ஏமாற்றி ஆட்டையப் போட்ட தோட்ட நிர்வாகம்

நுவரெலியா - திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டதாகவும், ஒரே தடவையில் கூடுதல் தொகை அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இந்தப் போராட்டம் மேபீல்ட் தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக இன்று (6) முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு சலுகைக் கடன் அடிப்படையில் சில உணவுப் பொருட்களை வழங்குவதற்குத் தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்திருந்தன.

பெருந்தோட்ட மனிதவள நிதியம் உட்பட இன்னும் சில தரப்புக்களின் தலையீட்டுடன் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்றும், பின்னர் ஜூன், ஜூலை மாதத்திலிருந்து தவணை அடிப்படையில் அக்கொடுப்பனவு அறவிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சலுகைக் கடன் அடிப்படையில் வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்களுக்கான கொடுப்பனவை ஜூன் மாதத்திற்குப் பிறகே அறவிடப்படும் என தோட்ட நிர்வாகம் முன்னதாகக் கூறியிருந்தது.

இருந்தாலும் இம்மாதத்திலிருந்தே இக்கொடுப்பனவு அறவிடப்பட்டுள்ளது. இது பெரும் அநிதியாகும். ஆயிரத்து 650 ரூபாய்க்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவிட்டு ஒரே தடவையில் அறவிடுவது மனிதநேயமற்ற செயல் என போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் கருத்து வெளியிட்டனர்.

அத்தோடு, கடந்த மாதத்தில் உரிய முறையில் தொழில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளமும் எடுத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இக்கொடுப்பனவுக்கான கட்டணம் அறவிடப்பட்டுள்ளமையானது மனிதநேயமற்ற செயலாகும் என மக்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக மேபீல்ட் அதிகாரி தெரிவிக்கையில், 'கட்டணம் அறவிடுவது பற்றி கடந்த மாதம் 28ம் திகதியே தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பொழுது எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. திடீரென நேற்று வந்துதான் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர்.

அதேபோல், 3 ஆயிரத்து 300 ரூபாய்க்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. ஆகவே ஆயிரத்து 650 ரூபாய்க்குத்தான் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்பகுதியில் உள்ள கஷ்டமான குடும்பங்களுக்கு இனிவரும் காலப்பகுதிகளிலும் நிவாரணங்கள் வழங்கப்படும்' என அவர் தெரிவித்தார்.

No comments