் கொண்டது. அத் தீர்மானத்தில் விசேட நீதிபதிகள்,வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களைக் கொண்ட ஒரு கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 

இருவருட நீட்சியின் போது தமது கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்றாததால் ஐ.நா மேலும் இருவருட நீட்சியை இலங்கைக்கு அளித்தது.

மேலும் இரண்டாவது நீட்சியும் அளிக்கப்பட்டு அதில் வழங்கப்பட்ட இரண்டு வருடங்களில் ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் அண்மையில் இலங்கை குறித்த தீர்மானத்துக்குத் தாம் இதுவரை காலமும் இணை அனுசரணை வழங்கி வந்தமையைமீளப்பெற்றது.

இதுவரைகாலமும் தமக்கெதிரான கொடூரங்களுக்கு எதிராகத் தமிழர் கையாண்ட நடவடிக்கைகள் தமக்கு எதிராகப் பாரபட்சமாக இயற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராகத் தமிழர் பல்வேறு அமைதி முறையான பின்வரும் அஹிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டனர்: 

அ. 1956ல் - 

பாராளுமன்றத்தில் 1956ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிராக காந்திய முறையில் அமைதிப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய தமிழர்கள் அனைவரும் பொலிசாரின் உதவியுடனும் அரசாங்கத்தின் உதவியுடனும் சிங்களக்காடையர்களால் தாக்கப்பட்டனர். தாக்கப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரத்தம் சொட்டச் சொட்ட பாராளுமன்றம் சென்றார்கள். அவர்கள் மேல் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் சம்பந்தமாக எவரேனும் ஒருவர் பொறுப்புக்கு உள்ளாக்கப்படவில்லை. 

ஆ. 1961ல் - 

அத்தியாவசிய சேவைகளான நீதித்துறை, பொலிஸ் சேவை, வைத்தியசாலைகள் போன்றவற்றில் கைவைக்காது நாட்டின் வடகிழக்கு அரசாங்க திணைக்களங்களில் வேலை செய்வதை தடுக்கு முகமாக பெரும் அளவில் காந்திய ரீதியில் அமைதியான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழர் தமது சொந்த தபால் சேவையை நடத்தி தபால் முத்திரைகளையும் வெளியிட்டனர். ஆயிரக் கணக்கான தமிழர்கள் இந்த அமைதி முறைப் போராட்டத்தில் பங்கு பற்றினர். அரசாங்கம் வடகிழக்கில் நற்பலனளிக்கக்கூடிய விதத்தில் கடமைபுரியாமல் இரு மாதங்களுக்கு தத்தளித்தது. இவ்வாறான இருமாத அமைதிப் போராட்ட முடிவில் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி போராட்டத்தை நசுக்க இராணுவத்தை அனுப்பியது. இராணுவ நடவடிக்கைகளினால் பல நூறுபேர் காயப்பட்டனர். சிலர் மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான காலஞ்சென்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்றோரும் மற்றும் சட்டத்தரணி கரிகாலன் நவரட்ணம் போன்ற குடிமக்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றஞ்சாட்டப்படாமலும் விசாரணைக்கு அழைக்கப்படாமலும் 6 மாதங்களுக்கு மேல் தெற்கில் பணாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

(இ) வடகிழக்கிற்கு வந்த மத்திய அமைச்சர்களுக்கு எதிராக பல எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கறுப்புக் கொடிகள் காட்டப்பட்டன. சில எதிர்ப்புக்களைப் பொலிசார் மிருகத்தனமாகவே கையாண்டு மக்களைக் கலைந்து செல்லப் பண்ணினார்கள்.

(ஈ) பிரித்தானியர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்களுக்கு ஏற்பட்ட துர்க்கதியை வெளிப்படுத்தும் வண்ணமாக ஒவ்வொரு வருட சுதந்திர தினமும் (பெப்ரவரி 4ம் திகதி) கறுப்பு நாளாக இனங்காணப்பட்டது. அரசாங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட சுதந்திரதின கொண்டாட்டங்களைத் தமிழர்கள் புறக்கணித்து தத்தமது வீடுகளில், வியாபார ஸ்தலங்களில், சைக்கிள்கள் உள்ளடங்கிய வாகனங்களில் கறுத்தக் கொடிகளைப் பறக்கவிட்டார்கள்.

(உ) 1971ல் - பல்கலைக்கழக உள்ளேற்புக்களில் இனரீதியான பக்கசார்பான கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எத்தனித்த போது (பல்கலைக்கழக ஆட்சேர்ப்பில் தரப்படுத்தல் முறை) மாணவ எதிர்ப்புக்கள் எழுந்தன. தமிழ் பிரதேசங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மேல் வகுப்பு மாணவர்கள் தமது வகுப்புகளைப் புறக்கணித்து பாரிய எதிர்ப்புக் கூட்டங்களை இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு எதிராக நடத்தினர். இதன் பின்னர் தான் தமிழரின் உரிமைகள் சம்பந்தமாக மாணவர்களின் மிக நெருங்கிய தொடர்புகள் விஸ்வரூபம் எடுத்தது. 

(ஊ) 1972ல் - புதிய குடியரசு அரசியல் யாப்புக்கு எதிராக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது எழுபத்தி இரண்டு தமிழ் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு எந்தவித குற்றச்சாட்டுக்களோ விசாரணைகளோ இல்லாமல் யாழில் இருக்கும் டச்சுக்கோட்டையில் இருக்கும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இம் மாணவர்கள் விடுவிக்கப்பட்ட போது பெருந்திரளான சனங்கள் கோட்டைக்கு வெளியே நின்று அவர்களை வரவேற்றனர். இதன் பிறகு மாணவர்களும் இளைஞர்களும் தமிழர் தம் உரிமைப் போராட்ட இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கினர்.

அரசியல் உடன்பாடுகளை எட்ட எடுத்த முயற்சிகள்
இரு உடன்பாடுகள் தமிழ்த் தலைவர்களுக்கும் சிங்கள அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன. 

(அ) 1958ம் ஆண்டின் உடன்பாடு– முதலாவது உடன்பாடு 1957ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ளு.று.சு.னுபண்டாரநாயக்கவிற்கும் தமிழ்த்தலைவர் ளு.து.ஏ.செல்வநாயகத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. அதில் நாட்டின் வடக்கு கிழக்கிற்கு சமஷ்டி அடிப்படையில் ஒரு தன்னாட்சி அலகைத் தருவதாகவும், வடக்கு கிழக்கில் அரசாங்க குடியேற்றத் திட்டங்கள் நிறுத்தப்படுவன என்றும் முடிவெடுக்கப்பட்டன. இதனை எதிர்க் கட்சியான ருNPஎதிர்த்தது. அக்கட்சியின் ஒரு தலைவராகிய ஜே.ஆர்.ஜயவர்தன நூற்றுக் கணக்கான பௌத்த பிக்குகளுடன் தம் எதிர்ப்பைக் காட்ட கண்டி நோக்கி நடைபவனி சென்றார். 200 புத்த பிக்குகள் திரு.பண்டாரநாயக்கவின் றொஸ்மிட் ப்ளேஸ் இல்லத்திற்குப் படையெடுத்தார்கள். இதன் காரணத்தினால் தமிழ்த் தலைவருக்கு அறிவிப்பில்லாமலே பிரதமர் ளு.று.சு.னு.பண்டாரநாயக்க குறித்த உடன்பாட்டைக் கிழித்து எறிந்தார். இதே காலப்பகுதியில் ஒரு பௌத்த பிக்கு பிரதமர் பண்டாரநாயக்கவைச் சுட்டுக் கொன்றார். 

(ஆ) 1965ம் ஆண்டின் உடன்படிக்கை - இரண்டாவது உடன்பாடு பிரதம மந்திரி டட்லி சேனநாயகவுக்கும் தமிழ்த்தலைவர் ளு.து.ஏ.செல்வநாயகம் அவர்களுக்கும் இடையில் மாவட்ட சபைகள் அமைப்பது சம்பந்தமாக கைச்சாத்திடப்பட்டது. இதுவும் சில வருடங்களில் கைவிடப்பட்டது.

தமிழர்களின் ஆயுதங்களினாலான எதிர்ப்பு

30 வருட அஹிம்சைவழிப் போராட்டங்கள் தோல்வி அடைந்ததன் காரணமாகவும் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமிழ்த் தலைவர்களுடனான எழுத்திலான உடன்பாடுகளை ஒரு தலைப்பட்சமாகத் தாமே இரத்துச் செய்ததன் காரணமாகவும் தொடர்ந்து நடாத்தப்பட்ட கலவரங்களில் பல அப்பாவித் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்ட காரணத்தினாலும் 1976ம் ஆண்டு மே மாதம் 14ந் திகதி வட்டுக்கோட்டைப் பிரகடனமானது தந்தை ளு.து.ஏ.செல்வநாயகம் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழர் விடுதலை கூட்டணி ஏற்கப்பட்டது. அதில் இலங்கையில் தமிழ் மொழி பேசப்படும் வடக்குக் கிழக்கு பிரதேசமானது தனியாகத் தமிழ் ஈழமாகக்கருதப்பட வேண்டும் என்ற முடிவு ஏற்கப்பட்டது. 1977ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மேற்படி தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தே மக்களிடம் வாக்குக் கேட்கப்பட்டது. தமிழ்ப் பேசும் பிரதேச மக்களும் ஏகோபித்த ஆதரவை குறித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு நல்கி பாராளுமன்றத்தில் அக் கட்சி முக்கிய எதிர்க் கட்சியாகவர அதற்கு வழி அமைத்தனர். முதன் முதலாக ஒரு சிறுபான்மையினக் கட்சி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாகப்பரிணமித்தது. இதுவே ஜனநாயக முறைப்படியிலாக தனிநாடு கோருவதற்கு ஆதரவு நல்குவதாகக் கருத இளம் தமிழ்த் தேசியவாதிகளுக்கு இடமளித்தது. தமிழர்களைக் காக்க இருந்த ஒரே வழி ஆயுதப் போராட்டமே என்ற முடிவுக்கு தமிழ் இளைஞர்களை ஆற்றுப்படுத்த இது வழிவகுத்தது. பல ஆயுதக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு அவர்கள் யாவரும் உற்சாகமாக எதிர்ப்பில் ஈடுபட்டனர். 

இந்த ஆயுதக் குழுக்களுள் பிரதானமானவர்களே தமிழ் ஈழவிடுதலைப் புலிகள் அமைப்பினர். இந்த ஆயுதப் போராட்டமானது சுமார் 30 வருட காலம் நீடித்தது. செஞ்சிலுவை சிகப்புக் குரிசின் சர்வதேசக்குழுவானது (ஐஊசுஊ) இங்கு வெகுவாக வேரூன்றி தரப்பாரின் கட்டுப்பாட்டுக்குள் வராத இடங்களில் இருந்து கண்காணித்து கைதிகளைக் கைமாற்றியும், இருதரப்பாரின் இறந்த பிரேதங்களைப் பரஸ்பரம் கையளித்தும் தமது கடமைகளைச் செவ்வனே செய்து வந்தனர். ஐக்கிய நாடுகளின் பல முகவர் அமைப்புக்களும் மனிதாபிமானச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி ஈற்றில் 2002 பிப்ரவரி மாதத்தில் விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் ஒரு போர் நிறுத்த உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர். போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க நோர்வே நாட்டுப் பிரதிநிதிகள் தமிழ்ப் பிரதேசங்களில் தொடர்ந்து இருந்து வந்தனர். 

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆறு சுற்றுப் பேச்சு வார்த்தைகளை உலகத்தின் பல நகரங்களிலும் நோர்வே நாடு ஒழுங்கமைத்துக் கொடுத்தது. ஆனால் நோர்வேயின் மத்தியஸ்தமும் தோல்வியில் முடிந்தது. 
அரசியல் தீர்வொன்றை உண்டுபண்ண சர்வதேச சமூகம் எடுத்த நடவடிக்கைகள்

(அ) 1987ம் ஆண்டில் - அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவர சர்வதேச நாடொன்றால் நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றால் அது இந்தியாவினாலேயே முதன் முதலில் எடுக்கப்பட்டது. ஒரு சர்வதேச உடன்பாடான “இலங்கை இந்திய உடன்படிக்கை”1987ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது. 

இந்தியாவை ஓரளவு திருப்திப்படுத்தவே இலங்கை 13வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால் 30 வருடகாலத்தின் பின்னரும் மேற்கண்ட உடன்பாடு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் 13வது திருத்தச் சட்டமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் முன்னர் மாகாணசபைகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் சிலவற்றையும் கைவாங்கி மத்திய அரசாங்க அலுவலர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

(ஆ) 2002ம் ஆண்டில் - இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கையை உருவாக்க நோர்வே நாடானது கடுமையாக உழைத்தது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் சேர்ந்து நோர்வே நாடானது தலைமைத்துவத்தை ஏற்று எம் நாட்டில் சமாதானம் ஏற்பட பல நடவடிக்கைகளில் இறங்கியது. இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆறு சுற்றுப் பேச்சு வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன. 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை காண்பதற்கு விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் இணக்கம் தெரிவித்து கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. 2003 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் வடக்கு-கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக  தமிழ் புத்திஜீவிகள் தயாரித்த“இடைக்கால தன்னாட்சி அதிகார சபை” என்ற முன்மொழிவை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் சமர்ப்பித்தனர். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நோர்வேயின் அனுசரணையில் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசாங்கம் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருதலைப்பட்சமாக விலகிக்கொண்டது. 

போரின் கடைசி ஆறுமாதங்களுள் தமிழ் மக்கள் பட்ட அவஸ்தைகள்

(அ) பெருவாரியான தமிழ் மக்களின் அழிவைத் திட்டமிட்டு அரசாங்கம் செய்தது. முதற்படியாக சர்வதேச அமைப்புகளுடனான தமிழ் மக்களின் தொடர்பைத் துண்டித்தனர். ஐக்கிய நாடுகள்,சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சுயாதீனமான ஊடகவியலாளர்கள் போன்றோர் போர் நடைபெற்ற தமிழர் வாழ்ந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டனர். 

(ஆ) தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் அரசாங்கம் அவர்களை பாதுகாப்பு வலயங்கள் என்று கூறி போர் நிறுத்த வலயத்திற்குள் (சுடல் தடைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு)(ழே குசைந ணுழநெ) ஆற்றுப்படுத்தினர். குறித்த தாக்குதல் தடைப்படுத்தப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்று அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்தது. குறித்த இடத்தை பாதுகாப்பு வலயமாக அடையாளம் காட்டியது.

(இ) தமிழ் மக்கள் பாதுகாப்பை எதிர்பார்த்து குறித்த இடத்திற்கு வருகைதர அரச படைகள் சுடல்போர் நிறுத்த வலயத்திற்குள்(தடை செய்யப்பட்ட இடத்தை) நோக்கி ஷெல் தாக்குதலையும் குண்டுத்தாக்குதல்களையும் அந்த அப்பாவி மக்கள் மீது பிரயோகித்தது. அது மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியாக தாக்குதல்கள் நடத்தத் தடைசெய்யப்பட்டிருக்கும் வைத்தியசாலைகள், உணவு விநியோக நிலையங்கள் போன்றவற்றின் மீதும் அரசபடைகள் தாக்குதல் நடத்தின. 

(ஈ) தாக்குதல் தடைசெய்யப்பட்ட இடங்களுக்கு அரசாங்கம் போதிய மருந்து வகைகளையும் உணவையும் போகாது கட்டுப்படுத்தினர். இதனால் பட்டினியால் பல தமிழர்கள் உயிர் இழந்தார்கள். பலர் சிகிச்சைக்கான மருந்து வகைகள் இல்லாததால் இரத்தப் பெருக்கினால் உயிர் நீத்தனர். 

(உ) மிகக் கொடூரமான குண்டுத் தாக்குதலையும் எறிகணைத்தாக்குதல்களையும் தவிர்க்கத் தமிழ் மக்கள் குறித்த தாக்குதல் தடைசெய்யப்படுத்தப்பட்ட இடங்களை விட்டு வெளியேறிய போது பலத்த வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகினர். 

(ஊ) சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் தகவல்களின்படி 300,000 மேற்பட்ட பொதுமக்கள் யுத்த பகுதிக்குள் அகப்பட்டிருந்தநிலையில், அரசாங்கம் 70,000 வரையான பொதுமக்களே யுத்தம் நடைபெறும் பகுதிகளுக்குள் இருப்பதாக புள்ளிவிபரங்களை பிழையாக கூறி உணவு மற்றும் மருந்துப்பொருட்களை மட்டுப்படுத்தியது. இதன்காரணமாக, உணவு மற்றும் மருந்து இன்றி ஏராளமான மக்கள் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டது.

(எ) பல்லாயிரக் கணக்கானோர் அவ்விடங்களை விட்டு வெளியேறினர். ஆயிரக் கணக்கானோர் சரணடைந்தார்கள். வெள்ளை கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பலர் கொலைசெய்யப்பட்டனர். இராணுவத்தினரிடம் குடும்ப உறுப்பினர்களினால் கையளிக்கப்பட்ட பலர்  காணாமல்  போயினர். சிலர் குழந்தைகள் உள்ளடங்கிய தமது குடும்பத்தாரோடு மேல் வாரியான விசாரணையின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்ற படையினர் கொடுத்த வாக்குறுதியை நம்பி சரணடைந்தனர். அப்போதிலிருந்து 11 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. குழந்தைகள் உள்ளடங்கிய சரணடைந்தோர் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோராகவே உள்ளார்கள். இதுகாறும் எந்தவித நம்பகரமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

(ஏ) முன்னூறாயிரத்திற்கு மேற்பட்ட தப்பி ஓடியோர் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு “மாணிக் பார்ம்” என்ற தடுப்பு முகாமில் ஒரு வருடத்திற்கு மேல் சிறைப்படுத்தப்பட்டு வைத்திருக்கப்பட்டனர். அக்காலகட்டத்தில் கடத்தப்படல், கற்பழித்தல் மற்றும் கொலை செய்யப்படல் போன்ற படையினரின் பல்வேறு தவறான பயன்படுத்தல்களுக்கும் செயல்களுக்கும் அவர்களுள் பலர் உள்ளானார்கள்.

(ஐ) பொறுப்புக்கூறல் பற்றிய நிபுணர் குழாம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு வழங்கிய அறிக்கைப்படி கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேர் மட்டில் போர்க் காலத்தில் கடைசி ஆறு மாதங்களின் போது கொல்லப்;பட்டார்கள். 2012ம் ஆண்டு நொவெம்பர் மாத ஐக்கிய நாடுகள் உள்ளக மறுமதிப்பிட்டு அறிக்கையின்படி எழுபதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டும் கணக்கில் வராமலும் இருந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

(ஒ) போர்க்காலத்தின் போது போர்க்குற்றங்களும் மனிதத்திற்கெதிரான குற்றங்களும் புரியப்பட்டன என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை விடுத்தது. சுதந்திர நிபுணர்கள் பலர் குறித்த குற்றங்கள் இனப்படுகொலையெனக் கணிக்கத்தக்கவை என்று அபிப்பிராயம் விடுத்துள்ளார்கள். 

(ஓ) வடக்குமாகாண சபையானது 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ந் திகதியன்று இனப்படுகொலை பற்றிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. 

போரின் முடிவின் பின்னரான காலப்பகுதியில் தமிழ் மக்களின் நிலைமை

2009 மே மாதம் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழர்களின் நிலைமை வாழ்க்கையின் எல்லா மட்டங்களிலும் பரிதாப நிலையை அடைந்துள்ளது. 

(அ) முன்னர் குறிப்பிட்டது போன்று மெனிக் ஃபாம் தடுப்பு முகாமில் கைதில் வைக்கப்பட்டிருந்த முன்னூறாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கடத்தப்படல், பெண்கள் வன்கொடுமை, கொலை செய்யப்படல் போன்ற படையினரின் தவறான பயன்படுத்துதல்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆளானார்கள்.

(ஆ) தொண்ணூராயித்திற்கு மேற்பட்ட தமிழ்  பெண்கள் போரினால் விதவைகள் ஆனார்கள். போரினால் கணக்கற்ற சின்னஞ்சிறார்கள் அனாதைகள் ஆனார்கள்.

(இ) கெட்ட பெயருக்கு இலக்காகியிருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள். அவர்களுள் பலர் இன்னும் சிறையில் வாடுகின்றார்கள், 15 வருடங்களுக்கு மேல் அவர்களுள் பெரும்பாலானோர் சிறை வாசம் அனுபவித்து வருகின்றார்கள்.

(ஈ) காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசதியற்ற நிலையில் உள்ளார்கள். அவர்கள் தமது குடும்பத் தலைவர்களைப்பறிகொடுத்தது மட்டுமல்லாது பாலியல்ரீதியான வன்கொடுமைகளுக்கும், துஸ்பிரயோகங்களுக்கும், கடத்தல்களுக்கும், கொலை செய்யப்படுதலுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள்.

(எ) தமிழர் தம் வாழ்விடங்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வடக்கு கிழக்கில் படையினரின் முகாம்கள் காணும் இடமெல்லாம் நிறைந்து நிற்கின்றன. நம்பத்தகுந்த அமைப்புக்கள் கூறுவது யாதெனில் வடக்கு கிழக்கு மக்களுக்கும் படையினருக்கும் இடையில் இருக்கும் விகிதத் தொடர்பு ஐந்துக்கு ஒன்றாகும். இதுவே உலகில் அதிகூடிய விகிதப் பங்காகும். சில இடங்களில் இவ்விகிதத்  தொடர்பு இரண்டுக்கு ஒன்றாகும். 

(உ) படையினர் மக்களின் காணிகளில் குடியிருந்ததால் ஆயிரக் கணக்கானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழவேண்டியிருந்தது. 

(ஊ) படையினர் மீன்பிடி, விவசாயம் போன்றவற்றில் ஈடுபடுவதாலும் மற்றும் உணவகங்கள், வர்த்தக அமைப்புக்கள், சிற்றுண்டிச்சாலைகள் நடத்தல் போன்ற வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து வரும் இலங்கை அரசாங்கங்களும் அவற்றின் தலைவர்களும் தொடர்ந்து ஒரு பழக்கமாக தமிழ் மக்கள், இந்திய அரசாங்கம் அதன் தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் உள்ளடங்கிய சர்வதேச சமூகங்களுக்குத் தாம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய அதிகாரங்களை வழங்காது தமது பொறுப்புக்கூறலில் இருந்து விலகியதாலும், இலங்கையில் தாமாகத் தமிழ் மக்களுக்கு அவர்தம் பாரம்பரிய இடங்களில் ஒரு நியாயமான அதிகாரப் பகிர்வை அவர்கள் வழங்க மாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு, தமிழ் மக்களின் விடிவைப் பெறவிருக்கும் ஒரே வழி சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து வேலை செய்வதே என்பதை அனுமானித்துக் கொண்டு,சர்வதேச சமூகம் உத்தரவாதம் தரக்கூடிய ஒரு நிரந்தரத் தீர்வை நோக்கியே நாங்கள் செல்ல வேண்டியுள்ளது என்பதை உணர்கின்றோம். 

அதே நேரம் இனப்போர் முடிந்து 11 வருடங்களுக்கு மேலாகியும் வடக்கு கிழக்கில்  படையினரின் நியாயமற்ற இருப்பும்,அவர்களின் முற்றுகை அங்கு தொடர்வதையும், வடக்கு கிழக்கில்  சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கல் மிக விரைவாக நடப்பதையும் மிக அவசரமாக எடுத்துக்காட்டும் அதே வேளை, தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும், சீர்படுத்தவும் வேண்டிய அவசரமும் இருப்பதை மனதில் எடுத்து, தமிழ் மக்களின் பிரச்சினைகள் வெகுவாக சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு போகப்பட்டிருப்பதை அவதானித்து, தமிழ்ப் பேசும் மக்கள் சர்வதேச சமூகத்துடனும் வல்லரசுகளுடனும் சேர்ந்து உழைக்க வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. 

ஏன் ஒரு மாற்று அரசியல் அணி தேவை ?

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கோஅல்லது இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் துன்ப, துயரங்களை போக்குவதற்கோ  எந்தவிதமான நடவடிக்கைகளையும் கடந்த 11 ஆண்டுகளில் எடுக்கவில்லை. இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும்,இனப்படுகொலை குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையிலுமே உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கூடுதலான கவனத்தையும், நேரத்தையும், வளங்களையும் செலவிட்டுள்ளது.  எந்தக் கட்சியையும் விமர்சனம் செய்வது எமது நோக்கம் அல்ல. ஆனால், எமது மக்கள் இம்முறை தேர்தலில் மிகுந்த விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக  தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 11 வருடங்களில் என்ன செய்திருக்கின்றது என்பது தொடர்பில் சில விடயங்களை கீழே பட்டியலிட விரும்புகின்றோம்.

1. ஐ. நா மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை மேலும் வலுப்படுத்தி இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ஒன்றை ஏற்படுத்துவதற்கு மிகவும் பலம்பொருந்திய, வாய்ப்புக்கள் நிறைந்த எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தபோதும் அவ்வாறு செய்யாமல் போர் குற்றத்துக்கான சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாக பிரசாரம் செய்ததுடன்  ஐ. நா மனித உரிமைகள் சபை தீர்மானத்துக்கு கால அவகாசத்தை  பெற்றுக்கொடுத்து இறுதியில் அதனை பலவீனப்படுத்தியமை. இதன்மூலம் இனப்படுகொலை குற்றவாளிகளை ஐ. நா மனித உரிமைகள் சபையில் தண்டனையில் இருந்து  பாதுகாத்ததுடன் பரிகார நீதி ஊடாக தீர்வினை பெறுவதற்கான வாய்ப்பினையும் மழுங்கடித்தமை.

2. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை இனப்படுகொலை இல்லை என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரப்புரை செய்தமை.

3. வட-கிழக்கிலிருந்தான முற்றான இராணுவ வெளியேற்றத்தை சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் அமைப்புக்களும்  வலியுறுத்திவந்த நிலையில் தனியார் காணிகளிலிருந்தான இராணுவ வெளியேற்றம் போதுமென்று கூறியமை.

4. கிழக்கு மாகாண சபையை காரணம் எதுவுமின்றி இன்னோர் சமூகத்திடம் கைமாற்றியமை(முஸ்லிம் காங்கிரசிடம் கொடுத்தமை).
5. வடக்கு மாகாண சபையை இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றியமைக்காக தொடர்ந்து செயற்படவிடாமல் முடக்கியதுடன் முதலமைச்சர் நிதியத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்காமை.

6. வவுனியா வடக்கு முதல் முல்லைத்தீவு வரை நல்லாட்சியென்ற பெயரில் பாரிய சிங்கள  குடியேற்றங்களும் இராணுவ குடியேற்றங்களும் ஏற்படுத்தப்படுவதற்கும் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதற்கும் உடந்தையாக இருந்தமை. இந்தக் குடியேற்றங்களை நிறுவுவதற்காக யுத்தம் நடைபெற்ற காலங்களை விடவும் மிகவும் பெருமளவு நிதி பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டபோது பாராளுமன்றத்தில் அவற்றுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய ஒரு குற்றத்தை இழைத்துள்ளமை.

7. நாவற்குழி, வவுனியா வடக்கு வெடுக்குநாரிமலை, திருக்கேதீஸ்வரம், கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகம், வலிகாமம் ஆகிய இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதற்கும் எமது தலைநகராம் திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்டு பௌத்த கோவில் கட்டப்படுவதற்கும்  நல்லாட்சி அரசாங்கத்துக்கு எந்த எதிர்ப்பையும் வெளியிடாமை.

8. ஓர் (இலங்கை) அரசு செய்யும் போர்குற்றத்தை மூடி மறைப்பதற்காக அவற்றை இனப்படுகொலையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, விடுதலைக்காகப் போராடிய இளைஞர்கள்  செய்த குற்றங்களுடன் ஒப்பிட்டு சமன் செய்தமை.

9. இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்குள் கொண்டு சென்று இனப்பிரச்சினை தீர்வுக்கான  பிரத்தியேகமான பேச்சுவார்த்தை வழிமுறைகளை இல்லாமல் செய்தமை.

10. வராத ஒரு தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கோட்பாடுகளான வடக்கு கிழக்கு இணைப்பு, இறைமை என்பவற்றை கைவிட்டும் ஒற்றையாட்சி மற்றும் பௌத்தத்திற்கு முதல் உரிமை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டும் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தியமை.

11. தேசிய நீக்க, உரிமை நீக்க அரசியலை மேற்கொண்டு 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உரிமை அரசியலை சலுகை அரசியலாக மாற்றியமை.

12. எஸ். ஜே. வி. செல்வநாயகம் மற்றும் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்கள் இலங்கையின் சிங்கக் கொடியை நிராகரித்தும் சுதந்திர தினத்தை கரி நாளாகத் தொடர்ந்து பிரகடனப்படுத்தியும் வந்த நிலையில் எதிர்க்கட்சி தலைமைப் பதவியை தக்க வைப்பதற்காகவும் சலுகைகளுக்காகவும் சிங்கக் கொடியை ஏற்று கையில் ஏந்தியதுடன் சுதந்திரதின நிகழ்வுகளிலும் கலந்துகொண்டமை.

13. 11 வருடங்கள் தமிழ் மக்கள் வழங்கிய வாய்ப்புக்களை தமது பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் பயன்படுத்தியபின்னர், எதிர்வரும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறப்போவதாக தற்போது வெளிப்படையாக அறிவித்துள்ளமை. 

ஏன் நீங்கள் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்?

கொள்கை அடிப்படையிலும் புதிய அணுகுமுறையின் அடிப்படையிலும் வடக்கையும் கிழக்கையும் சார்ந்து 5 கட்சிகள் ஒன்றுசேர்ந்து உருவாக்கியுள்ள ஒரு பெரும் கூட்டுக்கட்சி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகும்.  ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவுடன் லஞ்சம், சலுகைகளுக்கு விலைபோகாத அரசியல் தலைமைத்துவத்தை நீதியரசர் விக்னேஸ்வரன் கடந்த 6 வருடங்களாக வழங்கிவருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரணாகதி அரசியலுக்கும் ஏமாற்றுகளுக்கும் எதிராகவும் அரசாங்கங்களுக்கு அடிபணியாமலும் அவர் துணிச்சலாக மேற்கொண்ட  நடவடிக்கைகளே தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமும் இனப்படுகொலைக்கான நீதிக்குமான போராட்டமும் அஸ்தமித்துவிடாமல்  தொடர்ந்தும் உயிர்ப்பாக பேணப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு காரணமாகும். உலகின் அரசியல் தலைவர்கள் மத்தியில் விக்னேஸ்வரன் அவர்களுக்கு மிகுந்த மரியாதையும் கௌரவமும் இருப்பதுடன் அவரின் கருத்துக்கள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன, உள்வாங்கப்படுகின்றன. 

அதேபோல் வேறு எந்தத் தமிழ் தலைவர்களை விடவும் விக்னேஸ்வரன் அவர்களின் கருத்துக்கள் தென் இலங்கை இனவாதிகளை அச்சம்கொள்ள வைப்பதாக இருக்கின்றது. இலங்கையில் தமிழ் மக்களின் வரலாறுஇ பெருமைஇ செழுமை ஆகியவை தொடர்பில் விக்னேஸ்வரன் அவர்கள் துணிச்சலாகவும் மிகவும் ஆணித்தரமாகவும் கூறிவரும் கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பற்றிய அவசியமான ஒரு கருத்துவினைப்பாட்டை (ர்ளைவழசiஉயட னுளைஉழரசளந) உருவாக்கி இருக்கிறது. அத்தகைய ஒரு தலைவரின் கீழேயே இறுக்கமான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக  தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயற்பட்டுவருகின்றது. வேட்பாளர்கள் தமது சொத்துவிபரங்களை வெளியிடுவது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாதாந்தப் படிகளில் குறைந்தது 10 சத வீதத்தினை பொதுமக்களின் நலன்களுக்கு வழங்குவது உட்பட பல்வேறு நிபந்தனைகளை இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை உள்ளடக்கியிருக்கிறது.

எமது திட்டங்கள் என்ன? அணுகுமுறைகள் என்ன?

I இனப்பிரச்சினைக்கான தீர்வு

1. நாம் கோரும் தீர்வு

தமிழ் மக்கள் பேரவை மற்றும் வடக்கு மாகாணசபை தயாரித்த அரசியல் தீர்வு வரைவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளபடிசட்டப்படி தமிழ் மக்கள் ஒரு தேசம் (யேவழைn), இலங்கையின் வடக்கு கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம் (வுசயனவைழையெட ர்ழஅநடயனெ), பராதீனப்படுத்த முடியாத சுயநிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் (ஐயெடநையெடிடந சுiபாவ வழ ளுநடக-னுநவநசஅiயெவழைn)  என்பவற்றின் அடிப்படையில்  இணைந்த வடக்கு கிழக்கில் இறைமையுடனான உயர்ந்த மட்ட சுயாட்சியை சமஷ்டி அடிப்படையில் பெற்றுக்கொள்வதே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நோக்கமாகும்.1985ஆம் ஆண்டு  பூட்டான் தலைநகர் திம்புவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ் அமைப்புகளுக்கு இடையே காணப்பட்ட பொது உடன்பாடான திம்பு கோட்பாடுகளிலும் இந்த தீர்வு வலியுறுத்தபப்டுகின்றது. 

முஸ்லீம்கள் தனியான ஒரு இனம் என்ற அடிப்படையில் அவர்களின் சுய நிர்ணய உரிமையினை நாம் ஏற்றுக் கொள்வதுடன் இணைந்த மதச்சார்பற்ற வடக்கு கிழக்கில் அவர்களுக்கும் அதி உச்ச அதிகார பரவலாக்கம் வழங்கப்பட வேண்டும் என்பதும் எமது நிலைப்பாடாகும். 

2. நிரந்தர தீர்வுக்கான வழிமுறை

சமஷ்டி போன்ற ஏற்றுக்கொள்ளக்கூடிய நேர்மையான எந்த ஒரு அரசியல் தீர்வினையும்  இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்களுக்கு முன்வைப்பதற்கோ அல்லது கைச்சாத்திட்ட எந்த ஒப்பந்தங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் மற்றும் இனப்படுகொலைகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கோ இலங்கை அரசானது கடந்த 70 வருடங்களில் முழுமையாக தவறிவிட்டுள்ளதுடன் அவற்றுக்கு தயாரற்ற தனது  தன்மையையும்    உறுதிப்படுத்தியுள்ளது. 

அதேவேளை, அரசாங்கம் தனது அண்மைய நிலைப்பாடாக இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லவே இல்லை என்றும் பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்றும் மிகவும் திட்டவட்டமாக அறிவித்தும் விட்டது. இதன்காரணமாக, இலங்கையில் தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒட்டுமொத்தமான ஒரு இனப்படுகொலையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முரண்பாடுகளைக் களையும் விதத்தில் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை (சுநகநசநனெரஅ)வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்துமாறு சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர வேறு எந்தத் தெரிவுமே இல்லை. 

எரித்திரியாவில் 1990 ஆம் ஆண்டு தொடங்கியதுமுதல் பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்து, கனடாவில் கியூபெக், கிழக்கு திமோர்,தென் சூடான்இகற்றலோனியாஇஈராக்கிய குருத்தி; என்று பல நாடுகளில் சர்வதேச சமூகம் பிணக்குகள் மற்றும் தேசிய இனங்களின் அதிகாரங்களை தீர்மானித்துக்கொள்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியிருக்கின்றன. ஆகவே, இலங்கையில் எத்தகைய ஒரு தீர்வு தமக்கு வேண்டும் என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் வகையில் சர்வதேச சமூகம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கைளை  எடுக்க வேண்டும். அத்தகைய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது இருக்கக்கூடிய பல தெரிவுகளில் நாம் மேலே கூறிய சமஷ்டி ஒரு தெரிவாக இருக்கும்.

வடமாகாணசபையும் கிழக்கு மாகாணசபையும் ஏற்கனவே இத்தகைய ஒரு மக்கட் தீர்ப்பெடுப்பு வேண்டும் என்று தீர்மானங்களை எடுத்திருக்கின்றன. அத்துடன்  இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இவ்வாறானதொரு மக்கட் தீர்ப்பெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற ஒரு மனுவில் கைச்சாத்திட்டிருக்கின்றார்கள். இந்தியாவின் தமிழ் நாடு அரசாங்கம் உட்பட உலகின் பல மாநகர சபைகளிலும் இவ்வாறான மக்கட் தீர்ப்பெடுப்பின் மூலமே இலங்கையில் தமிழ் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட  முடியும் என்று தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

அதேவேளை, இறுதி தீர்வை எட்டும்வரை  யுத்தத்தினால் அழிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களை மீள கட்டியெழுப்புவதற்காக ஒரு இடைக்கால தீர்வினை சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையுடன் ஏற்படுத்துவதற்கு அரசியல், ராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக  இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் குறிப்பாக முன்னைய சமாதான பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கிய இணைத்தலைமை நாடுகள் ஆகியவை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.  அவர்களுக்கு இதற்கான ஒரு பெரும் கடப்பாடு இருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வைப்பெற ஆராயும் விதத்தில் சர்வதேச நாடுகளின் முன்னிலையில் இலங்கை அரசாங்கம் இணங்கியிருந்த நிலையில், இன்று விடுதலைப்புலிகள் இல்லை என்ற காரணத்துக்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தேவையில்லை என்று அவர்கள் தட்டிக்கழித்துவிடமுடியாது.

யுத்தம் நடைபெற்றபோது இடம்பெற்றதைவிடவும் மிகவும் அதிகரித்த போக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பல்வேறு வடிவங்களில் தற்போது இடம்பெறுகின்றன. 1966 ஆம் ஆண்டு ஐ. நா பொதுச்சபையில் உருவாக்கப்பட்டு  1976 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையில்(ஐவெநசயெவழையெட ஊழஎநயெவெ ழn ஊiஎடை யனெ Pழடவைiஉயட சுiபாவள) உறுதிப்படுத்தப்பட்டுள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மிகமோசமாக என்றும் இல்லாதவாறு இலங்கையில் தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்படுகின்றன.  ஆகவே ஐ. நா சபையின் பாதுகாத்தலுக்கான பொறுப்பு (சுநளிழளெiடிடைவைல வழ Pசழவநஉவ) மற்றும் முரண்பாடுகளுக்கான தீர்வு கோட்பாடுகளுக்கு அமைவாக சர்வதேச சமூகம் இலங்கையின் நீண்ட கால இன முரண்பாட்டுக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றினை கொண்டுவருவதற்கு இந்தியா,பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் தமக்கு இருக்கும் தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டு தாமதம் இன்றி அனுசரணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். 

அரசியல் விடயங்களை தமிழ் மக்கள் தேசிய கூட்டணிசார்பில் கையாளும்பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகளை உள்வாங்கி 'அரசியல் குழு” ஒன்றை நாம் அமைப்போம். அதேசமயம், நிறுவன ரீதியான அரசியல் செயற்பாடுகளை அறிவார்ந்த ரீதியில் ஆய்வுகள், மாநாடுகள், பயிற்சிப்பட்டறைகள், வெளியீடுகள் ஆகியவற்றின் மூலம் முன்னெடுத்து செல்லும் வகையில் சுயாதீனமான சிந்தனை மையம் (வுhiமெ வுயமெ) ஒன்றை நிலத்திலும் புலத்திலும் உள்ள புத்திஜீவிகளை உள்வாங்கி ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை சிரத்தையுடன் நாம் மேற்கொள்வோம். 

II. இனப்படுகொலைக்கான  பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதி

இனஅழிப்பு நடைபெற்று 10 வருடங்கள் கடந்துள்ளபோதிலும் போர்க்குற்றம், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனப்படுகொலைக் குற்றம் ஆகியவற்றுக்கு நீதி கிடைக்கவில்லை. அதேசமயம்,  ஐ. நா  மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட  30ஃ1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாக அறிவித்துள்ளதுடன்  எந்த சந்தர்ப்பதிலும் வெளிநாட்டு விசாரணைக்கோ அல்லது வெளிநாட்டு நீதிபதிகளுக்கோ இடமளிக்கப்படமாட்டாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  இந்த  நிலையில்,  இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பை உறுதிசெய்யவும் இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதற்கும்  அடுத்த கட்டமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதற்கு  சட்டரீதியானதும்  அரசியல் ரீதியானதுமான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் நாம்  எடுப்போம்.எமது இந்த முயற்சியில் இனப்படுகொலை பற்றிய ஆதாரங்களை சேகரித்து ஆவணப்படுத்துவது மிக முக்கியமான ஒரு பணியாகும்.  இதற்கு, நிலத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்கள் எமது முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

III. வடக்கு -கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்தமயமாக்கலை நிறுத்துதல்

சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இங்கு நடைபெறும் நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள் பாரிய மனித உரிமை மீறல்களாகும். ஐ. நா, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் கவனத்தை இந்த விடயத்தில் ஈர்த்து அவர்கள் இதுதொடர்பில் ஆய்வுகளையும் கண்காணிப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க நடவடிக்கைகளை எடுப்போம்.  அதேவேளை,இலங்கை சட்டத்துக்கு உட்பட்ட ரீதியில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளையும் நில ஆக்கிரமிப்புக்கு சம்பந்தமாக எதிராக நாம் எடுப்போம். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கடந்த காலங்களில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நில ஆக்கிரமிப்பு காத்திரமான நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டுள்ளன.  இது விடயத்தில் கீழ்வரும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்:

1. ஐ. நா மனித உரிமைகள் சபையில் தமிழர் பகுதிகளில் நில ஆக்கிரமிப்பை நிறுத்தும் தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு அல்லது ஏற்கனவே இருக்கும் தீர்மானத்தில் இதுதொடர்பில்  அழுத்தமான உள்ளீடு ஒன்றை கொண்டுவருவதற்கு முயற்சி செய்வோம்.

2. தொடர்ச்சியாக எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பிலும் இராணுவமயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு  ஐ. நா வின் விசேட பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படவேண்டியது அவசியமாகியுள்ளது. ஆகவே, இதற்கான முயற்சிகளை முழுவீச்சில் நாம் மேற்கொள்வோம். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர்   க. வி. விக்னேஸ்வரன் இதுதொடர்பில் ஐ. செயலாளர் நாயகம், ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோருக்கு ஏற்கனவே எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அங்கீகாரத்துடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிபப்டையில் இந்த செயற்பாடுகளை மேலும் சிறப்பான முறையில் எம்மால் மேற்கொள்ளமுடியும் என்று நாம் நம்புகின்றோம்.

3. நில ஆக்கிரமிப்புக்கு எதிராக செயற்படும் சர்வதேச அமைப்புக்கள், ஆய்வாளர்கள் மற்றும் செயற்பாட்டளர்களுடன் இணைந்து உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்ப்போம்.  தகவல் சேகரிப்பு  மற்றும் ஆவண உருவாக்கம் ஆகியவற்றை மேற்கொள்வோம்.

4.தற்காலிக ஏற்பாடாக, மாகாண சபையின் காணி பயன்பாட்டுக்காக ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தை முழுமையாகப்  பெறுவதற்கு முயற்சிப்போம். அத்துடன் உள்ளக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கிடைக்கவேண்டிய காவல் துறை அதிகாரங்களை பெற்றுக்கொள்ளவும் முயற்சி செய்வோம்;.

IV  வடக்கு -கிழக்கில் இராணுவமயமாக்கலை இல்லாமல்செய்தல்

உலகில் உச்சளவு இராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக வடக்கு- கிழக்கு தொடர்ந்து காணப்படுகின்றது. சுமார்  ஒரு லட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர்  வடக்கில் மட்டும் நிலைகொள்ள செய்யப்பட்டுள்ளனர் என்றும் முல்லைத்தீவு பகுதிகளில்  ஒவ்வொரு இரண்டு பொதுமக்களுக்கும் ஒரு  இராணுவ வீரன் என்ற (2:1) விகிதாசார அளவில் இராணுவமயமாக்கல் காணப்படுவதாகவும் சர்வதேச ரீதியான சில ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.  வடக்கு -கிழக்கு பகுதிகள் அதிகளவில் இராணுவமயப்படுத்தப்பட்டுளளமை எமது மக்களின் பாதுகாப்புக்கு பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது  மட்டுமன்றி பொதுமக்களின் சகஜ வாழ்க்கையையும் மோசமாக பாதித்துள்ளது.  இதனால், தனியார் காணிகளில் இருந்து மட்டுமன்றி வடக்கு - கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.  1983 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் இருந்த நிலைகளுக்குள் இராணுவம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று  பாராளுமன்றம், ஐ.நா மற்றும்  சர்வதேச மட்டங்களில் நாம் வலியுறுத்துவோம்.  விசேடமாக, வடக்கு கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவ குவிப்பு ஏற்படுத்தக்கூடிய பாதக தன்மைகள் குறித்து இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவோம். 

V  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை

பல வருடங்களாக சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யும் பொருட்டு சட்ட வல்லுநர்கள் குழு ஒன்றை விரைவில் அமைத்து செய்யக்கூடிய எல்லா வழிமுறைகளையும் மேற்கொள்வோம். குறிப்பாக பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பாடுபடுவோம்.  அதேசமயம் இலங்கை அரசுடன் இவர்களின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவோம்.  பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படும் எமது  உறுப்பினர்கள் ஐ.நா, சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், இந்திய அரசு ஆகியவற்றுடன் இது விடயத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்துவார்கள். சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய  ஆவணம்  ஒன்றை இவர்களின் விடுதலை தொடர்பிலான எமது செயற்பாடுகளுக்காக தயாரிக்க  இருக்கின்றோம்.

VI. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளை தீர்த்தல்

காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம். இவர்களின் பிரச்சினைகளை கையாளும் வகையிலும் சட்டவல்லுனர்கள்  உரிமைகள் செயற்பாட்டாளர்கள்  மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்புக்களின் பிரதிநிதிகள்  ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்றை நாம் அமைக்க இருக்கின்றோம். இனப்படுகொலை  தொடர்பில் சர்வதேச ரீதியான சுயாதீன  விசாரணை ஒன்று நடத்தப்படும்பொழுதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்  என்று நாம் நம்புகின்றோம்.  சுயாதீன சர்வதேச விசாரணையே காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மர்மங்களை வெளிப்படுத்துவதற்கான திறவுகோலாகும். இதனடிப்படையில், சர்வதேச விசாரணை ஒன்றை இயன்றளவு விரைவாக கொண்டுவருவதற்கு நாம் பாடுபடுவோம். அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரச்சினைகளை அறிந்து புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் ஆகியவற்றின் உதவியுடன் அவற்றை தீர்ப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

VII. பொருளாதாரம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழில்வாய்ப்பு

1. (வடக்கு- கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கின் வளங்களை உச்சமாகப் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவதற்கும்; தற்சார்பு பொருளாதாரத்தின் அடிப்படைகளைபின்பற்றுவதோடு விவசாயத்தையும் கைத் தொழிலையும் வேலைவாய்ப்பை உருவாக்கும் உற்பத்தி தொழில்களாக பன்முகப்படுத்தி சேவைத்துறையின் பங்களிபட்போடு அப் பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி மட்டத்தை உயர்த்த ஆவன செய்வோம்.இவ் அபிவிருத்தியின் ஊடாக எமது பிரதேசம் தன்னிறைவடைந்து அன்னியச் செலாவணியை உழைக்கும் நோக்கில் ஏற்றுமதி இலக்கை நோக்கி பயணிக்கும்  நிலையினை அடையவேண்டும் என்பதும் பொருட்கள், சேவைகளை ஏற்றுமதி  செய்யும் அளவுக்கு அவர்களின் தொழில்துறைகள் வளர்ச்சியும் விருத்தியும் அடையவேண்டும் என்பதும்  எமது நோக்கம். இதனடிப்படையில்,  வடக்கு, கிழக்கின் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், தகவல்களை திரட்டுவதற்கும், ஆலோசனைகளை வழங்குவதற்கும், வாய்ப்புக்களை இனங்காண்பதற்கும்  நிலத்திலம் புலத்திலும் உள்ள பொருளாதார நிபுணர்களை உள்வாங்கி “பொருளாதார ஆய்வு நிலையம்” ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுப்போம். வடக்கு கிழக்கில் வறுமையை அகற்றி நீண்ட, நடுத்தர மற்றும் குறுகிய கால அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளுவது தொடர்பிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதும் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் புள்ளிவிபரங்களைச் சேகரிப்பதும் பேணுவதும் இந்த நிலையத்தின் பிரதான பணிகளாக இருப்பன. 

2. அதேவேளை, அமைச்சுக்கள் அரச திணைக்களங்கள், புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள், அவை தொடர்பான நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோருடன் கலந்துரையாடி பொருளாதார அபிவிருத்தியையும் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் முன்னெடுத்து செல்வதற்கான 'பொருளாதார விவகாரங்கள் குழு”ஒன்று  பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி பிரமுகர்கள் மற்றும் புத்திஜீவிகளை  உள்ளடக்கி  உருவாக்கப்படும்.

2. தொழில்வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் மாகாண சபை, மத்திய அரசாங்கம்;, வெளிநாட்டு அரசாங்கங்கள், தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் மக்களுடன் இணைந்து வடக்கு கிழக்கில் கைத்தொழில் பூங்காக்கள்  மற்றும் தொழில்நுட்ப பூங்காக்கள்  ஆகியவற்றை  ஏற்படுத்தும் முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்.

3. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டும்வகையில் உளவள மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

4. பொருட்கள் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையிலும் கண்டுபிடிப்பு (inழெஎயவழைn) திறனை அதிகரிக்கும் வகையிலான பயிற்சிகள் மற்றும் கற்கைநெறிகளை தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளுடன் மேற்கொள்வோம்.

5. கூட்டுறவு முறைமையை மேலும் பலப்படுத்தி சிறுபொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டங்களை முன்னெடுப்போம்.

6. பொருளாதாரப் பயிர்களை எமது மக்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில்  மர கன்றுகளையும் விதைகளையும் வடக்கு கிழக்கு பகுதிகள் முழுவதும் இலவசமாக விநியோகிப்போம். இந்த திட்டம் கடந்த மே மாதம் வெற்றிகரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.  

7. வடக்கு கிழக்கின் அரசாங்க வெற்றிடங்கள் இங்குள்ள இன விகிதாசாரத்துக்கு அமைவாக அன்றி  வேறு எந்த முறையிலும் நியமிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய முயற்சிகளை மேற்கொள்வோம்.

8. அரசாங்க படைகள் விவசாயம், பொருளாதாரம்,சுற்றுலா வர்த்தகம் போன்ற பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு எதிராக உள் நாட்டில் முடிந்தளவு நடவடிக்கைகளை எடுப்பதுடன் சர்வதேச ரீதியில் அழுத்தங்களை பிரயோகிக்க நடவடிக்கைகள் எடுப்போம். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்  தலைவர் நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் தனது முதலமைச்சர் காலப்பகுதியில் இதற்கு எதிராக கடுமையாக போராடியிருக்கிறார்.

VIII. பனை தென்னை வள அபிவிருத்தி

பனை அபிவிருத்திச் சபை மற்றும் பனை தென்னை வள கூட்டுறவு சமாசங்கள் போன்றவற்றின் ஊடாக பனை தென்னை அபிவிருத்திக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை தென்னை உற்பத்தியை நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் அத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த பனை தென்னை வள அபிவிருத்தியை மேலும் ஊக்கப்படுத்துவதுடன் அத் தொழிலை நம்பியிருக்கும் மக்களுக்கு அதற்கான பயிற்சி மற்றும் உதவிகள் என்பன செய்யப்பட்டு பனை தென்னவள அபிவிருத்தி என்பது மேம்படுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் பனை அபிவிருத்தி சபையும் அதற்கு கீழிருந்த நிறுவனங்களும் ஊழல்களிலும் மோசடிகளிலும் ஈடுபட்டார்கள் என்பதையும் நாங்கள் குறித்துக் கொண்டு எதிர் காலத்தில் அவ்வாறு நடக்காமல் அத் தொழிலை நம்பியிருக்கும் மக்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை நாம் வழங்குவோம்.

IX. கல்வி மேம்பாடு

வடக்கு-கிழக்கில் வீழ்ச்சியடைந்துள்ள கல்வித்தரத்தை உயர்த்தி மீண்டும் அதனை முதல் இடத்துக்கு கொண்டுவருவதற்கான செயற்திட்டங்கள் மற்றும் உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும் கூடுதலான மாணவர்கள் அதனை பெறுவதற்குமான நடவடிக்கைகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம். மத்திய அரசு மற்றும் மாகாண அரசு ஆகியவற்றை முடிந்தளவுக்கு இந்த செயற்திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும்  அதேவேளை, புலம்பெயர் தமிழ் மக்கள் எமது கல்வி அபிவிருத்திக்கு காத்திரமான வகிபாகத்தை செய்யமுடியும் என்று நாம் நம்புகிறோம். குறிப்பாக, விசேடமான தொழிற் கல்விநெறிகள், நிபுணத்துவ பாடநெறிகள், ஆங்கில கல்வி ஆகியவற்றை எமது மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பெரும் பங்களிப்பை செய்யமுயடியும்.  மேலும், கீழ்வரும் சில அவசியமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் அடையாளம் கண்டிருக்கிறோம்.

1. பாடசாலைகள் மட்டத்தில் எமது மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்துள்ளமைக்கு வறுமை நிலை பிரதான காரணங்களில் ஒன்று என்று அறியப்பட்டுள்ளது.  இது தொடர்பில் முழுமையான தகவல்களை திரட்டி எத்தகைய சாத்தியமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்று ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.  

2. தமிழ் மொழிக் கல்விக்கான கழகம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். இதனூடாக, பாடத்திட்டங்கள், கற்றல்  உபகரணங்கள், தமிழிலான பாடப் புத்தகங்கள் போன்றவற்றை விருத்தி செய்வதுடன்  கடமையில் இருக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு தொடர் ஆசிரியக் கல்வி நிகழ்ச்சியினை நடாத்த ஏற்பாடு செய்வோம். 

3. உரிய தகைமைகள் இருந்தும் தேசிய பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத மாணவ மாணவியர்களின் கல்வியைத் தொடர விஞ்ஞானம், தமிழர் வரலாறு, சுற்றாடல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான மாகாண பல்கலைக்கழகங்களை வடக்கு கிழக்கில் அமைப்பது அவசியம் என்று உணரப்பட்டுள்ளது.  இதனை எவ்வாறு சாத்தியமாக்கலாம் என்பதுகுறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் எடுப்போம்.  

4. வடக்கு கிழக்கில் எமது தொல்லியல், வரலாற்றியல், சமூகவியல் சம்பந்தமான தொல்லியல்ப் பொருட்களையும், மனித கைத்திறப் பொருட்களையும் அவை பற்றிய பண்டைய ஓலைச்சுவடிகள்,நூல்கள் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கான அருங்காட்சியகம் ஒன்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்படுவது இன்றியமையாதது.  இதனை நிறைவேற்றுவதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருத்தமானவர்களை அடையாளம் கண்டு ஒரு செயற்குழுவை அமைப்போம்.

5.ஈழத்தமிழர் வாழும் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்கள்இதமிழக பல்கலைக்கழகங்கள்,  ஆய்வு நிலையங்கள் போன்றவற்றை பயன்படுத்தி  பல்வேறு மட்டங்களில்  எமது கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு  இருக்கிறது. இது கடந்த காலங்களில் முறையாக பயன்படுத்தப்படவில்லை.  எதிர்வரும் காலத்தில் இந்த  வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்த நாம் ஆவன செய்வோம்.  

6. தேசிய ரீதியாகவும் சர்வதேசரீதியாகவும் எமது கல்வித் துறையில் விசேடமாக பல்கலைக்கழக மட்டத்திலும், உயர் கல்வி மட்டத்திலும் படையினரின் உள்ளீடல்கள் தவிர்க்கப்பட வேண்டிய அவசியத்தை  வலியுறுத்த இருக்கின்றோம். அத்துடன் படையினர் எந்தக் காரணம் கொண்டும் பாடசாலைகளுக்குள், கல்லூரிகளுக்குள் உள் நுழையாது இருக்க சர்வதேச ரீதியான கவனத்தை ஈர்த்து அழுத்தங்களை ஏற்படுத்த இருக்கின்றோம். எந்த ஒரு குற்றமாக இருந்தாலும் அதனை விசாரிக்கப் பொலிசாரே பயன்படுத்தப்பட வேண்டும். அவற்றைப் படையினர் விசாரிக்க அவர்களுக்கு எந்த அருகதையுங் கிடையாது என்பதை  வலியுறுத்தி அதனை நடைமுறைக்கு கொண்டுவர பாடுபடுவோம்.

X  முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று வலுவுள்ளோருக்கான நல்வாழ்வு  
முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று வலுவுள்ளோரின் பிரச்சினைகள் குறித்து நாம் விசேட கவனம் கொண்டுள்ளோம். முன்னாள் போராளிகள் தொடர்பில் அரசாங்கங்கள் எந்த ஒரு வாழ்வாதார திட்டத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. சொல்லொணா துன்ப, துயரங்களை இவர்கள் அனுபவித்துவருகின்றார்கள். புலம்பெயர் தமிழ் மக்களே கணிசமான உதவிகளை இவர்களுக்கு கடந்த காலங்களில் செய்துள்ளார்கள். இவர்களுக்கான விசேட திட்டம் ஒன்றை தயாரித்து முக்கியமான சில வெளிநாட்டு அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் பெற்று நடைமுறைப்படுத்த ஆவன செய்வோம். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபொழுது தன்னுடைய அதிகாரங்களுக்கு உட்பட்ட வகையில் பல்வேறு  செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் புலம்பெயர் தமிழ் மக்களின் ஊடாக பல உதவிகளை பெற்று தொடர்ந்தும்  வழங்கி வருகின்றார்.   இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தமிழக வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் பங்களிப்பு பெறப்படும். 

யுத்தம் காரணமாக மாற்றுவலுவுள்ளோரின் எண்ணிக்கை வடக்கு கிழக்கில் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. இவர்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை மாவட்ட ரீதியாக எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாகவும் மாற்றுவலுவுள்ளோர் தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செயற்பட்டுவரும் அமைப்புக்களின் ஊடாகவும் நடவடிக்கை எடுப்போம். 

XI. பெண்கள் மற்றும் விதவைகளுக்கான நல்வாழ்வு 

வடக்கு கிழக்கில் வாழ்ந்துவரும் 90,000 வரையிலான விதவைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இருக்கின்றோம். இதற்கு முன்னோடியாக 'தேவைகள் மதிப்பீடு' ஒன்றை விதவைகள் மத்தியில் நாம் விரைவில் நடத்த இருக்கின்றோம். 

அதேவேளை, பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு  பிரச்சினைகள் தொடர்பில் நாம் கொடுத்தால் கவனம் கொண்டுள்ளோம். ஆண்களுக்கு நிகரான பெண்களுக்கும் சம வாய்ப்பு மற்றும் சந்தர்ப்பங்கள் வழங்கபப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுவருகின்றபோதிலும் உரிய முறையில் இவற்றை அடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. பெண்கள் தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்ள முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் அவர்கள் கையில் வருமானமும்அதிகாரம் இல்லாமல் இருப்பதே ஆகும். இதனை நிவர்த்திசெய்வதற்கான வழிகளில் ஒன்றாக அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தலாகும். பெண்களுக்கு எமது கூட்டணியில் அரசியல் வாய்ப்புக்கள்  மற்றும் பிரதிநிதித்துவத்தில் 50: 50 சந்தர்ப்பம் வழங்குவதற்கு நாம் முழுமையான விருப்பம் கொண்டுள்ளோம். இதற்கான எல்லா முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம்.   அதேவேளை, சமூக ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்னெடுப்புகளிலும் நாம் ஆர்வத்துடன் ஈடுபடுவோம்.

XII. உட்கட்டுமானங்களை அமைத்தல்

அரசாங்கத்திடம் இருந்து பெறக்கூடிய அத்தனை வளங்களையும் பெற்று அவசியமான உட்கட்டுமானங்களை அமைக்கும் நடவடிக்கைகளை பாராளுமன்றத்தில் பொறுப்பான செயற்பாடுகளின் மூலம் நாம் மேற்கொள்வோம். அதேவேளை,இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் உதவிகளை உட்கட்டுமான உதவிகளுக்கு பெற்றுக்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். குறிப்பாக நகரங்களையும் கிராமங்களையும் இணைக்கும் பெருந்தெருக்கள், வீதிகள் அமைக்கப்படுவதற்கு எம்மாலான  முயற்சிகளை மேற்கொள்வோம். விசேடமாக, வடக்கையும் கிழக்கையும் இணைக்கும்  வகையில், முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும்  இடையில் அதிவேக நெடுஞ்சாலை  ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை  மத்திய மற்றும் மாகாண அரசுகளின் ஊடாக மேற்கொள்வதற்கு முழுமையாகப் பாடுபடுவோம்.

XIII. விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை அபிவிருத்தி 

விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை ஆகிய தொழில்களே எமது மக்களின் பிரதான ஜீவனோபாய தொழில்களாக காணப்படுகின்றன. விவசாயத் தொழிலை நம்பி மட்டும் ஏறத்தாழ 40 சத வீதமான மக்கள் வடக்கு கிழக்கில் வாழ்கின்றார்கள். அதேபோல, யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் நாட்டின் மொத்த கடல் உணவு உற்பத்தியில் 40 சதவீதத்தை வட மாகாணம் கொண்டிருந்தது. ஆனால், இன்று 20 சத வீதத்துக்கும் குறைவான  கடலுணவையே வட மாகாணம் உற்பத்தி செய்கின்றது. இதற்கான பிரதான காரணங்களில் ஒன்று ஆழ்கடல் மீன்பிடி மேற்கொள்வதற்கான உபகரணங்களை கொள்வனவுசெய்வதற்கு போதிய முதலீடு இல்லாமல் இருப்பதே ஆகும்.  ஆகவே, இந்த மூன்று பிரதான தொழில்துறைகளிலும் நாம் மறுமலர்ச்சி காண்பதற்கு அதிகளவு முதலீட்டை கொண்டுவருவதுடன் நவீன தொழில்நுட்பத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நிலையையும் உருவாக்க வேண்டும். இவற்றை செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கக்கூடிய சிறப்பு வரப்பிரசாதங்களை சிறந்த முறையில் நாம் பயன்படுத்துவதுடன் தமிழக அரசாங்கம்,  தமிழக பல்கலைக்கழகங்கள்  ஆகியவற்றினதும் தமிழக முதலீட்டாளர்களினதும் பங்களிப்புக்களை பெற்றுக்கொள்ளவிருக்கின்றோம். இது தொடர்பில் சில ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரமுகர்கள் தமிழ் நாட்டில் நடத்தியிருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற பிரதிநிதித்துவம் எமது இந்த முயற்சிகளை இலகுபடுத்தும் என்று நம்புகின்றோம். 

XIV. சுகாதாரத்துறை விருத்தி 

வடக்கு கிழக்கில் சுகாதாரத்துறையில் உள்ள பிரதான குறைபாடுகளாக கிராம புறங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் இருப்பதும் வைத்தியசாலைகளில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இருப்பதும் காணப்படுகின்றன. இந்த பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் அரசாங்கத்துக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றபோதிலும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதில்லை. புலம்பெயர்ந்துவாழும் எமது தமிழ் மருத்துவர்கள் தனிப்பட்ட ரீதியிலும் அமைப்புக்கள் ரீதியாகவும் இந்த பிரச்சினைகளை போக்குவதில்   சிறந்த பணிகளை மேற்கொண்டுவருகிறார்கள். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனின் ஊடாகவும் அவரின் முயற்சியினாலும் பல்வேறு செயற்திட்டங்கள் வடக்கு கிழக்கில் நடைபெற்றிருக்கின்றன. எதிர்வரும் காலங்களில் இத்தகைய செயற்திட்டங்களை கூடுதல் முயற்சியுடன் மேற்கொள்வதற்கு நாம் பற்றுறுதி கொண்டிருக்கின்றோம். 

XV. சுகாதாரம்

வடக்கு-கிழக்கில் பல்வேறு கிராம பகுதிகளில் வைத்தியசாலைகள் போதிய வைத்தியர்கள் இன்றியும் அடிப்படை வசதிகள் இன்றியும் இருப்பதை அறிந்துகொண்டுள்ளோம். இதனால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். எம்மால் முடிந்தளவுக்கு சில பகுதிகளில் பிரச்சினைகளை ஏற்கனவே தீர்த்து வைத்துள்ளோம். வைத்திய சங்கம், பல்கலைக்கழகம் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோருடன் இதுதொடர்பில் ஆலோசனைகளை பெற்று அமுல்படுத்தக்கூடிய திட்ட முன்மொழிவு ஒன்றை அரசங்கத்திடம் சமர்ப்பித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம். 

XVI. விளையாட்டு அபிவிருத்தி

எமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்புக்களை பயன்படுத்தி எமது மாணவர்கள் தமது திறமைகளை அகில இலங்கை ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளை புரிந்துவருகின்றார்கள். இவர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை இதுகாட்டுகின்றது. விளையாட்டு அபிவிருத்தி தொடர்பில் கீழ்வரும் செயற்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். 

1. உதைபந்தாட்ட திடல்களில் செயற்கையான தட புல பயிற்சி  வசதிகளை (ளுலவொநவiஉ வுசயஉம யனெ குநைடன வசயiniபெ கயஉடைவைநைள) வடக்கு கிழக்கில் ஏற்படுத்துவதற்கு எம்மாலான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்.  

2. தரை (வுரசக) இடப்பட்ட துடுப்பாட்ட மைதானங்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மாகாண சபை, மத்திய அரசாங்கம் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொள்வதுடன் முறையான துடுப்பாட்ட பயிற்சியை கிராமப்புற மாணவர்களும் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகளை செய்வோம்.
3. பாடசாலைகள் மற்றும் கழகங்களுக்கு இடையே கூடுதலான எண்ணிக்கையில் தடகள மற்றும் கூட்டு விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு ஊக்குவித்து ஆதரவு அளிப்போம்.

XVII. வரலாறு, கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டு மேம்பாடு

தமிழ் மக்களின் தனித்துவம் மிக்க கலை, கலாசாரம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றை பாதுகாப்பதற்கும் மேலும் மேம்படுத்துவதற்கும் அவற்றை முழு உலகமும் அறியச்செய்வதற்கும்  நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடு அவசியம். புலம்பெயர் தமிழ் மக்கள் இதற்கான கட்டமைப்பு ரீதியான முன்னெடுப்புக்களை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடன் இணைந்து  ஒன்றுபட்ட ரீதியாகவும் ஒருங்கிணைந்த ரீதியாகவும் பொருத்தமான ஒரு கட்டமைப்பை இதன்பொருட்டு இங்கே நாம் உருவாக்க இருக்கின்றோம். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அத்துடன், 1958 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு கிழக்கு பகுதிகளில் அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவு ஸ்தூபிகளை அமைக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.

XVIII. இளையோர்களை வலுவூட்டல்

எமது சமுகத்தின் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு இளையோர்களின் காத்திரமான பங்களிப்பு அவசியம். இளையோர்களை முடிந்தளவுக்கு உள்வாங்கி அவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாராக இருக்கிறது. நாம் முன்னெடுக்கவிருக்கும் நிறுவன ரீதியான செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் ஏனைய இளைஞர், யுவதிகளும் இணைந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம். அதேசமயம், போதைப்பொருட்கள் மற்றும் பல்வேறு தவறான வழிகளில் எமது இளையோர்களின் எதிர்காலத்தை சீரழித்து ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் எதிர்காலத்தையும் குழிதோண்டி புதைக்கும் திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இவற்றில் இருந்து எமது இளைய சமுதாயத்தை பாதுகாப்பதற்கு பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் ஏனைய பொருத்தமான உள்ளீட்டு நடவடிக்கைகளும் அவசியமாக இருக்கின்றன. உதாரணமாக, இளையோர்களை கற்றல் தவிர மிகுதி நேரங்களில் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுவதற்கு  ஊக்கப்படுத்துவதுடன் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கும்பொழுது அவர்கள் மது மற்றும் போதைகளுக்கு அடிமையாவதை தடுப்பதுடன் அவர்களின் ஆளுமை தன்னம்பிக்கை என்பவற்றை வளர்த்து அவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள தற்கொலைகளை குறைப்பதற்கும் முடியும்.  இவ்வாறான, செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த நாம் முன்னின்று செயற்படுவோம். 

எமது கடலினூடாக நடைபெறும் கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்கு நாம் தமிழக அரசின் உதவியையும் பெற்றுக்கொள்ள இருக்கின்றோம். 

XIX  மலையக மக்களின் நல்வாழ்வு

எமது உடன்பிறப்புக்களான மலையகத்தில் வாழ்கின்ற மக்களின் பொருளாதார, சமூக மேம்பாட்டுக்கு ஆதரவு கொடுத்து அவர்களை தூக்கிவிடும் கடமையும் பொறுப்பும் எமக்கும் இருக்கிறது என்று உணர்கின்றோம். புலம்பெயர் தமிழ்  மக்களின் உதவியை பெற்று மலையக அரசியல்வாதிகளுடன் இணைந்து அவர்களுக்கான சில அபிவிருத்தி செயற்திட்டங்களை நாம் முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுப்போம்.

XX  இந்தியாவில் உள்ள எமது அகதிகளின் மீளக்குடியமர்வு

தமிழக முகாம்களில் அகதிகளாக வாழும் பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்துவருகின்றார்கள். இவர்கள் அனைவரும் தாயகம் திரும்பவேண்டும் என்பதே எமது விருப்பம். ஆனால், எத்தகைய சமூக, பொருளாதார நிபந்தனைகளின் கீழ் அவர்கள் வாழ்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம். அதனால், அவர்களுக்கு இருக்கக்கூடிய சட்ட ரீதியான பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்குஇரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துவோம். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தியாவுக்கு சென்றிருந்தவேளை இந்த வலியுறுத்தலை மேற்கொண்டிருந்தார்.  அதேவேளை, தமது சொந்த இடங்களுக்கு திரும்பி மீள்குடியேற விரும்புபவர்களுக்கு உரிய வசதிகள் மற்றும் வாழ்வாதாரம் ஏற்படுத்திக்கொடுக்க இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுப்போம்.

XXI. இந்திய மீனவர்களின் அத்துமீறல்

தமிழ்த் தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்பதற்காக இடம்பெற்ற ஆயுதப் போராட்ட காலத்தில் இந்திய குறிப்பாக தமிழக மீனவர்களின் உதவிகள் மகத்தானது. அவர்களின் உதவியை நாம் நன்றியுடன் நினைவுகூர்கிறோம். அந்தப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டுள்ள சூழலில் எமது மீனவர்கள் இப்பொழுதுதான் தமது வாழ்வாதரத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் மெல்ல மெல்ல ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை காலமும் அவர்களது மீன்பிடி நடவடிக்கைகள் இலங்கைக் கடற்படையினரால் தடைசெய்யப்பட்டிருந்தது. எனவே கடந்த காலத்தில் தமிழக மீனவர்கள் செய்த உதவிகளைப் போன்றே இப்பொழுதும் எமது மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமாகத் திகழும் மீன்பிடித் தொழிலை இடையூறின்றி மேற்கொள்வதற்கு வழிவிட்டு உதவிட வேண்டும் என்று கோருகிறோம். பலருக்கு இருநாட்டு மீனவ சமுதாயங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தேவை இருக்கிறது. அந்த சதிவலையில் சிக்காமல் நம் உறவுகள் பாதுகாக்கப்படவேண்டும்.

XXII. எமது சர்வதேச உறவு

சர்வதேச ரீதியில் எல்லா நாடுகளுடனும் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார மேம்பாட்டை ஏற்படுத்தவும் நாம் தொடர்புகளை பேணுவோம். இதில் இந்தியா முக்கியமானது.  இலங்கையில் தமிழ் மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் சுயநிர்ணய உரிமையினையும் உறுதிப்படுத்துவது மட்டுமன்றி வடக்கு கிழக்கின் சமூக,பொருளாதார மறுமலர்ச்சிக்கும் இந்தியா காத்திரமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ளவேண்டும். இதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம். குறிப்பாக, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் காங்கேசன்துறை, திருகோணமலை,  தலைமன்னார் ஆகிய இடங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தினை ஆரம்பிப்பது வடக்கு கிழக்கில்  பொருளாதார முதலீடுகளுக்கு வழிவகுப்பதுடன் பாரிய பொருளாதார வளர்ச்சிக்கும்  வித்திடும் என்றும் நம்புகின்றோம்.  இதுதொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகளை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மேற்கொள்ளும். அத்துடன், விசேடமாக, தமிழக மக்களுடன்பொருளாதார உறவுகளை புதிய பரிமாணத்துக்கு கொண்டுசெல்லும் செயற்பாடுகளில் நாம் அக்கறையுடன் செயற்படுவோம். தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள், வர்த்தக சம்மேளனங்கள், முதலீட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் கலைஞர்களுடன் உறவுகளை வலுப்படுத்தி துறைசார் வளர்ச்சிகளை வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்படுத்துவதற்கு நாம் திட்டங்களை கொண்டுள்ளோம்.

இறுதியாக உங்களிடம் ஒரு வேண்டுகோள்

பதவி  மோகம், சலுகை மற்றும் சரணாகதி அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல தோல்விகளுக்கும் தவறுகளுக்கும் மிக முக்கியமான மற்றொரு ஒரு காரணம்  ஒரு சிலர் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்து செயற்பட்டமை ஆகும். அந்த தவறை நாம் விடப்போவதில்லை.  எமது செயற்பாடுகள் நிறுவன ரீதியான கட்டமைப்புக்களின் ஊடாக நன்கு ஆராயப்பட்டு  முன்னெடுக்கப்படவிருக்கிறது. நிறுவனமயப்படுத்தல் என்னும்பொழுது  அரசியல் தீர்வு விடயம் சரி, சமூக, பொருளாதார மேம்பாடு சரி எதுவானதாக இருந்தாலும் அவற்றுக்கான செயற்பாடுகளின் நிலைத்துநிற்கும் தன்மையும் உபாயங்களும் தனி ஒருவரில் தங்கி இருக்காமல் அந்த நோக்கங்கள்  தொடர்பிலான கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளின் மீதான கூட்டுப்பொறுப்பிலும் பற்றுறுதியிலும் தங்கி இருத்தலாகும். இதன் அடிப்படையில், உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் தமிழ் புத்திஜீவிகளை ஒருங்கிணைத்து நிலத்திலும் புலத்திலும் கட்டமைப்புக்களை உருவாக்கி செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். நாம் மேலே குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை இந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே பெற்றுத்தரும்.

அதேபோல, இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வினை காண்பதற்கு நாம் முன்வைக்கும் யோசனைகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவானதாகவும் முரண்பாட்டு கோட்பாடுகளுக்கு அமைவானதாகவுமே இருக்கின்றன. இவை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெற்றிகரமாக பிரயோகிக்கப்பட்ட மேலும் நடைமுறையில் இருக்கும் வழிமுறைகளே. தமிழ் மக்களின் அடையாளத்தையும் இருப்பையும் அழிப்பதையே குறியாகக்கொண்டு செயற்;படும் இலங்கை அரசு ஒருபோதும் தமிழ் மக்களுக்கு தீர்வு எதனையும் வழங்கப்போவதில்லை என்பதையும் சர்வதேச உத்தரவாதம் இன்றி எந்த உடன்படிக்கையையும் இலங்கை அரசு மதிக்கப்போவதில்லை என்பதையும் யுத்தத்துக்கு முந்திய வரலாறும், யுத்த கால வரலாறும், யுத்தத்துக்கு பிந்திய வரலாறும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றன. ஆகவே தான் ஒரு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு சர்வதேச சமுகத்தை நாம் கோருகின்றோம். அதேபோல, இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது?  ஏன் தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு அவசியம் என்பவற்றை சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு நிரந்தர தீர்வு ஏற்படுவதற்கு அவர்களும் ஒத்துழைக்கவேண்டும் என்பதற்காகவே சர்வதேச விசாரணையை நாம் கோருகின்றோம்.

ஆகவே, வடக்கு கிழக்கில் வாழுகின்ற எமது அன்புக்கினிய மக்களே! தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்ற விதியை தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக ஆவணி 5, 2020  திகதி அன்றைய பாராளுமன்ற தேர்தல் அமைகிறது. உங்கள் வாக்குகள் தான் அந்த விதியை எழுதப்போகின்றன. நீங்கள் எழுதும் விதி வடக்கு- கிழக்கில் “மீனாட்சி” மலர்வதற்கானதாக இருக்கட்டும்.  நாம் ஒருபோதும் தமிழ் மக்களின் உரிமைகள், நல்வாழ்வு பாதுகாப்பு ஆகியவற்றுக்கான எமது பற்றுறுதியில் இருந்து தளரமாட்டோம். “மீனுக்கு” புள்ளடி  இட்டு நல்லதொரு மாற்றத்தை தமிழர் வாழ்வில் ஏற்படுத்தும் ஆயுதங்களாக உங்கள் வாக்குகள் மாறட்டும்!  எமது தமிழ் மக்களின் அரசியல் சமூக, பொருளாதார மாற்றுக்கும் கலாசார அபிலாஷகளை வென்றெடுப்பதற்கும் வலுவூட்டுவதாக அவை அமையட்டும்! இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக அவை அமையட்டும்! நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களின் கரங்களைப் பலப்படுத்துவதாக அவை அமையட்டும்! உங்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாக அவை அமையட்டும்! நீங்கள் சென்றமுறை வழங்கிய அதிகாரத்தை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாக அவை அமையட்டும்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினால் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில்26.07.2020ந் திகதி அன்று இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.








































No comments