வடகிழக்கு தமிழருக்கு இல்லை?


இலங்கையில் தமிழர்களிற்கு பூர்வீக பிரதேசம் ஒன்றில்லை. இங்கு பௌத்தத்திற்கு முன்னுரிமையளிப்பதில் தவறில்லை. வடக்கு கிழக்கு பூர்வீக பிரதேசம் என்பதே பிரபாகரனின் கோசம். அதைத்தான் நீங்கள் முன்னெடுக்கிறீர்கள் என தமிழர்களை மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறார், கோட்டாபய ராஜபக்சவின் கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினரான  எல்லாவல மேதானந்த தேரர்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாட்டையே பிரதிபலிக்கின்றீர்கள். பிரபாகரனே வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்று பிரகடனம் செய்தார். இலங்கையில் தமிழர்களுக்கான பூர்வீக பிரதேசம் எங்குள்ளது. இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமத்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறிருக்கையில் தமிழர்களுக்கு என்று விசேடமாக பூர்வ பிரதேசமென்ற ஒன்று இல்லை.


குறிப்பாக கிழக்கு மாகாணத்தினை எடுத்துக்கொண்டால் அது தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக கொள்ள முடியாது. கிழக்கிலங்கையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொல்பொருள் இடங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் பௌத்த, சிங்கள வரலாற்றுத் தொன்மங்களாகவே காணப்படுகின்றன. அங்கு தமிழர்களுக்கான பூர்வீக பகுதி எங்குள்ளது. சிங்களவர்களுடன் தமிழர்கள் வாழ்வதற்கு எங்குமே தடை செய்யப்படவில்லை.

மேலும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சிங்கள பெரும்பான்மையின படையினராலேயே பாதுகாக்கப்பட்டார்கள். கடந்த காலத்தில் தமிழர்களின் போராட்டக் குழுக்கள் அரங்கேற்றி படுகொலைகளை மறந்துவிட வேண்டாம். அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர்கள் சிங்களப் படையினர்களே. ஆகவே இலங்கையில் தமிழர்களுக்கென்று இல்லாத பூர்வீக பிரதேசத்தை இருக்கின்றது என்று கூறி இனவாதத்தினையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்க முயலவேண்டாம்.

தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் தமிழ் மக்களுக்கு எள்ளளவும் அநீதி இழைக்கப்படவில்லை. அவ்வாறான தலைவர்கள் ஆட்சியில் இருக்கின்றபோது அவர்களுடன் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் சார்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அதற்கு யாரும் தடைகளை விதிக்கவும் முடியாது.

அரசியலமைப்பு விடயத்தில் கூட்டமைப்பு போன்ற தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களை தவறாக வழிநடத்துகின்றார்கள். இந்த நாட்டில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அசாதாரண சூழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் தென்னிலங்கைக்கு நிகராக வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்வதில் மத்திய அரசாங்கம் பல்வேறு பணிகளை முன்னெடுத்தள்ளது. அவ்வாறிருக்கையில் அதிகாரப்பகிர்வின் அவசியம் என்ன?

சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட உள்நோக்கத்திலேயே அதிகாரப் பகிர்வினை தமிழ்த் தலைவர்கள் கோருகின்றார்கள். மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் இருப்பதிலுள்ள பிரச்சினைகள் என்ன? மத்திய அரசாங்கம் பாரபட்சமின்றி செயற்படுகின்ற நிலையில் அதிகாரப்பகிர்வு யாருக்கு தேவையாகவுள்ளது.

நாட்டினை சிறப்பாக நிருவகித்துச் செல்வதற்கான அடிப்படைச் சட்டமாக இருப்பதே அரசியலமைப்பாகும். அதில் விரும்பியவாறெல்லாம் திருத்தங்களை மேற்கொள்ளமுடியாது.

மாறிவரும் ஒழுங்குகளுக்கு ஏற்ப அடிப்படைச்சட்டங்களில் மாற்றங்கள் அவசியமாக இருந்தால் உரிய பிரேரணைகள் ஊடாக பாராளுமன்றில் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

அதனைவிடுத்து விரும்பிய நபர்களுக்கோ அல்லது குழுவினருக்கோ ஏற்றால் போல் அரசியலமைப்பில் மாற்றங்களை செய்வது கேலிக்கூத்தாகும். குறிப்பாக அதிகாரப்பகிர்வு விடயத்தில் ஒருதரப்பினரை திருப்தி செய்வதற்காக திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. மேலும் புதிய அரசியலமைப்பொன்று இந்த நாட்டிற்கு அவசியமா இல்லையா என்பதை ஜனாதிபதியும் பிரதமருமே தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்களாக காணப்படுகின்றார்கள் கிறிஸ்தவம், இஸ்லாம் சமயங்கள் வர முதலே பௌத்த சமயம் இருந்து வருகின்றது. அத்துடன் அரசியலமைப்பிலும் அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே பௌத்தத்தை பேணிக்காப்பதில் தவறில்லை. அதேநேரம் அவர்கள் ஏனைய இன, மதங்களையும் புறந்தள்ளவில்லையே. அதற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றார்கள்.

பௌத்த பிக்குமார் அரசியலுக்காக பயன்படுத்தப்படவில்லை. மாறாக நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது அவர்களே முன்னிலையாகி அவற்றை சுமுகமாக தீர்ப்பதற்கு உதவியிருக்கின்றர்கள் என்பதே இந்தநாட்டின் வரலாறாக இருக்கின்றது. அவ்வாறு அவர்கள்செயற்பட்டதன் காரணத்தினால் தான் தமிழ், முஸ்லிம் தரப்பினரும் இங்குள்ள பல்மதத்தவர்களும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

என்னைப்பொறுத்தவைரயில் கருணா அம்மான் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஜனநாயக முரண்பாட்டு செயற்பாடுகளால் வெறுப்படைந்தே அதிலிருந்து வெளியேறினார். எம்முடன் நட்புறவுகளை மேம்படுத்தி இணைந்து செயற்பட்டார். அவர் கடந்த காலத்தினைப் பற்றிக் கூறியிருக்கின்றார்.

அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் இந்த நாட்டில் உயிர்ப்பலிகளுக்கு காரணமாக இருந்த அரசில் கட்சிகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆகவே வரலாற்றில் கடந்த காலங்களில் தவறிழைத்தவர்கள் அதனை மீண்டும் செய்யாது இழைக்கப்பட்ட தவறுகளை தவறு என்றெண்ணி நினைவு கூருவது எந்தவகையில் தவறாகும்? தற்போது அரசியலை மையப்படுத்தியே கருணா அம்மான் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றார்.

No comments