மீண்டும் நாடகம்:படை தரப்பு மும்முரம்!


உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகளை விடுவிப்பதென்ற பேச்சிற்கே இடமில்லையென வாதிட்டுவரும் இலங்கை இராணுவம் மறுபுறம் ஒற்றை வீடுகளை கட்டிவழங்கி பிரச்சாரங்களில் மும்முரமாகியிருக்கின்றது.

அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் பெண்ணொருவருக்கு , இராணுவத்தினரால் வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.யாழ். மாவட்டத்தில் வீடற்ற வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும் செயற்திட்டம், யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கமைய ஏழு வருடங்களாக இராணுவத்தில் கடமையாற்றும் தமிழ் பெண்மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பலாலி தெற்கு வசாவிளானில், இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் கையளிக்கப்படடுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் பெண்மணி கடந்த ஏழு வருடங்களாக யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ஊடகப் பிரிவில் கடமையாற்றி வருகின்றாராம்.

எனினும் அவருக்கு நிரந்தர வீடு இல்லாததன் காரணமாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி எடுத்த முயற்சியின் பயனாக குறித்த பெண்மணிக்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் உயர்பாதுகாப்பு வலயத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகள் விடுவிப்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவ்வாறு விடுவிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments