சவேந்திரவை போல் பலருக்கும் தடை வரும்!

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததாலேயே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான தடையை அமெரிக்கா விதித்தது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இலங்கை அரசாங்கம் விலகுவதால் வலுவிழக்காது. இந்தத் தீர்மானங்கள் இலங்கையும் இணை அனுசரணை வழங்கியதால் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

ஏற்கனவே இலங்கை எதிர்ப்புத் தெரிவித்த போதும், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை இலங்கை எதிர்த்ததால் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இலங்கை எதிர்த்தது என்பதால், அவை வலுவிழக்கவில்லை.

2014ம் ஆண்டு வாக்கெடுப்பினால் நடத்தப்பட்ட தீர்மானத்தில், சர்வதேச விசாரணை நடத்தும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தபோதும் சர்வதேச விசாரணை நடந்து முடிந்து அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

நாம் ஒத்துழைக்க மாட்டோம் என இலங்கை விலகலாம். மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதுவும் அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தாது. அதனால் விலகுகிறோம் எனச் சொல்லத் தேவையில்லை. அதற்கு அர்த்தம் கிடையாது. நாம் ஒத்துழைக்க மாட்டோம் எனக் குறிப்பிடலாம். எனினும், எதிர்வரும் தேர்தலில் தம்மை தேசிய வீரர்களாகக் காட்ட இப்படி அறிவித்துள்ளனர்.

அரசாங்கம் இப்படிச் செய்யலாமென எதிர்பார்த்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அரசாங்கம் அந்த அறிவித்தல் விடுத்தால் என்ன செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைக்க மாட்டோம் என இலங்கை சொன்னால், தீர்மானத்தின் உண்மையான நிலைப்பாட்டை சிங்கள மக்களும் புரியும் விதமாக வெளிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுள்ளோம். இலங்கை தீர்மானத்தை முன்னெடுக்கும் 5 நாடுகளும் சேர்ந்து எழுத்து மூலமாக கூட்டறிக்கையை வெளியிடுவதாகச் சொல்லியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட நாடு பொறுப்பெடுத்த விடயங்களை செய்யாவிட்டால் அடுத்தது என்னவென்ற கேள்வியுள்ளது. புதிய அரசாங்கம் பிரேரணையுடன் ஒத்துழைக்க மாட்டோம் எனக் கூறியதால், மாற்று வழிகள் பற்றியும் பேசியுள்ளோம்.

முன்னாள் ஆணையாளர் இளவரசர் செய்ட் சில மாற்று வழிகளைப் பரிந்துரைத்துள்ளார். அதிலொன்றாக, உலகளாவிய நியாயாதிக்கத்தை உறுப்புநாடுகள் பிரயோகிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் அமெரிக்கா தற்போது சவேந்திர சில்வாவின் பயணத்தடை மூலம் செய்துள்ளது. அதை பின்பற்றி ஏனைய நாடுகளும் பலருக்கு தடை விதிக்குமென நம்புகிறோம் - என்றார்.

No comments