சராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்?


'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதனையே குறிப்பிட்டுள்ளதாக கூறி , பத்திரிக்கைக்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனின்  சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்துடன் தொடர்புபடுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மீது  உண்மைக்கு புறம்பான செய்தியினை வெளியிட்டமை தொடர்பிலேயே இந்த  இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

பத்திரிகையின் உரிமையாளர் தேர்தலில் ஒரு வேட்பாளராக களமிறங்கும் நிலையில் எதிர்த்தரப்பு வேட்பாளராக அங்கஜன் ராமாநான் உள்ளமையினால்  அவருக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டு கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வித ஆதாரமுமின்றி  உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு தேர்தலுக்கான கபட நோக்கத்தில் அவதூறு ஏற்படுத்துவதாக  அந்த இழப்பீட்டு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் காலப்பகுதியை பயன்படுத்தி தமது கட்சிக்காரருக்கு வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் உள்ள நன்மதிப்புக்கு குந்தகம் ஏற்படுத்துவதே குறித்த பத்திரிகை பிரசுரித்த செய்தியின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளதாக  அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 14 நாட்களிற்குள்  தமது கட்சிக்காரருக்கு 100 கோடி ரூபா  நட்டஈடு வழங்கத் தவறும் பட்சத்தில் குறித்த பத்திரிகையின் உரிமையாளர் மீது சட்டநடவடிக்கையெடுக்கவுள்ளதாக அங்கஜன் ராமநாதனின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

No comments