பாலியல் பகிடிவதை:விசாரணைக்கு மாணவர் ஒன்றியமும் ஆதரவு?
யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் எல்லையற்ற பகிடி வதை இடம்பெறுகின்றமை , தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள, மாணவர் ஆலோசகர்கள் மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழுவே அமைக்கப்பட்டுள்ளது.
குழுவானது சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துதல் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள் வட்ஸ்அப் தகவல்கள் அலைபேசி உரையாடல்கள் அடங்கிய தரவுகளை சைபர் கிரைம் ஊடாக விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பகிடி வதை காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பில்; ஜனாதிபதி,உயர் கல்வி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அந்த முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
இதனிடையே பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம் . சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கிறார். அவர் வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குச் சென்று இந்த விடயங்கள் தொடர்பில் நேரில் ஆராய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்று வரும் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வருகை தரவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
Post a Comment