உங்கள் பயன்தரு மரநடுகை செயற்றிட்டம் பற்றிக் கூற முடியுமா?

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளில் மரநடுகை செயற்திட்டம் குறித்து ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு முன்னாள்
வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிய விளங்கத்தை கீழே பார்வையிடலாம்.

கேள்வி: உங்கள் பயன்தரு மரநடுகை செயற்றிட்டம் பற்றிக் கூற முடியுமா?

பதில்: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரமானது ஆண்டு தோறும் மே மாதம் 18ந் திகதியை யொட்டிய காலமாகும். அது அரசாங்க படைகளின் அட்டூழியத்தால் அகால மரணமடைந்த எமது மக்களின் நினைவாக நாம் செலுத்தும் எமது அஞ்சலி நிகழ்வுகளின் வாரமாகும். இறந்தவர்களுக்கும் பயன்தரு மரநடுகைக்கும் என்ன தொடர்பு என்று கேட்பீர்கள். தொடர்பு இருக்கின்றது. இனப்படுகொலையின் போது எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் உடல்கள் புதைக்கப்பட்டு அவை மண்ணோடு மண்ணாகிவிட்டன. எரிக்கப்பட்டவர்களின் சாம்பல் மண்ணுக்கு உரமாகி விட்டது. மண்ணோடு மண்ணாகக் கலந்த அந்த உடல்களின் எஞ்சியவை வீணாகப் போய்விடக்கூடாது. மீண்டும் அவை உயிர்த்தெழ வேண்டும். எம் மக்களின் வைராக்கியத்தை வலுவேற்ற வேண்டும். அவர்கள் மரணம் வெறும் மரணமாக ஆகிவிடக்கூடாது. எமது வருங்காலத்தை மாற்றி அமைக்கும் வலுவான ஊட்டமாக அவர்களின் உடற் துகள்கள் மாறவேண்டும். அவர்களால் மெருகூட்டப்பட்ட உரம் எமக்கு ஊட்டமாகவும் உற்சாகம் கொடுக்கும் உணவாகவும் மாற வேண்டும். அவர்களின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன எரிக்கப்பட்டன என்பது முக்கியமல்ல. இந்த வட கிழக்கில் எமது தாயகத்தில் எங்கோ ஒரு இடத்தில்த் தான் நிலத்துடன் கலந்துள்ளனர். இந்த நிலத்தில் விருத்தியாகப் போகும் பயன் தரு மரங்கள் எமது மரணித்த உறவுகளின் உடலின் உரத்தையும் தம் வசம் ஈர்த்தெடுக்கப் போகின்றன. ஆகவே மே பதினெட்டில் ஒவ்வொருவரும் ஒரு பயன்தரு மரம் நாட்டுங்கள். தமிழர் தாயகத்தை வளப்படுத்துங்கள்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
செயலாளர் நாயகம், தமிழ் மக்கள் கூட்டணி

No comments