ஆசிரிய சங்கம் ஆதரிக்காது:ஜோசப் ஸ்ராலின்!


அச்சுறுத்தல் நிறைந்த இந்த சூழலில் – பாடசாலைகளை இராணுவத்தினருக்கு வழங்கும் செயற்பாட்டை கல்வியமைச்சு உடன் நிறுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது பாடசாலைகளிலும் - ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இராணுவத்தினரை தங்கவைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக தனது ஊடக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் பாடசாலைகள் சிலவற்றை - இராணுவத்தினர் சில தேவைகளுக்கு - இதற்கு முன்னர் பயன்படுத்தியிருந்தாலும் கூட – தற்போது கொரோனா நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் - இராணுவத்தினர் தங்கவைக்கப்படுவதை எதிர்த்து - கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரி- கோப்பாய் ஆசிரியர் கலாசாலை போன்ற கல்வி நிறுவனங்களை சூழவுள்ள மக்களால் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன. எனவே - இந்த அச்சமான சூழ்நிலையில் - தனிமைப்படுத்துதல் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்தல் என்னும் போர்வையில் - பாடசாலைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவே - மக்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகிள்ளது.

இந்தச் சூழலில் - பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையூம் இராணுவத்தினருக்கு வழங்குவதை அரசு நிறுத்தவேண்டும். நாடுபூராகவும் 43 லட்சம் மாணவர்கள் கல்விகற்றுவரும் நிலையில் - பாடசாலைகளை சூழ உள்ள சமூகத்தினருக்கு அச்சமூட்டும் வகையில் செயற்பாடுகள் நடைபெறுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்கள் செறிவு நிறைந்த இடங்களிலமைந்த பாடசாலைகள் - மற்றும் நிறுவனங்களில் - இத்தகைய தனிமைப்படுத்தல் நிலைகளை அமைக்க முயற்சிப்பதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக – வடக்கு மாகாணக் கல்வியமைச்சிடம் - வடமராட்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் - பாடசாலைகள் சிலவற்றை வழங்குமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு – கொரோனா நோய்த்தொற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பாடசாலைகளையும், கல்வி நிறுவனங்களையும் வழங்குவதை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்க்கிறது.

''தனிமைப்படுத்தல் நிலையங்களாக பாடசாலைகள் மாற்றப்படாது” எனக் கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையில் - இதன் உண்மைத்தன்மைகளை கல்வியமைச்சு முறையான அறிக்கையூடாக வெளிப்படுத்தவேண்டும எனவும் அது கோரியுள்ளது.

No comments