முடிவெட்டினாரா மாநகர ஆணையாளர்? மக்கள் விசனம்!

தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தின் போது சட்ட விரோதமாக செயற்பட்ட சிகை ஒப்பனை நிலையம் குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனத்தையும் எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,

ஜே/107 நல்லூர் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட, நல்லூர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள சிகை ஒப்பனை நிலையம் (வீடும் கடையும் இணைந்து காணப்படுவதால்) பெயரளவில் பூட்டப்பட்ட நிலையில் வீட்டின் வாயிலூடாக சிகை ஒப்பனை நிலையம் சென்று வேலைகள் இடம்பெற்று வருகிறது. இது ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இருந்து இயங்கி வருவதாக மக்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

மேலும் (04/04/2020) சனிக்கிழமை நேற்று முன்தினம் யாழ் மாநகர சபை ஆணையாளரும், அங்கு தனது வாகனத்துடன் சென்று தலை முடி வெட்டியது வெளிச்சத்திற்கு வந்தது. சட்டத்தை அமுல் படுத்தியவர்கள் சட்டத்தை மீறி நடந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றும், குறித்த சிகை ஒப்பனை நிலையத்தால் எமது சமூகத்திற்கு கொரோனா தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அரியாலை பகுதிக்கு அருகாமையில் நமது பிரதேசம் (நல்லூர்) அமைந்துள்ளமையால் நமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாநகர சபை ஆணையாளரிடம் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருத்து கேட்கையில்,

சலூன் போன்றவற்றை பூட்டச் சொல்லி சட்டமும் நடைமுறையும் இல்லை எனவும், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னாேல்ட் கோரிக்கைக்கு அமைவாக சிகை ஒப்பனை நிலையம் பூட்டப்படுவதாக கூறியதற்கு தான் அதை நம்பவில்லை எனவும் முதல்வர் யாருக்கு கடிதம் கொடுத்தது எனவும் கேள்வி எழுப்பியிருந்தார், தான் சுகாதார துறைக்கு கேட்ட போது தமக்கு அவர்கள் சம்பந்தமாக எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை என கூறியிருந்தனர்.

சிகை ஒப்பனை நிலைய சங்கம் ஒப்பனை நிலையத்தை மூடச் சொன்னது. பத்திரிகை வாயிலாக இந்த செய்தி வந்ததாக தான் அறியவில்லை எனவும், இது சம்பந்தமாக முதல்வரின் பிரதி ஒன்றும் தனக்கு கிடைக்கவில்லை எனவும், உங்கள் மேல் குற்றச்சாட்டு வந்தது உண்மையா? என கேள்வி எழுப்பிய போது, குற்றச்சாட்டை யார் வைத்தது, அதனை அலுவலக ரீதியாக கொண்டு வாருங்கள் எனவும், உத்தியோகபூர்வமாக தர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

யாழ் மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கத்திற்கு யாழ் மாநகர சபை முதல்வர் (20/03/2020) கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். யாழ் முதல்வரின் கருத்திற்கு அமைவாக சிகை ஒப்பனையாளர் சங்கம் இரண்டு வாரங்களுக்கு தமது செயற்பாட்டை நிறுத்துவதற்காக, பத்திரிகையூடாக சங்க உறுப்பினர்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

17/03/2020 வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பாக நடந்த கலந்துரையாடல் மூலம் தீர்மானங்கள் யாழ் மாநகர சபை முதல்வரால் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாநகர சபை ஆணையாளர்  இ.த.ஜெயசீலன் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக தான் அவருக்கு தலை முடி வெட்டியதாகவும், தனது வாகனத்தில் தான் வந்தவர் என்பதையும் சிகை ஒப்பனை நிலைய உரிமையாளரின் தாயார் உறுதிப்படுத்தியுள்ளார்.

வடமாகாண சிகை ஒப்பனை சங்கத் தலைவரும் யாழ்ப்பாண சங்க தலைவரும் குறித்த நல்லூர் சிகை ஒப்பனை நிலையம் தொடர்பாகவும் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றது என தெரிவித்திருந்தனர்.

தங்கராசா ஷாமிலன்

No comments