நெடுந்தீவு கூட்டமைப்பு வெளியேயாம்?

நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் தெரிவுக்கான சபை அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளனர்.


குறித்த சபையின் தங்கேஸ்வரி ஜெயச்சந்திரன், சிந்தைக்குலனாயகி அனுசாந்தன், பரமேஸ்வரி இராசலிங்கம் ஆகியோர் நேற்று செவ்வாய் கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்ப்படி அறிவிப்பினை விடுத்துள்ளனர்.



அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் பிரதேசசபை பங்கீட்டில் நெடுந்தீவு பிரதேச சபையினை எமது கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோவிற்கு தமிழ் தேசியகூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் வழங்கியிருந்தன.



அந்த வகையில் பின்வரும் நெடுந்தீவு பிரதேசசபை உறுப்பினர்களாகிய நாமும் எமது கட்சி சார்பில் நெடுந்தீவு பிரதேசசபைக்கு போட்டியிட்டோம். நாம் போட்டியிட்ட எட்டு வட்டாரங்களிலும் எமது கட்சிக்கு இரண்டு வட்டாரங்களே கிடைக்கப் பெற்றன.



எமது கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகளின் அடிப்படையில் எமது கட்சிக்கு மேலதிகமாக இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைத்தன. மொத்தம் பதின்மூன்று உறுப்பினர்களை கொண்ட நெடுந்தீவுப் பிரதேசசபையில் ஆட்சியினை அமைப்பதற்கு நான்கு ஆசனங்களைக் கொண்ட எமது கட்சிக்கு போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த ஒரு உறுப்பினர் எமக்கு ஆதரவு வழங்க முன் வந்தார்.



ஆட்சி அமைப்பதற்கு மேலும் இரண்டு ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில் கேடய சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு தெரிவாகிய இரு உறுப்பினர்கள் ஆட்சி அமைக்க ஆதரவை வழங்க முன் வந்தனர், ஆட்சி அமைக்கப்பட்டது.



ஆட்சி அமைக்கப்பட்ட கடந்த இரண்டு வருட காலத்திலும் ஆளும் கட்சியாலும் பிரதேசசபையாலும் மக்கள் நலன் சார்ந்தும் பிரதேச நலன் சார்ந்தும் சபையில் முன் மொழியப்பட்ட பிரேரணைகள், கோரிக்கைகள், தீர்மானங்கள், முடிவுகள் அனைத்தையும் எதிர்கட்சியான ஈபிடிபியினருடன் இணைந்து சுயேட்சை குழுவின் இரு உறுப்பினர்களும் தீவிரமாக உள்ளும் புறமும் விமர்சித்தும், எதிர்த்தும்,
வந்ததோடு சபையை தொடர்ந்து இயங்க விடாமல் தடுத்து, வந்ததுடன் நாம் ஆட்சி அமைத்து ஒரு மாத காலம் கடந்த நிலையில் எமது சபையின் உபதவிசாளரும் சுகயீனம் காரணத்தால்
மரணமடைந்த நிலையில் அவரின் வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவரை எமது கட்சியின்
சார்பில் நியமித்த பின் உபதவிசாளர் தெரிவுக்கான தேர்தல் உரிய அதிகாரிகளால் ஐந்து
தடவைகள் நடத்தப்பட்டபோதும் ஐந்து தடவையும் ஈபிடிபியினருடன் இணைந்து சுயேட்சைக்குழு
உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்து உபதவிசாளர் தெரிவை தடுத்தும் வந்தனர்.



இதனால் இரண்டு வருடங்களாக உபதவிசாளர் இல்லாமலே சபையை இயக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.



அத்தோடு வரவு செலவு திட்டங்களையும் எதிர்கட்சியான ஈபிடிபியினருடன் இணைந்து எதிர்த்து வாக்களித்து தோற்கடித்தனர். இதனால் நாம் சபையில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டோம். சபையை செயற்படுத்த முடியாத இக்கட்டான நிலைக்கும் தள்ளப்பட்டோம்.



இந்நிலையில் நெடுந்தீவு பிரதேசசபையில் தவிசாளர் பதவியும் பறிதாகியுள்ளது. அதற்கான தேர்தல் 25.02.2019 அன்று நடைபெற்றது.



சபையில் தொடர்ந்து ஆட்சி அமைக்க எமது கட்சிக்கு போதிய பெரும்பாண்மையும் ஆதரவும் இல்லாத காரணத்தாலும் புதிய தவிசாளர் தெரிவு தொடர்பாக சுயேட்சைக்குழுவும் எமது கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோவின் தலைமையுடன் எந்தவொரு கலந்துரையாடலையும் மேற்கொள்ளாத காரணத்தாலும் தவிசாளர் தேர்வு கூட்டத்திற்கு
நாம் மூவரும் செல்வதில்லை என முடிவெடுத்தோம் என்றுள்ளது.

No comments