கொரோனாவுக்குள் நடந்த தேர்தல்; வென்றது ஆளும்கட்சி

உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று ஆட்டுவிக்கும் நிலையில் தென்கொரியாவில் நேற்று (15) நாடாளுமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி மூன்-ஜே-இன் தலைமையிலான லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

அமைதியாக நடைபெற்ற இந்த தேர்தலில் ஏராளமானோர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்குப் போட்டனர்.

ஒவ்வொருவரும், வெப்பமானி சோதனைக்கு பிறகே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப் பட்டனர். அதன்பின், கை துாய்மைக்கான கிருமி நாசினி, ´ஜெல்' அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சுயமாக தனிமையில் உள்ளோருக்கு, இதர வாக்காளர்களுக்கான வாக்குப் போடும் நேரம் முடிந்ததும், வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

இதன்படி 300 ஆசனங்களை கொண்ட நாடாளுமன்றில் 1987ம் ஆண்டுக்கு பின்னர் கூடிய ஆசனங்களை பெற்ற கட்சியாக ஆளும் கட்சி 180 ஆசனங்களை பெற்று கூடுதல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கின்றது.

இதேவேளை தென்கொரியாவில் இன்று (16) வரை கொரோனா வைரஸ் தாக்கி 10,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 229 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments