தட்டுப்பாடு ஏதுமில்லையாம்?


அத்தியாவசிய பொருட்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்த அவர் பதுக்கலில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வடக்கில் மக்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அதிகளவான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டு வருவதோடு மொத்த வியாபாரிகள் பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இது தேவையில்லாத ஒரு விடயம் கொழும்பில் இருந்து பொருட்கள் வழமை போன்று யாழிற்கு எடுத்துவரப்பட்டு கொண்டிருக்கின்றன.

அதைவிட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை தாராளமாக வழங்குமாறும், எந்தவித பிரச்சினையும் இல்லாது மக்களுக்கு விநியோகிக்குமாறும் நான் தற்பொழுது கூட்டுறவு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளேன்.

அத்தோடு, யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருட்களைப் பதுக்கி வைத்து வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளை உடனடியாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கட்டளை விடுத்துள்ளேன்.எனவே பொதுமக்கள் பொருட்கள், எரிபொருள் தட்டுப்பாடு என்று அச்சமடையத் தேவையில்லை என மகேசன் தெரிவித்தார்.
இதனிடையே தென்னிலங்கையிலும் கடுமையான அத்தியாவசிய பொருட்களிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments