பொலிஸிடம் கைபேசியில் கொள்ளை?

யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரிடமிருந்து ஈ.சி.காஸ் மூலம் 25 ஆயிரம் ரூபாயை கும்பலொன்று மோசடி செய்துள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

யாழ் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபரொருவர், தன்னை யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் என அறிமுகம் செய்து, "அவரசமாக 25 ஆயிரம் ரூபாய் பணம் தேவை. நீங்கள் கடமையாற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்டேன்.

அப்போது அவர், நீங்கள்தான் தற்போது வீதி போக்குவரத்து கடமையில் உள்ளதாக கூறினார். அவசரமாக எனக்கு பணம் தேவையாக உள்ளதால் அருகில் எங்காவது ஈஸி காஸ் ஊடாக இந்த தொலைபேசி இலக்கத்திற்கு பணம் அனுப்புங்கள்" என கூறியுள்ளார்.

அதனை அடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு பணத்தினை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் பொலிஸ் நிலையம் சென்று பொறுப்பதிகாரியிடம் கூறிய போதுதான் ஏமாற்றப்பட்ட விடயம் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு தெரியவந்துள்ளது.

யாழில் அண்மை காலமாக ஈஸி காஸ் ஊடாக மோசடியாக பணம் பெற்று வரும் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன. அது தொடர்பாக பொலிஸாரிடம் கேட்ட போது, குறித்த மோசடி கும்பல்கள் பெருந்தொகை பணத்தினை மோசடி செய்வதனை தவிர்த்து 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மோசடி செய்கின்றனர். இவ்வாறான தொகைக்கு பெரும்பாலனவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

சிலர் முறைப்பாடுகள் செய்கின்றனர். அவர்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து சென்றால் குறித்த தொலைபேசி இலக்கங்கள் பதிவில்லாமல் இருக்கும். அல்லது சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களின் பெயர்களில் இருக்கும் அல்லது உயிரிழந்த நபர்களின் பெயர்களில் இருக்கும். அதனால் எமது விசாரணைகள் தடைப்பட்டு விடும். அதனால் மோசடி நபர்களை நெருங்குவதில் தடைகள் உண்டு. அதேவேளை இவர்கள் மோசடியாக பெறும் பணத்தின் தொகை சிறிதாக இருப்பதனாலும் விசாரணைகளில் சில சிக்கல்கள் உண்டு.

இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருந்தால் மாத்திரமே இவ்வாறான மோசடி கும்பல்களில் இருந்து தப்பிக்க முடியும். தெரியாத நபர்கள், புதிய தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்களை நம்பி அவர்களுக்கு பணம் செலுத்தாதீர்கள்.

இதேவேளை நேற்று (21) நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராம சேவகர் இருவரும் இதேமுறையில் 39 ரூபாய் வரையில் பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments